இல்லம் > கிரிக்கெட் > ஐ.பி.எல் 2013 – ஒரு முன்னோட்டம் – 1

ஐ.பி.எல் 2013 – ஒரு முன்னோட்டம் – 1

கிரிக்கெட்டில் சூதாட்டம் அதிகரித்துக் கொண்டே போகிறது என்ற குற்றச்சாட்டு ஒரு புறம் இருக்க, ஏறக்குறைய ஐபிஎல் போட்டி முறையே, ஒரு சூதாட்டத்தைப் போன்றுதான் காட்சியளிக்கிறது! சில வீரர்களை அதிக விலை கொடுத்து ஏலத்தில் எடுப்பது சரியான தேர்வா அல்லது ஒரு கேம்பிளா என்ற வார்த்தை சர்வ சாதாரணமாக புழங்குகின்றன!

எனக்கு சூதாட்டக் கிளப் என்றாலே ஞாபகத்திற்கு வருவது, சில பல பழைய தமிழ் படங்களும், ஜேம்ஸ் பாண்ட் படங்களும்தான்! அரைகுறை உடைகளுடன் பெண்கள், அவர்கள் நடனம், எளிதில் புழங்கும் மதுபானங்கள், கோடிக்கணக்கில் புரளும் பணம், நடத்துபவர்களின் பெரிய பின்புலம் என்று இரண்டிற்குமே சில பல ஒற்றுமைகள் இருக்கத்தான் செய்கின்றன!

IPL-2013-Schedule

2013ன் ஐபிஎல் சீசன் ஆரம்பிக்கப் போகிறது! ஐபிஎல்லின் வெற்றியைக் கண்ட பலரும் அதே போன்றதொரு தொடரை அவரவர் நாடுகளில் நடத்த ஆரம்பித்தாலும், ஐபிஎல்லுக்கு இருக்கும் மவுசு தனிதான்! அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக இந்தியா எப்பொழுது வல்லரசாகுமோ, ஆனால் கிரிக்கெட்டில் இந்தியா ஒரு பெரும் வல்லரசாகிவிட்டதன் இன்னொரு அடையாளம், ஐபிஎல்லின் தொடர் வெற்றி! இந்த சீஷனில் மட்டும்தான் காம்பீர் பெங்காலி ஆகின்றார், கோலி கன்னடராகிறார், சமயங்களில் வெளிநாட்டுக்காரர்கள் கூட உள்ளூர் தலைவர்களாகி விடுகின்றனர்!

நாட்டின் முக்கியத் தலைவர்கள், அமைச்ச்சர்கள் எல்லாம் பிசிசிஐயின் முக்கிய பதவியில் இருந்தாலும், அரசியலையும், விளையாட்டையும் ஒன்றாக பார்க்கக் கூடாது என்று சொல்லும் காமெடிகள் அரங்கேறும் சூழலில், உருப்படியாக, சென்னையில் நடைபெறும் போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்கேற்கக் கூடாது என்ற கருத்துக்கு தமிழகத்தில் பெருத்த வரவேற்பு!

வெற்றி பெற்றவர்களைப் பற்றி மட்டுமே அனைவரும் பேசும் சூழலில், போன தொடரில் கடைசி 4 இடங்களைப் பிடித்த அணிகளின் பங்கு இந்த முறை எப்படி இருக்கப் போகிறது?

புனே வாரியர்ஸ்

போன தொடரில் கடைசி இடம்! பல மாற்றங்கள் அணியில்! போன முறை தாதா காப்டன்! இந்த முறையோ, தாதா தாத்தாவாகிப் போனதை ஏற்றுக் கொண்டு ஆடவில்லை அல்லது ஆட விடவில்லை. அதைவிட பெரிய மாற்றம், போன முறை ட்ரீட்மெண்டில் இருந்த யுவராஜ், இந்த முறை அணிக்கு முக்கிய பலம்! ஓரளவு நல்ல வீரர்களைக் கொண்டிருந்தும், கடைசி இடம் பிடிக்க வேண்டிய அளவிற்கு அதன் ஆட்டம் இருந்தது பெரிய புதிர்! இந்தமுறை மாத்யூஸ் கேப்டன்! ஆச்சரியம் என்னவென்றால் போன முறை இவர் விளையாடியதும் குறைவான ஆட்டங்களே, தவிர பங்களிப்பும் சுமாரே!

க்ளார்க் இருந்திருந்தால் கேப்டனாகியிருப்பாரோ என்னமோ! ஆனால் இப்போதைக்கு மாத்யூஸ்தான் கேப்டன்! நல்லதொரு ஆல்ரவுண்டர் என்பதும் ப்ளஸ். மீதமுள்ள மூன்று வெளிநாட்டு ஆட்டக்காரர்கள் இடத்திற்கு, பல நல்ல வீரர்கள் உள்ளனர்! ராஸ் டெய்லர், சாமுவேல்ஸ், தமிம் இக்பால், ஸ்டீவன் ஸ்மித், லுக் ரைட், கேன் ரிச்சர்ட்சன், வேய்ன் பார்னல், மிட்சல் மார்ஸ், ஆரூன் ஃபின்ச், என ஒன்பது பேர் உள்ளனர். ஸ்மித்தின் சமீபத்திய ஃபார்ம் மற்றும் 20-20 போட்டியில் அனுபவம், சாமுவேல்சின் ஆல்ரவுண்ட் திறமை, தமிம் இக்பால் மற்றும் ராஸ் டெய்லரின் அதிரடி ஆட்டம் என ஏறக்குறைய பலரும் நல்ல வீரர்கள்!

உள்ளூர் ஆட்டக்காரர்களைப் பொறுத்தவரை, யுவராஜின் வரவு பெரிய பலம். இந்தியாவின் தற்போதைய நம்பிக்கை நட்சத்திரம் புவனேஷ் குமார் பந்துவீச்சுக்கு பலம். இன்னொரு இந்திய பந்து வீச்சாள்ரான திண்டாவும் பந்து வீச்சிற்கு பலம் சேர்க்கிறார்! சுழற்பந்துக்கு ராகுல் சர்மா! இதைத் தவிர தெரிந்த ஆட்கள் உத்தப்பா, மணீஷ் பாண்டே, அபிஷேக் நாயர், சமீப காலங்களில் புதிய கண்டுபிடிப்பாகக் கருதப்படும் ஆல்ரவுண்டர் ரசூல் எனப் பலர் உள்ளனர்! கண்டிப்பாக போன முறையை விட நன்கு பலமான அணியாகவே தோன்றுகிறது! மிக மிக மோசமான பங்களிப்புதான் போன்ற முறை என்ற சூழலில், இந்த முறை நல்லதொரு பங்களிப்பையும், போட்டியையும் ஏறபடுத்தும் அணியில் ஒன்றாக மாறலாம்!

டெக்கான் சார்ஜர்ஸ் (எ) சன்ரைசர்ஸ்

ஐபிஎல் சென்னையில் கூடாது என்பதை வரவேற்கும், ஈழத்திற்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுத்த மாறன் குடும்பத்திற்கு, அணி கைமாறிய பின்பு நடக்கும் முதல் போட்டி! எந்த இலங்கையை குற்றம் சாட்டுகிறோமோ, அந்த அணியின் முக்கிய வீரரான சங்ககராதான் காப்டன்      அணிக்கு இப்பொழுதும்! புதிய வரவுகளாக, டாரன் சாமி, நாதன் மெக்கல்லம், மெக்கே, பெரேரா ஆகியோர். சங்ககரா எல்லாப் போட்டிகளுக்கும் என்ற சூழலில், மீதமுள்ள இடங்களுக்கு, திஷாரா பெரேரா, சாமி, மெக்கல்லம், டும்னி, ஸ்டெயின், டி காக், மெக்கே, காமரூன் வொயிட், லின் என இங்கேயும் 9 பேர் போட்டி! சங்ககராவைத் தவிர்த்து மற்ற யாரும் தனிப்பட்ட முறையில் பெரிய ப்ளேயர்கள் இல்லை என்பது சாதகமா அல்லது பாதகமா என்பது தொடர் சொல்லிவிடும்!ஸ்டெயினின் பந்து வீச்சு அவருக்கு அதிக வாய்ப்பளிக்கும் சூழலில், மீதமுள்ள இடங்களுக்கு சாமி, பெரேரா, மெக்கல்லம், வொயிட், டும்னி இடையே கடும் போட்டியைக் கொடுக்கும்! மெக்கல்லமின் சமீபத்திய ஃபார்ம் அவருக்கு பலம்!

உள்ளூர் ஆட்களில், போன முறை அணி சில வெற்றிகளைப் பெறக் காரணமாயிருந்த தவான் பலம் என்றாலும், காயம் காரணமாக, ஆரம்பப் போட்டிகளில் அவர் விளையாட முடியாது!  ஸ்டெயினுடன், இஷாந்த் பந்து வீசுவது ஓரளவு பலம் சேர்க்கிறது! இது தவிர தெரிந்த முகங்கள் பர்தீவ் பட்டேல், அமித் மிஸ்ரா, சுதீப் தியாகி மட்டுமே! எப்படிப் பார்த்தாலும், அணி போன முறையைப் போன்றே வெளிநாட்டு வீர்ர்களை நம்பியே பெரிதும் இருக்கிறது! இன்னும் சொல்லப் போனால் டொமஸ்டிக் போட்டிகளில் கூட ஹைதராபாத் அணி என்பது சற்றே பலவீனமான அணியாகவே இருக்கிறது!

இருப்பினும், மிகச் சாமர்த்தியமான வியாபாரியின் கைகளுக்கு அணி சென்றிருக்கிறது! அணியை வாங்கியவர்கள் ஒன்றும் சாதாரணமானவர்களில்லை! எதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும், எதற்கு அமைதி காக்க வேண்டும் என்ற வித்தையை கைவரக் கற்றவர்கள்! ஈழத்திற்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுத்துக் கொண்டே, அணிக்கு இலங்கை வீரரை கேப்டனாக நீடிக்க வைத்திருப்பவர்கள். நித்தியானந்தா விவகாரத்தை பெரிது படுத்திவிட்டு, தன்னுடைய செய்தி ஆடிட்டரின் செய்தியினை வெளியேயே கொணராமல், பாதிக்கப்பட்ட பெண்ணை நீக்கியவர்கள்! இவை எல்லாவற்றையும் விட மொக்கைத் திரைப்படமான மாசிலாமணியையே அகில உலக வெற்றிப் படமாக காட்டியவர்கள்! அவர்களுடைய ஆளுமைக்கு கீழுள்ள அணியில் எதுவும் சாத்தியமே!

கட்டுரை அதீதம் இணையத்தளத்தில் வெளிவந்துள்ளது: http://www.atheetham.com/?p=4440

தொடரும்…

பிரிவுகள்:கிரிக்கெட் குறிச்சொற்கள்:
  1. இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை
  1. 10:23 முப இல் ஏப்ரல் 3, 2013

பின்னூட்டமொன்றை இடுக