தொகுப்பு

Archive for ஜூன், 2009

இவனுங்க காமெடி தாங்க முடியலடா சாமி!!!!

இடம்: சத்தியமூர்த்திபவன் வாசல்

ஏங்க, சட்டசபையை ஏதாவது சத்தியமூர்த்திபவனுக்கு மாத்தீட்டாங்களா???

ஏன் கேக்கறீங்க?

இல்லை ஒரே அமளியா இருக்கே, அதான் கேட்டேன்……அதுக்கு ஏன் சார் இப்டி முறைக்கறீங்க?

யோவ், ஏதாவது ஜெயில்ல வருஷக்கணக்கா இருந்துட்டு இப்பதான் ரிலீஸாகி வந்துருக்கீயா?

அய்யோ! எப்டிங்க கண்டுபிடிச்சீங்க?

ம்ம்ம், இப்டி பொது அறிவே இல்லாம இருக்கீயே, அதை வெச்சுதான்!!!. இப்பல்லாம் கட்சி ஆஃபிஸ்ல ஜெயிலுக்கு போயிட்டு வந்தவங்க, ஜெயிலுக்குப் போக வேண்டியவங்கதான்யா இருக்காங்க, அதான் கேட்டேன்….. முறைக்காதய்யா, நான் விளையாட்டுக்குச் சொன்னேன், ஏன் சத்தியமூர்த்திபவன்ல ஒரு அமளியுமே இல்லைன்னு கேட்டா ஒரு அர்த்தம் இருக்கு, நீ என்னான்னா ஏன் ஒரே அமளியா இருக்குனு புதுசா கேக்கறீயே!!! இங்க சண்டை நடக்கறது புதுசா என்ன???

என்ன சார் சொல்றீங்க, சட்டசபைலதான் இப்டி கண்டபடி சண்டை போட்டுக்குவாங்க, அதனாலதான் சட்டசபையை மாத்திட்டாங்களான்னு கேட்டேன், நீங்க என்னான்னா இப்டி சொல்றீங்க…

யோவ், நீ நினைக்கிற மாதிரில்லாம், சட்டசபை முன்னைமாதிரி இல்லை……இப்பல்லாம் சட்டசபையே அதிகமா கூடுறது இல்லை, அப்டியே கூடுனாலும் முக்கியமான பிரச்சனையைப் பத்தியெல்லாம் பேசறது இல்லை, தப்பித்தவறி அதையும் பேசிட்டாங்கனு வையுங்க, கொஞ்ச நேரத்துலியே எதிர்கட்சில்லாம் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி வெளிநடப்பு செஞ்சுருவாங்க, அதுனால இந்த அடிச்சுக்க வேண்டிய வேலை இருக்காது….

என்னங்க இப்டி சொல்லிபுட்டீங்க, நாட்ல இப்ப ஏகப்பட்ட பிரச்சனை இருக்கு, அதுக்காக விவாதம் பண்றப்ப கூட சண்டை வராதா?

எந்த மாதிரி பிரச்சனையைச் சொல்ற???

ம்ம்ம்ம்ம், இந்த கச்சத்தீவு பிரச்சனை மாதிரின்னு வெச்சுக்குங்களேன்…

சே சே, இந்த மாதிரி அல்ப பிரச்சனைன்னா வெறும் அறிக்கை மட்டும்தான் விட்டுக்குவாங்க….ஒருவேளை கலைஞரை அதிமுககாரங்க திட்டிட்டாலோ, இல்லை ஜெயலலிதாவை திமுககாரங்க திட்டிட்டாலோ, வடக்குப்பட்டி ராமசாமி மாதிரி யாராவது சோனியாகாந்தியை திட்டிட்டாலோதான் சண்டை போட்டுக்குவாங்க, ரோட்லல்லாம் வந்து கூட போரட்டம் பண்ணுவாங்க…

ஓ, அப்புடியா…, பக்கமா ஏதாவது ரோட்ல வந்து போராட்டம் பண்ணாங்களா???

ஓ, இதே காங்கிரசுகாரங்க பண்ணாங்களே!!!

எதுக்குங்க?

அதுவா, இந்த ராகுல்காந்தி பிறந்தாநாளுக்கு, மவுண்ட்ரோடுல இருந்த பேனரை தூக்கினாங்களே அதுக்கு பெரிய ஆர்ப்பாட்டம் பண்ணாங்களே, தெரியாதா???

ஓஹோ, ஏங்க கேக்கறேன்னு கோவிச்சுக்காதீங்க, மவுண்ட்ரோடுல யாருமே பேனர் வைக்கக் கூடாதுன்னு ஏதோ அறிவிப்பு இருக்குன்னு கேள்விப்பட்டேன், அப்டி இருக்கறப்ப இவங்க எதுக்கு பேனர் வெச்சாங்க, தப்பி வெச்சாலும் தூக்கறதுதானே நியாயம்!!!

யோவ், இந்த சட்டம்லாம் மனுஷங்களுக்குதான்!!

என்னாது?

இல்லைப்பா சாதாரண மனுஷங்களுக்குதான்னு சொல்ல வந்தேன்…

சரி, இப்ப எதுக்கு உள்ளாற இந்த மாதிரி அடிச்சுக்குறாங்கன்னு தெரியலியே?

தெரியலீயே, இரு யாராவது வெளிய வந்தா கேக்கலாம்

…………………………..அங்க பாருங்க உள்ளருந்து ஒரு தலைவரு வராரு!!!

தலைவா வணக்கம்….வணக்கம் தலீவா

ஆங், வணக்கம், வணக்கம்…

என்ன தலைவா, உள்ளே ஒரே அடிதடியா இருந்துதே என்னாச்சு?

டேய் உண்மையிலியே நீங்கள்லாம் காங்கிரசு தொண்டங்கதானா?

ஏன் தலைவா இப்புடி கேக்கறீங்க?

பின்னே காரணத்துக்காகத்தான் நாங்கள்லாம் முன்ன அடிச்சுகிட்டமா? இப்ப மட்டும் என்னமோ பெருசா காரணம் கேக்குறீங்க???

இல்ல தலீவா, எதோ ஒரு காண்டை மனசுல வெச்சுகிட்டு அடிச்சுகிட்டாலும், வெளில பத்திரிக்கைல சொல்றதுக்காக ஏதாவது ஒரு காரணத்தை சொல்லுவோமல, அதைக் கேட்டேன்…

ஓ அதுவா, முதல்ல இந்த கக்கன் பிறந்த நாளைக்கு ஏன் நிறைய பேரு போலைன்னு சண்டை போட்டுகிட்டோம்…..

ஆமா தலைவா, பக்கமா நம்ம கட்சியோட ஒரு பெரிய புள்ளி அம்மாவோட பிறந்த நாளைக்கு கூட ஒரு எம்எல்ஏ அன்னதானம் அது இதுன்னு அமர்க்களப்படுத்துனாங்க, ஆனா கக்கன் விஷயத்துல சொதப்பிட்டாங்களே… தலைவா, சரி என்ன முடிவு எடுத்தீங்க தலைவா, இந்த பிறந்த நாள் விஷயத்துல?

அதுவா, முதல்ல கக்கன், காமராஜர்லாம் யாருன்னு நம்ம கட்சி தலைவர்கள் எல்லாத்துக்கும் விளக்கவுரை கொடுத்து படிச்சி தெரிஞ்சிக்கச் சொன்னோம், அடுத்த வருஷத்துல இருந்து அவங்களோட பிறந்தநாளை எல்லாம் மிகச் சிறப்பா கொண்டாடுண மாதிரி பேப்பர்ல நியூஸ் வர்றதுக்கு ஏற்பாடுகளை பண்ணனும்னு தீர்மானம் போட்டிருக்கோம், இன்னும் முடிவு பண்ணனும்….

அப்ப அதுக்கு கூட இன்னும் முடிவு பண்ணுலியா தலீவா?

யோவ், இப்பதானே கூட்டமே முடிஞ்சிருக்கு, தீர்மானம் இனிமேதான் டெல்லிக்கு போயி சோனியா அம்மாகிட்ட ஒப்புதல் வாங்கிட்டு வரணும், அதுக்கப்புறம்தான் எல்லாம்..

ஓ ஓ, சரி அதுக்கப்புறம் ஏதோ ரொம்பப் பெரிய கலாட்டாவ இருந்துச்சே அது என்ன தலீவா???

ஓ அதுவா!!! அது மிகப் பெரிய பிரச்சனையாச்சே!!!

அப்டி என்ன தலீவா பிரச்சனை???

டேய், இப்ப நம்ம தலைவர் ராகுல்காந்தி பிறந்த நாள் வந்துது இல்லியா, அப்ப அவரு 2011ல காங்கிரசுதான் தமிழ்நாட்டுல ஆட்சியைப் பிடிக்கணும், அதுக்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள்ல ஈடுபடுங்கன்னு சொன்னதா ஒரு பேச்சு வந்துச்சு!!!

அப்டியா, உண்மையிலியே சொன்னாரா தலீவா?

அதெல்லாம் தெரியாது, அப்டி சொன்னாருன்னு ஒரு பேச்சு அவ்வளவுதான்…

சரி…

இல்ல பேச்சு வந்ததில்லியா, அப்டி 2011 ல காங்கிரசு ஆட்சியைப் புடிச்சா, யாரு முதலமைச்சரு, யாரு யாருக்கு எந்த துறைன்னுதான் சண்டை…….ஏண்டா மூஞ்சை, மூஞ்சை பாத்துக்கறீங்க? ஒவ்வொரு க்ரூப்பும், அவங்கதான் முதலமைச்சரு, அவங்க சொல்ற ஆளுக்குதான் முக்கிய மந்திரி பதவின்னு அடிச்சுகிட்டாங்க, அதான் ஒரே அடிதடி…

சூப்பரு தலீவா, கடைசியா முடிவு என்னாச்சி தலீவா???

எல்லா க்ரூப்பும் நாளைக்கே டெல்லிக்கு போயி சோனியாம்மாவை சந்திச்சு, இவங்க இவங்களுக்குதான் பதவில இருக்கணும்னு வேண்டுகோள் வைக்கப் போறாங்க…….டேய், டேய், இவன் ஏண்டா ஓடுறான்???

தெரியலியே தலீவா, இப்பதான் ஜெயில்ல இருந்து வந்தேன்னான்!!! ைருங்க புடிச்சிட்டு வந்துடறேன்………யோவ், எதுக்குய்யா ஓடுற? நில்ல்லுய்யா!!!……………………..யோவ் எவ்ளோ தூரம் தொரத்திட்டு வர்றது, எதுக்குய்யா இப்டி ஓடுற???

தெய்வமே, சாமி சாமியா இருப்பீங்க….நான் திருப்பி ஜெயில்லுக்கே கூட போயிடுறேன்…இந்தக் கொடுமையெல்லாம் பாக்க என்னால முடியாது, என்னை விட்டுருங்கய்யா….

யோவ், பதறாதய்யா, நான் என்ன உன்னை புடிக்கவா உன்னை தொரத்துனேன், அந்தாளு சொன்னதைக் கேட்டுட்டு, நானே உன்னை புடிக்குற சாக்குல பிச்சுகிட்டு வந்திருக்கேன்…….இங்க பாரு திருப்பி ஜெயிலுக்கே போகணும்னு அவசரப்பட்டு முடிவெடுத்துடாத, மனுஷனுக்கு நம்பிக்கைதான் வாழ்க்கை, என்ன, கம்முனு வீட்டுக்கு போ………………….

இது ஆண்களின் உலகம்….

முன்குறிப்பு: இது சீரியஸா இல்லை மொக்கையா என்று சத்தியமாக எனக்குத் தெரியவில்லை. மொக்கையாக எழுத ஆரம்பித்து நடுவில் ஒரு புண்ணியவான் உண்மையத்தாண்டா சொல்ற? இதை ஏன் மொக்கைன்னு சொல்றன்னு கேள்வி கேட்டதாலேயே என்னுள் ஒரு தடுமாற்றம்! ஆகையால் முடிவை உங்களிடமே விட்டு விடுகிறேன்….

இந்த பதிவு, இதையும் யாராவது ஒருவர் பதிவு செய்ய வேண்டும் என்ற நோக்கிலேயே எழுதப்பட்டது. இது பெண்கள் புரிந்து கொள்ளவேண்டுமென்பதற்காக மட்டுமே…

எங்களைப் பற்றி நாங்களே சொல்லுகிறோம்….எங்களையும் புரிந்து கொள்ளங்கள்!!!!

நாங்கள் ஆண்கள்……

நாங்கள், பெண்களின் உலகத்தை புரிந்து கொள்வதிலேயே வாழ்வின் பெரும்பகுதியை செலவிட்டவர்கள். பல சமயங்களில் அவர்களின் புரிந்துணர்வையும், அணுகுமுறையையும் தெரிந்து கொள்வதற்குள் பல விஜய் படங்கள், சிம்பு படங்கள், விஷால் படங்களை ஒன்றாகப் பார்த்த அனுபவத்தைப் பெறுகின்றோம். பல சமயங்களில் அவர்களை புரிந்து கொள்ளும் அவசரத்திலும், அவசியத்திலும் எங்களைப் பற்றியே நாங்கள் அறிந்துகொள்ளாமல் போய் விடுகிறோம்….

  • உங்கள் மனதில் இருப்பதை எல்லா ஆண்களாலும் அப்படியே புரிந்து கொள்ள முடியாது! நீங்களாகச் சொல்லும் வரை…
  • நாங்கள் என்ன ஆச்சு என்று கேட்டு, நீங்கள் ஒன்றுமில்லை என்று சொன்னால், நாங்கள் ஒன்றுமில்லை என்றுதான் நினைப்போம்…
  • நீங்கள் குண்டாக இருப்பது போன்று நீங்கள் கருதினால் ஒருவேளை அது உண்மையாகவே இருக்கலாம், திருப்பி, திருப்பி எங்களிடம் கேட்காதீர்கள்…
  • கல்யாணத்திற்கப்புறம் நாங்களும் பல விஷயங்களை இழக்கிறோம்
  • ஒரு பிரச்சனையை தீர்க்கும் எண்ணம் இருந்தால் மட்டுமே எங்களிடம் வாருங்கள்
  • உங்களுக்கு தலைவலி நீண்ட நாட்களுக்கு இருந்தால் டாக்டரைப் போய் பாருங்கள், கணவனையோ, பாய்ஃபிரண்டையோ குறை சொல்லாதீர்கள்
  • பெரும்பான்மையான கேள்விகளுக்கு ஆம் அல்லது இல்லை என்று பதிலளித்தாலே சந்தோஷமாக இருக்கும்
  • ஒரு விஷயம் இரு விதங்களில் புரிந்துக் கொள்ளப்படலாம் எனில், அதில் ஒரு விதம் உங்களை கோபமோ, சோகமோ படுத்துகிறது எனில், கண்டிப்பாக நாங்கள் இன்னொரு விதத்தில்தான் சொல்லியிருப்போம்
  • நாங்கள், 6 மாதத்திற்கு முன்பு சொன்ன எந்த ஒரு விஷயமும், வார்த்தைகளும் விவாதத்தின் போது ஒத்துக்கொள்ளப் பட மாட்டாது!!! உண்மையில் எங்களது எல்லா கருத்துக்களுமே ஒரு வாரத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும் (கடையில் வரும் ஆஃபர் போன்று!!!)
  • ஒன்று ஒரு விஷயத்தை எப்படி செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் அல்லது நாங்கள் செய்த விதத்தை ஒத்துக் கொள்ளுங்கள்… மிக நல்லது என்னவென்றால், உங்களால் அந்த விஷயத்தை மிகச் சிறப்பாக செய்ய முடியும் என்றால் தயவு செய்து நீங்களே செய்து விடுங்கள்….
  • அழுகை என்பது பெரும்பாலும் ப்ளாக்மெயிலே…
  • கிரிக்கெட் மேட்சுகளின் போது ஏதாவது சொல்ல வேண்டுமென்றால், விளம்பர இடைவேளையின் போது தாராளமாக சொல்லுங்கள்… ஆஃப்டர் ஆல் ஒரு ஓவருக்கு ஆறு பந்துகள்தான்…
  • பெண்களுக்கென்றே இருக்கும் பிரத்யோகமான சில விஷயங்களை நாங்கள் விரும்பி கேட்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், ஆண்களுக்கென்ற பிரத்யோகமான விஷயங்களை நீங்களும் விரும்பிக் கேளுங்கள்…
  • அவசரமாக ஒரு இடத்திற்கு போக வேண்டும் எனில், நீங்கள் எதை அணிந்து வந்தாலும் நன்றாகவே இருக்கும்,சத்தியமாக…… நீங்கள் ரொம்ப மெனக்கெட வேண்டாம்
  • ஒரு விஷயம் வேண்டுமென்றால் நேரடியாகச் கேளுங்கள்….நுண்ணிய, மறைமுக, ஏன் நேரடி குறிப்புகளைக் கூட சில சமயம் நாங்கள் புரிந்து கொள்ளாமல் போகலாம்
  • நீண்ட நாட்களுக்குப் பிறகு நீங்கள் உங்கள் தோழிகளை சந்திப்பதால், உங்களுக்குள் ப்ரைவசி வேண்டும் என்பதற்காகவே நாங்கள் உங்களுடன் வர மறுக்கிறோம்…
  • காதலிக்கும் போது உங்களுக்காக அதிகம் செலவு செய்கிறோம் என்பதற்காக நாங்கள் பணம் படைத்தவர்கள் என்று நீங்கள் நினைத்துக் கொண்டால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல….. அப்போது எங்களுக்கு பணம் ஒரு பொருட்டாகத் தெரியாது!
  • கல்யாணமான முதல் ஒரு வருடத்தைப் போன்றே வாழ்நாள் முழுக்க இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள்…..பிறந்த குழந்தையை எல்லாரும் கொஞ்ச மட்டுமே செய்வார்கள். நாட்கள் ஆக ஆக மட்டுமே, திட்டுவார்கள், சண்டை போடுவார்கள், கேள்வி கேட்பார்கள், முக்கியமாக, ஏதாவது வேண்டுமென்று கேட்டால் அது தேவையா என்று யோசிப்பார்கள்…
  • மாமியாருக்கும், மருமகளுக்குமிடையே சண்டை என்றால், அதை கணவனைத் தீர்த்து வைக்கச் சொல்லாதீர்கள். தீர்ப்புகள் ஒருவருக்கு சார்ந்தும், இன்னொருவருக்கும் எதிராகவும் மட்டுமே இருக்கும்….
  • பரிசாக நாங்கள் தரும் புடவையோ, பொருளோ  சுமாராகவோ, விலை குறைந்ததாகவோ இருந்தால், எங்கள் அன்பு குறைவானது என்று அர்த்தம் அல்ல
  • சில சமயங்களில் உங்களது செய்கைகளையோ, பேச்சுகளையோ புரிந்து கொள்ள முடியாததற்கு காரணம் அவை உண்மையிலேயே புரிந்து கொள்ள முடியாததாக இருக்கலாம்

பி.கு:

வேற யாராவது ஏதாவது சேத்த விரும்பறீங்களா???

அப்படியே இது சீரியஸா இல்லை மொக்கையான்னும் சொல்லுங்க…..

பிரிவுகள்:சீரியஸ், மொக்கை குறிச்சொற்கள்:, ,

தோரணை – ஒரு சிறிய திரைப்பார்வை

மச்சான் படத்துக்கு போனியே, எப்டிடா இருந்துது?……………. டேய், அதுக்கு ஏண்டா இப்புடி மொறைக்கிற?

ஓடியே போயிடு, நான் எங்க படத்துக்கு போனேன்???

இல்லடா, தோரணை போனியே அதான் கேட்டேன்

அது தோரணை இல்லைடா, ரோதணை…

டேய் விளையாடாம சொல்லுடா!!!

சத்தியமாதாண்டா சொல்றேன், அதெல்லாம் படம் இல்லை, பாடம்!!!

அவ்ளோ மோசமாவா இருந்துது???

தெரியலைடா, நான்தான் இண்டெர்வல்லியே வந்துட்டேனே …

ஏண்டா?

இல்லை!, முன்னமே வந்திருப்பேன், பைக்கை 4 வது ரோவுல, செண்டர்ல வுட்டுட்டேன், எடுக்க முடியலை, அதான் முன்னாடியே வர முடியலை!

அப்புறம், இண்டர்வல்ல மட்டும் எப்டி எடுத்த?

அதான் எல்லாருமே வண்டியை எடுத்துட்டு வூட்டுக்குப் போயிட்டாங்கள்ல, அதுக்கப்புறம் என் வண்டியை எடுக்க முடியாதா???

பி.கு.

முன்னனாச்சும் பரவாயில்லை, இந்த ஹீரோயினுங்க மட்டும்தான் ட்ரெஸ்ஸை போட்டுட்டு வரணும்னா ரொம்ப வெக்கப்படுவாங்க, இப்ப இந்த சிக்ஸ் பேக்னு ஒன்னு வந்ததுல இருந்து இந்த கதாநாயகர்கள் கூட ஆவூண்ணா சட்டையை கழட்டி உடம்பை காமிச்சிர்ரானுங்க….

இதுல ஆனா ஊனான்னா பஞ்ச் டயலாக் பேசிடுறாங்க… பிச்சைக்காரங்ககிட்ட ரெண்டு ரூவா கொடுத்தா கூட மவராசனா இருப்பான்னு ஆசீர்வாதம் பண்னுவாங்க, இங்க என்னான்னா நான் காசு கொடுத்து, அவனுக்கு அவனே பில்டப் கொடுத்துக்கறதை பாக்க வேண்டியதாயிருக்கு….நாட்டுல இந்த கதாநாயகர்கள் தொந்தரவு தாங்க முடியலைப்பா!!!

பிரிவுகள்:சினிமா குறிச்சொற்கள்: