தொகுப்பு

Archive for ஒக்ரோபர், 2008

வார்த்தைகள் (A promise is a promise) – part 1

வார்த்தைகள் தொடர்ச்சி…

ஒரு சிலருடைய வார்த்தைகள் எனக்குள்ளோ () இந்த சமூகத்திலோ ஏற்படுத்திய உணர்வுகள், பிரமிப்புகளைத்தான் நான் இந்த பதிவின் மூலம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

 

 

வார்த்தைகள் (A promise is a promise) – part 1

2003 ஆம் வருடம் அப்போதுதான் ஆரம்பமாகி இருந்தது. மும்பையிலிருந்த விக்டோரியன் சாண்ட்ஸ்டோன் கட்டிடத்தில் உள்ள பெரிய கான்ஃபரன்ஸ் ரூமில் அந்த ஐந்து பேரும் குழுமியிருந்தனர். உலகளவில் பலரது கவனத்தை ஈர்த்த, பலராலும் பேசப்பட்ட ஒரு நிகழ்ச்சிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்ட அந்த சந்திப்பில் கலந்து கொள்வதற்காக புனேயிலிருந்து வந்திருந்தனர்.

 

ஒரு நாள் முன்பாகத்தான் அந்த அழைப்பு அவர்களுக்கு கிடைத்திருந்தது. அந்த அழைப்பு வந்திருந்தது வேறு யாரிடத்திலிருந்துமல்ல, அந்நிறுவனத்தின் தலைவரிடமிருந்துதான் (யாருடைய வார்த்தைகள் நிறைவேற வாய்ப்பில்லை என்று உலகால் கருதப்பட்டதோ! அவரிடமிருந்துதான்). அந்த நிறுவனத்தின் தலைவர் ரத்தன் டாட்டா!!

 

அந்த சந்திப்பிற்கு சில நாட்கள் முன்புதான் ஜெனீவாவில் நடந்த ஆட்டோ ஷோவில் அவர் 1 லட்ச ரூபாயில் கார் உருவாக்குவது பற்றி பேசியிருந்தார். ஆரம்பத்தில், குறைந்த விலையில் கார் என்ற எண்ணம் உருவான போது விலை எதுவும் நிர்ணயமாகியிருக்க வில்லை. ஆனால் ஊடகங்கள் அதனுடைய விலையை 1 லட்சம் என்று நிர்ணயித்து விட்டன.

 

முடியுமோ, முடியாதோ, அவர்கள் அந்த சவாலை ஏற்றனர். எந்த வார்த்தைகளுக்காக, ஆட்டோமொபைல் என்ஜினியரிங்கிலுள்ள விதிகள் மாற்றி எழுதப் பட வேண்டியிருந்ததோ, அந்த வார்த்தைகளுக்காகவே அந்த சவாலை அவர்கள் ஏற்றனர். ஸ்டீலின் விலை தொடர்ச்சியாக ஏறுமுகத்தில் இருக்கும் நிலையிலும் அந்த சவாலை அவர்கள் ஏற்றனர்.

 

இந்த சந்திப்பிற்கு அவர்கள் வந்தபோது, அவர்களுக்கு தெரிந்திருந்ததெல்லாம் இந்த சந்திப்பு கண்டிப்பாக டாட்டா தெரிவித்திருந்த குறைந்த விலை காருடன் தொடர்புடையதாக இருக்ககூடும் என்பதுதான்! ஆனால் அவர்களுக்கு தெரியாத ஒன்று இருந்தது, அது அவர்களுடைய அடுத்த நான்கு வருடங்கள் பல்வேறு தோல்விகளையும், முடிவில் தலைக்கணம் தரக்கூடிய வெற்றியையும் கொண்டிருக்கப் போகிறது என்பதுதான். இதில் கடினமான விஷயம் என்னவென்றால் இந்த விஷயங்கள் யாவற்றையும் யாரிடமும், ஏன் தங்கள் துணையிடம் கூட பரிமாறிக் கொள்ள முடியாது என்பதுதான்!

 

அந்த சந்திப்பில், 60 ஸ்லைடுகள் கொண்ட பிரசண்டேசன் மூலம் அவர்கள் விவாதிதது எல்லாம், அப்போது நடைமுறையிலிருந்த அனைத்து வகை குறைந்த விலை போக்குவரத்து முறையைத்தான் (Low cost models of personal transport). இவற்றில் மோட்டார் பைக், ஸ்கூட்டர், ஆட்டோ ரிகஷா மற்றும் அவர்களுடைய சொந்த படைப்பான இண்டிகா கார் அனைத்துமே அடங்கியிருந்தன.

 

தாங்கள் என்ன செய்ய வேண்டுமென்று திட்டவட்டமாக அப்போது அவர்களுக்கு தெரிந்திருக்க வில்லை. தவிர டாட்டாவின் மனதில் என்ன இருக்கிறது என்பதையும் அறிந்து கொள்ள விரும்பினர். ரத்தன் டாட்டா அவரது கனவை உற்சாகத்துடன் பகிர்ந்து கொண்டார். அவர் உருவாக்க நினைத்ததெல்லாம், உலகின் மிக குறைந்த விலையில் ஒரு கார், எதனுடைய விலை  மோட்டார் பைக்கின் விலையை விட சற்றே அதிகமாக இருக்க கூடியதும், எதனுடைய அறிமுகம் ஆட்டோ மொபைல் இண்டஸ்ட்ரியில் ஒரு பெரிய புரட்சியை ஏற்படுத்தக் கூடியதோ, அத்தகைய காரைத்தான் அவர்  உருவாக்க விரும்பினார்.

 

அத்தோடு நிற்கவில்லை அவர், அந்த காரை உருவாக்கப் போகும் குழுவில் ஒருவராகவும் மாறினார். அவர் கூறிய மற்றொரு வாக்கியம்இது போன்ற காரை இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் மட்டுமே உருவாக்க முடியும்என்பதுதான்.

 

ஊட்டச்சத்து மாத்திரைகளை விட, ஊக்கம் தரக்கூடிய வார்த்தைகளுக்கு சக்தி அதிகம்தான். ஏனெனில் அந்த சந்திப்பு முடிந்த போது, அவர்கள் அனைவரும் இந்தியாவின் மிகச் சிறந்த தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு மனிதனால் ஒரு சரித்திரத்தை படைப்பதற்காக தூண்டப்பட்டிருந்தனர்.

 

அடுத்த ஒன்றரை வருடங்களில், அந்த திட்டம் மிகப் பெரிய வளர்ச்சி எதையும் கண்டிருக்க வில்லை. எந்த மாதிரி காரை தாங்கள் உருவாக்கப் போகிறோம் என்பதைக் கூட அவர்களால் நிர்ணயிக்க முடியவில்லை. பாதுகாப்புக்காக  பிளாஸ்டிக் () கேன்வாஸ் ஷீட் கொண்ட ஒரு திறந்த வகை கார் அமைப்பைக் கூட அவர்கள் யோசித்து வைத்திருந்தனர். அவர்களுடைய பிரச்சனை என்னவென்றால், காரை அவர்கள் வடிவமைக்கும் போதெல்லாம் அவர்கள் மனதில் மோட்டார் பைக்கின் வடிவமே மேலோங்கியிருந்தது.

 

இதில் மிகப் பெரிய சவால் என்னவென்றால், இந்த ப்ராஜக்ட் ஆரம்பமாகும் போது அவர்களிடம் எந்தவொரு மாதிரித் திட்டமோ (மாடல் பிளானோ), பெஞ்ச்மார்க்கோ கிடையாது என்பதுதான். ஏன், ரத்தன் டாட்டாவின் மனதில் இருந்தது கூட 4 பேர் கொண்ட குடும்பம் ஸ்கூட்டர் ஓட்டிச் செல்வது போன்ற ஒரு நினைவலையும், தெளிவில்லாத ஒரு கனவும்தான்.

 

இத்தகைய பின்புலம் கொண்ட ஒரு திட்டம் எப்படி மெய்பட்டது? என்னென்ன விதமான பிரச்சனைகளை அவர்கள் சந்தித்தனர்? 2001 ல் ஏறக்குறைய 500 கோடி நட்டத்தை சந்தித்திருந்த ஒரு நிறுவனத்தால் இது எப்படி சாத்தியப்பட்டது? இன்னும் பல ஆக்கப்பூர்வமான தகவல்களோடு மீண்டும் சந்திப்போம் (பாகம் – 2 ல்)!!!

பிரிவுகள்:சாதனை குறிச்சொற்கள்:, ,

வார்த்தைகள்…..

வார்த்தைகளுக்கு இருக்கக் கூடிய சக்தி மிகப் பெரியதுதான். ஆறுதல் தரும் வார்த்தைகளாகட்டும், கோபத்தில் திட்டும் வார்த்தைகளாகட்டும், காதலில் கொஞ்சும் வார்த்தைகளாகட்டும், ஊக்கம் தரும் வார்த்தைகளாகட்டும் ஒரு சில வார்த்தைகள் நம்முள்ளோ () இந்த சமூகத்திலோ ஏற்படுத்தும் மாற்றங்கள் பிரமிக்க வைக்க கூடியவை.

2003 ஆம் வருடத்தில் நான் படித்த () அறிந்த இருவருடைய வார்த்தைகள் என்னை மிகவும் யோசிக்க வைத்தவை. என்னுள் சில மாற்றங்களை ஏற்படுத்தியவை. ஓரளவு என்னை ஊக்கமூட்டியவை என்று சொல்லலாம்.

உண்மையில் அந்த வார்த்தைகள் ஒன்றும் அவ்வளவு பிரபலமான வார்த்தைகள் அல்ல. அது ஒன்றும் பலரது கவனத்தையும் ஈர்த்திருக்க வில்லை. ஆனால் என்னைப் பொறுத்த வரை அந்த வார்த்தைகள் ஏற்படுத்திய விளைவுகள் சாதாரணமானதன்று.

முதல் நிகழ்ச்சிக்கு சொந்தக்காரர் முன்னாள் உலக அழகியும், பாலிவுட்டில் தற்போதைய முண்ணனி நடிகையும், அந்த காலகட்டத்தில் அப்போதுதான் பாலிவுட்டில் கால் பதித்திருந்த நடிகையுமான பிரியங்கா சோப்ரா.

என்ன காரணத்திலோ எனக்கு நடிகைகள் எல்லாம் முட்டாள்கள் என்ற எண்ணம் எனக்கு இருந்து வந்தது. இது காலங் காலமாக சினிமாவில் அவ்ர்கள் சித்தரிக்கப்பட்ட விதம் காரணமாக இருக்கலாம் () தொலைகாட்சியில் அவர்கள் கொடுக்கும் பேட்டி காரணமாக இருக்கலாம் (எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து எந்த ஒரு நடிகையின் பேட்டியை விரும்பியோ, காத்திருந்தோ பார்த்தது கிடையாது. அந்தளவு உப்பு சப்பில்லாமல் இருக்கும்).

வருடா வருடம் எகனாமிக்ஸ் டைம்ஸ் பத்திரிக்கை நடத்தும் அவார்டு ஃபார் கார்பரேட் எக்ஸலன்ஸ் (Award for Corporate Excelence)’ என்ற விழாவில் கலந்து கொண்டு பேச பிரியங்கா சோப்ராவிற்கும் அழைப்பு வந்திருந்தது என்று கேள்விப்பட்டவுடன் என்னுள் எழுந்த கேள்வி கார்பரேட் எக்ஸலன்ஸ் அவார்டு ஃபங்சனுக்கும் ஒரு நடிகைக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்?

தவிர இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் நடிகைகளின் புத்திசாலித்தனமோ () புரட்சிகர சிந்தனையோ பெரும்பாலும் அவர்களது ஆடைகளிலும், நகைகளிலும், இதர ஃபாஷன் சமாச்சாரங்களிலும் மட்டுமே வெளிப்படும். மேலும் இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு அவர்கள் அழைக்கப் படுவதே நிகழ்ச்சி சற்று கலர்ஃபுல்லாக இருக்க வேண்டும் என்பதற்காகவே போல் இருக்கும். அவர்களும் அதை செவ்வனே நிறைவேற்றவும் செய்வார்கள். பிரியங்கா சோப்ராவின் அழைப்பிற்கு பின்னும் வேறு காரணங்கள் இருந்திருக்க முடியாது.

ஆனால் பிரியங்கா சோப்ரா பேசிய பேச்சு எனது எண்ணத்தை மாற்றச் செய்தது.

 

அவருடைய பேச்சின் சாரம்சம்,

 

இன்று, இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக சீக்கிரம் எனது படப்பிடிப்பை முடித்துக் கொள்ளுமாறு தயாரிப்பாளரிடம் சொன்ன போது அவர் என்ன விசேஷம் என்று கேட்டார், அப்போதுதான் நான் இந்த விழாவைப் பற்றி சொன்னேன். அவர் சிரித்துக் கொண்டே கேட்டார், உனக்கும் இந்த விழாவிற்கும் என்ன சம்பந்தம்? இல்லை உனக்கும் இந்திய பொருளாதாரத்திற்கும்தான் என்ன சம்பந்தம்?. எனக்கு தெரிந்த ஒரே சம்பந்தம் உன்னுடைய பேரும் P.C., இந்த விழாவை தலைமை தாங்குறவரும் P.C. (.சிதம்பரம்). மற்றபடி வேறு ஒரு சம்பந்தமும் இல்லை என்றார்.

உண்மைதான், நாங்கள் எல்லாம் சினிமாக் கலைஞர்கள். எங்களுக்கும் கலைக்கும் சம்பந்தம் இருக்கலாம். ஆனால் எங்களுக்கும் இந்திய பொருளாதார முன்னேற்றத்திற்கும் அதிக சம்பந்தம் இல்லை என்பது உண்மைதான். ஆனால் எங்கள் துறையில் நாங்கள் பல விஷயங்களை சாதித்திருக்கிறோம். உலக சினிமாவிற்கு இணையாக இந்திய சினிமாவையும், அதில் தொழில் நுட்பத்தின் பங்கையும் பெருமளவு வளர்த்திருக்கிறோம். சத்யஜித்ரேயின் மூலமாக உலகிற்கு எங்களது இருப்பை தெரிவித்த நாங்கள், இன்று ஒரு இந்திய சினிமாவை (லகான்) ஆஸ்காருக்கு தகுதி பெறச் செய்திருக்கிறோம்.

சில வருடங்களுக்கு முன்பாக இன்னொரு இந்தியரின் படத்தை 7 ஆஸ்கார் விருதிற்காக தகுதி பெறச் செய்திருக்கிறோம். இப்படி எங்கள் துறையின் வளர்சியை உலகிற்கு கம்பீரமாக அறிவித்து வருகிறோம். ஆனால் எங்களுக்கும் இந்திய பொருளாதார முன்னேற்றத்திற்கும் அதிக சம்பந்தம் இல்லைதான்.

இன்று என் முன்னால் அமர்ந்துள்ள பலருடன் எனது பரிச்சயம் நியூஸ் பேப்பரின் மூலம் மட்டுமே. இவ்வளவு ஏன்?இதுவரை இந்த விழாவில் நான் யாருடனும் () என்னுடன் யாரும் கை குலுக்கவோ () பேசவோ இல்லை!

நாங்கள் சினிமாக் கலைஞர்கள். நாங்கள் சாதரண மனிதனின் கனவுகளையும், ஆசைகளையும் திரையில் காண்பிக்கிறோம். எங்களுக்கு அவனது சந்தோசம் மட்டுமே முக்கியம். அவனது கனவுகளை அவனுக்கு திரையில் காண்பிப்பதில் அவனை மகிழ்விக்கிறோம். ஆனால் நீங்கள் அவனது ஆசைகளையும் கனவுகளையும் அவனுக்கு நிஜமாக்கித் தருகிறீர்கள். திரையில் நாங்கள் காட்டும் மாற்றத்தை, நிஜத்தில் செயலாக்குகிறீர்கள். நாங்கள் எங்களது வளர்ச்சியை உலகிற்கு எடுத்துச் சொல்கிற வேளையில், நீங்கள் இந்தியாவின் வளர்ச்சியை உலகிற்கு எடுத்துச் செல்கிறீர்கள். திரையில் வேண்டுமானால் நாங்கள் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கலாம். ஆனால் நிஜ வாழ்வில் நீங்கள் ஹீரோவாக வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்………”

அன்று அந்த பேச்சை முடித்து விட்டு அவர் கீழே இறங்கும் போது அவ்ரை முதல் ஆளாக நின்று எதிர்கொண்டது வேறு யாருமல்ல, .சிதம்பரம்தான், அது மட்டுமல்ல அவர் பின் ஏறக்குறைய எல்லா தொழிலதிபர்களும் வரிசையில் நின்றனர் பிரியங்கா சோப்ராவிடம் கை குலுக்குவதற்கும், அவருடன் பேசுவதற்கும்.

ஒரு கூட்டத்தையே தன் பக்கம் திருப்பும் ஆற்றலும், சொல்லாடலும் அனைவருக்கும் வந்து விடாது!. அதுவும் புத்திசாலிகளும், பொருளாதார வல்லுநர்களும் நிறைந்த அந்த சபையை தன் பக்கம் திருப்பினார் என்றால் அது ஒன்றும் சாதாரண விஷயம் இல்லை.

—————————————————————————­——————————————————————

முதலாமானவரின் விஷயத்தில் அவருடைய வார்த்தைகளுக்கான விளைவுகள் உடனடியாக தெரிந்தன. ஆனால் இரண்டாமவரின் விஷயத்தில் அவருடைய வார்த்தைகளை விட அதில் அடங்கிய செய்தியும், செய்தியைத் தொடர்ந்த நிகழ்சிகளின் விளைவுகளும் மிகவும் சக்தி வாய்ந்ததாக அமைந்தது. அதனுடைய விளைவுகள் கூட உடனடியாக தெரியவில்லை, ஜனவரி 10, 2008ல் தான் தெரிந்தது. ஆனால் தெரிந்த போது அதன் சக்தி வரலாற்றில் எழுதப்பட்டு விட்டது.

அந்த செய்திகளுக்கு சொந்தக்காரர் ஒன்றும் சாதாரணமானவரள்ள! அவர் ஜனவரி மாதத்தில் (2008) உலக அளவில் ஒரே சமயத்தில் 25க்கும் மேற்பட்ட பத்திரிக்கைகளில் இடம் பெற்றிருந்தார், கார்னகி மெடல் ஆஃப் பிலந்த்ராபி அவார்டுக்கு சொந்தக்காரர், 2007 ல் உலகின் மிக முக்கியமான மனிதர்கள் பட்டியலில் இடம் பெற்றிருந்தவர், 2007ல் இந்தியாவின் மிகப் பெரிய பிசினஸ் acquasition க்கு சொந்தக்காரர், இந்தியா டுடே பத்திரிக்கையின் இந்தியாவின் மிகச் சக்தி வாய்ந்த மனிதர்கள்பட்டியலில் தொடர்ந்து மூன்று வருடங்களாக முதல் இடத்திலும், தொடர்ந்து ஆறு வருடங்களாக முதல் மூன்று இடங்களுக்குள் இருப்பவர் ……

இப்படி ஒரு நீண்ட பட்டியலுக்கு சொந்தக்காரரான அவர், ஜனவரி 10, 2008ல் சொன்ன வார்த்தகள் ‘A Promise is a Promise’.

 

அந்த சரித்திரம் என்ன? அதனை படைக்க அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகள் என்ன? ஒரு அசாத்தியம் எப்படி சாத்தியமாகிற்று? மிக விரைவில்!…..

நான் ஏன் வலைப்பதிவு ஆரம்பித்தேன்…..

அவனவன் திடீர் திடீர்னு கட்சி ஆரம்பிக்கறாங்க, படம் எடுக்கறாங்க (நாயகனை சொல்லலீங்க), ஓடாத படத்துக்கு 150 நாள் ஓடினதா விழா எடுக்கறாங்க (பக்கமா குருவி (பா)டம் 150 நாள் ஓடினதால, விழா எடுத்ததா டெக்கான் குரோனிக்கிள்ல காலைல பார்த்தேன், ஆபிஸ் கிளம்பற நேரத்துல என்னமா வயிறு குலுங்க சிரிக்க வைக்கறாங்க?. இது பரவாயில்லை உளியின் ஓசை படம் அருமையா ஓடினதுக்காக விழா எடுத்ததா கூட கேள்விப்பட்டேன். கலைஞரோட பராசக்தி வசனம் அருமைன்னு சொன்னதுக்கான தண்டனையை இன்னும் எத்தனை காலத்துக்கு அனுபவிக்கணுமோ தெரியலை?). இப்படி எல்லாரும் அழிச்சாட்டியம் பண்ணிட்டிருக்காங்க, நீ மட்டும் ஏண்டா சும்மா இருக்கன்னு என் மனசாட்சி என்னை கேட்க, வீறு கொண்டு எழுந்ததன் விளைவுதான் என்னோட வலைப் பதிவு.
பேசாம அண்ணன் ஜேகே ரித்தீஷோட ஒரு ஒப்பந்தம் போட்டு, அவர் புகழ் பரப்பற மாதிரி வலைப்பதிவை வெச்சுடலாமான்னு பார்த்தா, ஏற்கனவே அவர் புகழ் நரகம் வரைக்கும் பரவியிருக்கு, இதுக்கு மேல புதுசா பரப்ப ஒன்னுமில்லங்கறதுனால, சொந்தமா ஏதாவது எழுதலாம்னு (இது ஒரு சிறந்த காமெடி!!) இந்த வலைப்பதிவை
ஆரம்பிச்சிருக்கேன். நான் வலைப்பதிவு ஆரம்பிக்கறேங்கறதே காமெடிங்கறதுனால, என்னோட வலைப்பதிவும் ஓரளவு காமெடியாதான் இருக்கும்.
பிரிவுகள்:மொக்கை குறிச்சொற்கள்:

அர்த்தமற்ற ஒரு பயணக் குறிப்பு

இரண்டு வாரம் முன்னாடி ஒரு சனிக்கிழமை இரவு ”ஜெயம் கொண்டான்” படம் பார்த்துட்டு நண்பர்களுடன் வீட்டுக்கு வரும் போது சற்றே தாமதமாகியிருந்தது. படத்தில் பாவனா அழகா இல்லை லேகா அழகா என்று விவாதம் நடத்திக் கொண்டே தொலைகாட்சியைப் பார்த்தா, டில்லியில் குண்டு வெடிப்பு, பலர் பலி என்று ஃப்ளாஸ் நியூஸ் ஓடிக் கொண்டிருந்தது.

விவாதம் நடத்திக் கொண்டிருந்த அனைவரும் சற்று நேரம் நியூஸ் பார்த்துட்டு பின் அனைவரும் ஒன்று சேர்ந்து என்னைப் பார்த்து சிரிக்க ஆரம்பித்தனர். பாவனாவின் தாக்கத்தில் இருந்த எனக்கு ஆரம்பத்தில் ஒன்றும் புரியாவிட்டாலும் மெதுவாக புரிந்தது. விஷயம் என்னவென்றால் விடியற்காலை 6 மணிக்கு அலுவலக காரியமாக டெல்லிக்கு நான் கிளம்புகிறேன். அதான் இந்தச் சிரிப்பு என்னைப் பார்த்து. நண்பர்கள்னா உங்களை மாதிரிதான்டா இருக்கணும் என்ற படியே கைப்பேசியை எடுத்துப் பார்த்தால் 8 மிஸ்டு கால்ஸ். எல்லாம் வீட்டிலிருந்துதான்.

சொல்லாமலேயே எனக்கு காரணம் புரிந்தது. உடனேயே வீட்டிற்கு அழைத்தால் அம்மாவின் கவலையான குரல் என்னைக் கேட்டது, கண்டிப்பா டெல்லிக்கு போகணுமா என்று?. நான் கால் பண்ணி கேட்டுட்டேண்மா, டிவியில காட்டுற அளவு பயப்படற மாதிரி ஒன்னும் இல்லியாம்மா, அது டெல்லியில வேற பகுதி, நாங்க இருக்கிறது வேற பகுதி. அதனால பயப்படாதீங்க, ஏதாவது பிரச்சனை இருக்கிற மாதிரின்னா அவங்களே என்னை வரச் சொல்ல மாட்டாங்க என்றேன். மறுமுனையில் சற்றே நிம்மதியடைந்தாலும் முழுத் திருப்தி அடையவில்லை என்பது மெல்லிய சரி என்ற வார்த்தையில் புரிந்தது.

அம்மாவை ஆறுதல் படுத்தும் விதமாகவும், நண்பர்களுக்கு பதில் தரும் விதமாகவும் சொன்னேன், அது மட்டுமில்லாம, செய்திலியே அவங்களுடைய அடுத்த குறி சென்னையா இருக்கற வாய்ப்பு அதிகம்னு சொல்றாங்க. அதனால் நான் இங்க இருக்கறதுதான் எனக்கு ரிஸ்க்கே ஒழிய டெல்லி போறதில் இல்லமா, தவிர இப்பதான் இங்க குண்டு வெச்சவங்க உடனடியா அடுத்து அங்கியே குண்டு வெக்கிறது வாய்ப்பு ரொம்ப கம்மிமா என்று போலீஸ்காரர் ரேஞ்சுக்கு பேசிட்டு, அதனால நீங்க என்னைப் பற்றி கவலைப் படாம சென்னையிலியே இருக்கப் போற உடன்பிறப்பை எச்சரிக்கை செய்யுங்க என்று கைப்பேசியை அவனிடம் கொடுத்து விட்டு நான் தப்பித்துக் கொண்டேன்.

நண்பர்களின் கண்டிப்பா போகனுமா என்ற கேள்விக்கு ஆமாண்டா என்று சொன்னாலும், இதில் எவன் சந்தோஷமா கேக்கறான், எவன் வருத்தமா கேக்கறான் என்பதை என்னால் அனுமாணிக்க முடியவில்லை. எப்படியோ டெல்லியை அடைந்த போது, டெல்லி தன் பழைய நிலைக்குத் திரும்பியிருந்தது. அலுவலகம் சென்று, சில பல நலம் விசாரிப்புகள் முடிந்த பின் வேலையை ஆர்ம்பிக்கும் போதுதான் உணர்ந்தேன், இந்த நகரத்தில்தான் இரண்டு நாட்களுக்கு முன்பு நாட்டையே உலுக்கிய, ஊடகங்களுக்கு தீனிப் போட்ட, என் நண்பர்களுக்கு சந்தோசமூட்டிய குண்டு வெடிப்பு நிகழ்ந்தது என்பதற்கான அறிகுறியே இல்லை என்று. பழகிப் போயிடுச்சோ என்பது போன்ற பல கேள்விகள் மனதில் எழுந்தாலும், இதை விட நமது உறுதியை திருப்பிக் காட்ட முடியாது என்ற திருப்தியும் எழுந்ததால் வேலையைப் பார்க்கத் தொடங்கினேன் (இதுக்குத்தானே இவ்ளோ தூரம், அதுவும் இந்த நேரத்துல பாசமா கூப்பிட்டுறுக்காங்க).

ஐந்து நாட்கள் எப்படி ஓடியது என்றே தெரிய வில்லை, அலுவலகம், அதை விட்டால் கெஸ்ட் ஹவுஸ் என்று மாறி மாறி போய்கிட்டிருந்தாலும் ஒரே ஒரு விஷயம் மட்டும் எனக்கு சங்கடம் உண்டு பண்னிக் கொண்டே இருந்தது. ஹிந்தி தெரியாத காரணத்தால் என்னிடம் பேசும் போது மட்டும் ஆங்கிலத்தில் பேசும் அலுவலக நண்பர்கள் நான் அருகில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மற்றவர்களோடு பேசும் போது ஹிந்தியிலேயே பேசியதைக் கண்டேன், அதுவும் ஆங்கில வார்த்தைகள் அதிகம் கலக்காததையும் கண்டேன். ஒரு பக்கம் கடுப்பா இருந்தாலும், மறுபுறம் மெல்லிய வியப்பும் ஏற்பட்டது.

ஏனென்றால் நம்மூரில் ஆங்கிலக் கலப்பு அதிகம் என்பது ஒரு புறம் இருந்தாலும், இங்கு அலுவலக விஷயமாக வெளி ஆட்களுடன் பேசும் போது, தமிழில் பேசினால் என்னை உயர்ந்த ஸ்தானத்தில் வைத்துப் பார்க்க மாட்டார்கள் (இத்தனைக்கும் ஒரு சிலருக்கு ஆங்கிலம் சரியாக வராது). ஆனால் இங்கே வெளி ஆட்களிடம் கூட ஹிந்தியில் பேசுகிறார்கள். ஒரு புறம் அவர்களது செயல் எனக்கு மகிழ்ச்சியையே தந்தது. எப்படியோ ஐந்து நாட்கள் ஓட்டினால் வார இருதி நெருங்கியது. ரெண்டு நாட்கள் என்ன செய்வது என்று புரிய வில்லை. வேலை சற்று இருந்தாலும், வார இறுதியிலும் வேலை செய்யும் அளவுக்கு, அதுவும் இவ்வளவு தூரம் வந்து விட்டு வெளியே சுற்றி பார்க்காமல் வேலை செய்யும் அளவுக்கு நான் பழம் இல்லை என்பதால் என்ன செய்யலாம் என்று யோசித்தேன்.

கண்டிப்பா தாஜ்மகால் போயிட்டு வந்துடு என்று என் அக்கா சொல்லியிருந்ததாலும், வார இறுதியில் ஷாப்பிங் போறேன்னு எந்த கடைவீதிக்கும் போகக் கூடாது என்று வீட்டிலிருந்தும், கடைவீதிக்குப் போயிட்டு வாடா என்று என் நண்பர்களும் கூறியிருந்ததாலும் கடைவீதிக்கும் போகாமல் என்ன செய்வது என்று யோசித்து இறுதியில் தனியாகவே ஆக்ரா சுற்றுலா போக முடிவு செய்து விட்டு, எனக்குத் தெரிந்த ஒரு டிராவல்ஸில் ஒரு டிக்கட் பதிவு செய்து விட்டேன். தனியாகவே போவது ஒரு சவுரியம், ஏனென்றால் பக்கத்தில் பேசுவதை விட, இடத்தை அதிகம் சுற்றிப் பார்க்கலாம்.

ஞாயிறு, அதிகாலை பேருந்து ஏறியவுடன் ஒரு சந்தோசம், ஒரு வருத்தம். சந்தோசத்துக்கு காரணம், ஏறக்குறைய பேருந்தில் இருந்த எல்லாரும் தென்னிந்திய ஆட்கள். வருத்ததிற்கு காரணம் வயசுப் பொண்ணுங்க யாருமே இல்லை!. ஏறக்குறைய டெல்லியை தாண்டும் போது 26 வயசுப் பசங்க ரெண்டு பேரு ஏறுனாங்க. பேசிக்கிட்டு வரும் போதே தெரிந்தது அவங்க தமிழ் ஆளுங்க என்று.
வண்டி ஓரிடதில் காலை உணவுக்கு நின்றது. 25 நிமிஷத்துல சாப்பிட்டு வந்திடணும் என்று டிரைவர் சொல்லியிருந்தாலும், டோக்கன் வாங்கினால்தான் உணவு வாங்க முடியும் என்பதால் டோக்கன் வாங்கும் இடத்தில் கூட்டமாக இருந்தது. அந்த ஹோட்டலில் எங்கள் பேருந்தில் வந்த ஆட்கள்தான் மட்டும்தான் சாப்பிடுகிறார்கள் என்றாலும், தன் முறை வந்தவுடந்தான் என்ன உணவு சாப்பிடலாம் என்று யோசிக்க ஆரம்பிக்கும் நம் ஆட்களின் கைங்கர்யத்தாலும், டோக்கன் கொடுப்பவரின் சுறுசுறுப்பாலும் கூட்டம் மிக மெதுவாக நகர்ந்தது. அதிலும் ஒரு 55 வயது பெரியவர், ஆர்டர் கொடுக்க 5 நிமிடம், காசு தேடிக் கொடுக்க 5 நிமிடம் எடுத்துக் கொண்டதில் (இத்தனைக்கும் கண் முன்னாடியே மெனுவும், அதற்குரிய விலையும் போட்டிருந்தார்கள்), நான் வேறு ஏறக்குறைய கடைசியில் நின்றிருந்ததால் டிரைவர் சொன்ன நேரத்திற்குள் டோக்கன் வாங்க முடியமா என்றே சந்தேகம் ஏற்பட்டது.

நல்ல வேளையாக இன்னொருவர் டோக்கன் கொடுக்க வர, கூட்டம் சீக்கிரம் நகர்ந்தது. மசால் தோசைக்கும், வடைக்கும் ஆர்டர் கொடுத்து விட்டு காத்திருக்க, டோக்கன் வாங்க பத்து நிமிடம் பண்னிய பெரியவர் தான் கேட்டது முழுதாய் வரவில்லை என்று கடைக்காரரிடமும் தனது நண்பரிடமும் பொரிந்து கொண்டிருந்தார். என்னுடைய மசால் தோசையும், வடையும் வர எடுத்துக்கொண்டு திரும்பும் போது, பாரு நமக்கு அப்புறம் வந்தவன் சீக்கிரம் வாங்கிட்டு போறான், நமக்கு ஒன்னும் தர மாட்டேங்கிறான், டிரைவர் வண்டி எடுத்துடப் போறான் என்று தமிழில் முணு முணுத்தது காதில் விழுந்தது. சுளீர் என்று கோபம் வந்தாலும், அவர் வயதின் காரணமாகவும், எனது மூடை நானே கெடுக்க விரும்பாததாலும், அவரைப் பார்த்து, பெரியவரே, நானும் ரொம்ப நேரமாத்தான் நிக்கறேன், நாம இல்லாம வண்டியை எடுக்க மாட்டாங்க, என்னை சொன்ன மாதிரி மத்தவங்களைப் பார்த்து சொல்லாதீங்க, ஏன்னா வந்திருக்கறவங்கள்ல நிறைய பேரு தமிழ் ஆளுங்கதான் என்று அமைதியாக சொல்லி விட்டு, டெல்லியோட எல்லையில ஏறுன என்னோட செட் பசங்க பக்கத்துல உக்காந்து சாப்பிட ஆரம்பித்தேன்.

வேறு இடம் இல்லாததால் அந்தப் பெரியவரும், அவருடைய நண்பரும் எனது எதிரில் அமர்ந்து சாப்பிட்டாலும் என்னைப் பார்ப்பதை தவிர்த்தனர். மசால் தோசையை முடித்து விட்டு வடையை சாம்பாரில் தொட்டு சாப்பிடுவதற்கு, சும்மாவே சாப்பிடலாம் போலிருந்தது. பக்கதிலிருந்த பசங்க வேறு சாம்பார் மயிரு மாதிரி இருக்கு என்ற சொன்ன சமயத்தில், அந்தப் பெரியவர் தனது நண்பரிடம் இன்னொரு கிண்ணம் சாம்பார் எடுத்து வரச் சொல்லிக் கொண்டிருந்தார். இவருக்கு இயற்கையிலேயே எதாவது கோளாறோ என்ற எனது சிந்தனையை பேருந்தில் இருந்து வந்த ஹார்ன் சத்தம் கலைக்க சீக்கிரம் சாப்பிட்டு பேருந்துக்கு சென்றேன்.

முதலில் ஆக்ரா கோட்டை, என்னதான் டிஜிட்டல் காமிரா வைத்திருந்தாலும் மற்றவர்களையும், இடத்தையும் என்னால் எடுக்க முடிந்ததே தவிர என்னை என்னால் எடுக்க முடியவில்லை என்ற உண்மை என்னை கடுப்பேற்றிக் கொண்டிருந்தது. நான் இருப்பது போன்ற போட்டோ காண்பித்தாலொழிய நான் ஆக்ராவிற்கு போனேன் என்பதை ஒப்புக் கொள்ளப் போகாத எனது நண்பர்களை எப்படி ஒப்புக்கொள்ள வைப்பது என்று யோசிக்கும் போது, அந்த பசங்க பக்கத்தில் இருந்தைப் பார்த்து, அவர்களிடம் பாஸ், என்னை ஒரு போட்டோ எடுங்க என்றேன்.

ஆக்ரா கோட்டை முடிந்து, மதியம் சாப்பிடும் போது நான் தனியாக உட்கார்ந்திருப்பதைப் பார்த்து, அவர்களே என்னை அவர்களுடன் வந்து இணைந்து கொள்ளுமாறு அழைத்தனர். இப்படியே ஒன்று சேர்ந்து, அடுத்து தாஜ்மகாலைப் பார்க்கச் சென்றோம். பார்க்க, பார்க்க பிரமிப்பை ஏற்படுத்துகிறது தாஜ்மகால். இந்த பக்கம் திரும்பி விட்டு, திரும்பி தாஜ் மகாலைப் பார்த்தால் மீண்டும் வியப்பு ஏற்படுகிறது. அந்தப் பிரமிப்பின் காரணமாகவும், நண்பர்கள் நம்ப வேண்டும் என்ற காரணத்திற்காகவும், அங்கேயே இருக்கும் போட்டோகிராபர்களிடம் சொல்லி, போட்டோ எடுத்துக் கொண்டேன். மூன்று மணி நேரம் அங்கேயே செலவளித்து விட்டு, திரும்பும் போது, என்னதான் தாஜ்மகால் என்னை பிரமிக்க வைத்தாலும் சில விஷயங்கள் என்னை சங்கடப் படுத்தியது. முதலாவது, டிக்கட் கொடுக்கவும், செக் பண்ணவும் எல்லாரும் குறைந்தப் பட்சம் ஒரு மணி நேரம் காத்திருக்க நேரிட்டது.

இத்தனைக்கும் அன்று ஞாயிற்றுக்கிழமை, அதி பயங்கற கூட்டம் இல்லாவிட்டாலும் ஓரளவு நல்ல கூட்டம் இருந்தது. விடுமுறை நாட்களிலாவது கூட்டம் சீக்கிரம் நகர அரசு ஏற்பாடு செய்திருக்கலாம். செக் பண்ணுகிற இடத்தில் உள்ளே நுழையும் போது கைப்பேசியின் ஹெட்போனை உள்ளே விடமாட்டேன் என்று பிரச்சனை பண்ண, லாக்கர் ரூமில் வைக்கலாம் என்று அங்கே சென்றால், அங்கே அவர்கள் வேலை செய்யும் வேகத்தைப் பார்த்தால் மீண்டும் ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டும் என்று தோன்றியது. கடுப்பில் ஹெட்போனை தூக்கி எறிந்து விட்டு வரவேண்டியிருந்தது.

இன்னொரு விஷயம் வரிசையில் நகரும் போது ஏகப்பட்ட பேர் குழந்தையை வைத்து பிச்சை எடுப்பதும் மற்றும் சிறு வயது பையன்கள் ஏதாவது பொருட்கள் விற்பதும் சாதரணமாக இருந்தது. குழந்தை தொழிலாளர்கள் கூடாது என்று பிரச்சாரம் செய்யும் அரசாங்கம் எப்படி, ஏழு அதிசியங்களில் ஒரு அதிசியமாக கருதப்படும் இடத்தில், வெளி மாநிலத்தவரும், வெளி நாட்டினரும் அதிகம் வரும் இடத்தில் இப்படி ஒரு நிலையை ஏற்படுத்தியுள்ளனர் என்று புரியவில்லை.

எல்லாவற்றையும் முடித்துவிட்டு டெல்லி வந்து சேர்ந்து மீண்டும் வேலை பார்க்க ஆரம்பித்து, இன்னொரு ஒரு வாரத்தை ஓட்டும் போது வெள்ளிக்கிழமை அலுவலகத்தில் சொன்னார்கள் நாளை நீ கிளம்பலாம் என்று. சனிக்கிழமை மெதுவாக தூங்கி எழுந்து, மிச்ச மீதியிருந்த வேளைகளை முடித்து விட்டு கிளம்பும் போது தொலைக்காட்சியில் ஃபிளாஸ் நியூஸ், டெல்லியில் மீண்டுமொரு இடத்தில்
குண்டு வெடிப்பு, 4 பேர் பலி என்று. உடனடியாக வீட்டிற்கு அழைத்து, நான் கிளம்பப் போகிறேன், இங்கு ஒரு பிரச்சனையும் இல்லை என்று அறிவித்து விட்டு மெதுவாக போகும் போது என் காதுகளில் எதிரொலித்துக் கொண்டிருந்தது நான் முன்பு சொன்ன வார்த்தைகள் “இப்பதான் இங்க குண்டு வெச்சவங்க, உடனடியா அடுத்து அங்கியே குண்டு வெக்கிறது வாய்ப்பு ரொம்ப கம்மிமா”……..

பிரிவுகள்:பயணக் குறிப்பு குறிச்சொற்கள்:, , ,

மும்பை மேரி ஜான்-ஒரு வித்தியாசமான அனுபவம்

“இருந்தாக்கா அள்ளிக்கொடு”
“தெரிஞ்சாக்கா சொல்லிக்கொடு”

வரிகளை ரசித்து கேட்டுக் கொண்டிருக்கும் போதே கைப்பேசி அழைத்தது. எடுத்துப் பார்த்தால் அலுவலக நண்பன் கார்த்திக். தலைவர் பாட்டை ரசிக்க விட மாட்டாங்களே என்ற கடுப்பில் கைப்பேசியை எடுத்து ஹல்லோ என்றேன்.

நரேஷ், நான் கார்த்தி பேசறேன், எப்படியிருக்க, சாயங்காலம் படத்துக்கு வர்றீல்ல? ஆஃபிஸ் முடிந்ததும் அங்கருந்தே எல்லாரும் போயிரலாம் சரியா என்றான். அதற்கப்புறம்தான், அன்று மாலை ”மும்பை மேரி ஜான்” ஹிந்தி படத்துக்கு போகலாம் என்று ஏற்கனவே பேசி வைத்திருந்தது ஞாபகத்திற்கு வந்தது.

நான் வரலை கார்த்தி என்று நான் தயங்கிய படியே கூறினேன். யோவ், ஆஃபிஸ்ல எல்லாரும் வற்ராங்கயா, நீ மட்டும் ஏன் முருங்கை மரம் ஏறுர இப்ப என்றான். யோவ் எனக்கு ஹிந்தி தெரியாதுன்னு தான் உனக்கே தெரியும். ஹிந்தி தெரியாம எப்படி ஹிந்தி படம் பாக்கறது, என்னத்த ரசிக்கிறது, தவிர ஷோகா அலி கான் ஒன்னும் எனக்கு பிடித்த நடிகை கிடையாதுப்பா, அப்புறம் எதுக்கு அந்த படத்துக்கு வரணும் என்றேன்.

டே இந்த கதையெல்லாம் எல்லாம் இங்க வேண்டாம், மகேஸ் பெங்களூரிலிருந்து வந்துருக்கான், அவந்தான் எல்லாருமா சேர்ந்து படம் போகலாம்னு சொன்னான், பத்தாதக்கு நம்ம மேனேஜர் வேற வர்றாரு, நீ கண்டிப்பா வந்தாகணும், சாயங்காலம் அப்படியே போயிரலம், நீ ரெடியா வந்திரு என்று கைப்பேசியை வைத்து விட்டான்.

சலிப்புடன் கைப்பேசியை வைத்து விட்டுப் பார்த்தால் இங்கே தலைவர் பாட்டு முடிந்திருந்தது. அடச்சே இதுக்கு கொடுத்து வைக்கிலியே, என்று அலுவலகம் கிளம்ப ஆரம்பித்தேன்.

இப்படி அலுவலக நண்பர்களின் வற்புறுத்தலுக்காகத்தான் ”மும்பை மேரி ஜான்” படத்துக்கே போனது. தவிர அந்த படம் வேண்டாம் என்றதற்கு தனிப் பட்ட முறையில் வேறொரு காரணமும் இருந்தது. இதே ஐநாக்ஸில் தான் தலைவரோட “நாயகன்” படம் ஓடுது. அந்த படத்தை விட்டுட்டு ஒரு ஹிந்தி படத்துக்கு டிக்கெட் வாங்கிட்டாங்களே என்ற தமிழ் பற்றும், “நாயகன்” படத்துக்கு எங்கும் டிக்கட் கிடைக்காத கோபமும் தான் காரணம் (அந்தளவுக்கு அருமையா ஓடிட்டிருக்கு).

இப்படி என்னுடைய சொந்த விருப்பு, வெறுப்புகளை எல்லாம் மனதில் அடக்கியவாறு தியேட்டருக்குள் நுழைந்த போது முக்கால் வாசி தியேட்டர் காலியாக இருந்தது. அப்போதே நினைத்துக் கொண்டேன், இந்தப் படம் ஒரு “ஓம் ஷாந்தி ஓம்” ஆகவோ அல்லது ஒரு “சிங் ஈஸ் கிங்” ஆகவோ இருக்க வாய்ப்பில்லை என்று.

பெயர் போடும் போதே பிண்ணனியில், சுதந்திரம் அடைந்ததில் இருந்து மும்பை எப்படி வளர்ந்தது மாதிரியான காட்சிகளை காட்டிக் கொண்டிருக்க, ஒரு வேளை மும்பையின் கலாச்சாரம் சம்பந்தப் பட்ட படமாக இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டேன். பால் தாக்கரே வேசம், மராட்டி மொழி பிரச்சனை எல்லாத்தையும் கொண்டு வந்திருவாங்களே என்று நினைத்துக் கொண்டேன்.

ஆனால் படம் என்னை மிகவும் ஆச்சரியப் படுத்தியது.

மும்பை ரயிலில் நடந்த வெடிகுண்டு சம்பவமும், அதனோடு ஏதாவது ஒரு விதத்தில் தொடர்பு கொண்டிருந்த 6 பேருடைய வாழ்க்கையிலும், மனதிலும் ஏற்படும் போராட்டங்களும்தான் படமே. சோகங்களையும், இழப்புகளையும், போராட்டங்களையும் காண்பித்தாலும், முகத்தில் ஒரு குறும்புன்னகையுடன் படத்தை பார்க்க வைத்தது.

ஏறக்குறைய இன்னும் ஒரு வாரத்தில் ரிடையர் ஆகப் போகிற ஒரு சாதரண, லஞ்சம் வாங்குகிற, எதற்கும் அலட்டிக் கொள்ளாத போலீஸ்காரர் வேடத்தில் பரேஷ் ராவல். மும்பை வெடிகுண்டு சம்பவம் இந்த ஒரு வார காலத்தை தூக்கமில்லா இரவுகளாலும், மனச் சஞ்சலங்களாலும் நிரப்பியிருந்து. இவை யாவற்றையும் தனது வேடிக்கைப் பேச்சுக்களாலும், அலட்டிக் கொள்ளாத பழக்க வழக்கங்களாலும் சமாளிக்கும் வேடம் பரேஷ் ராவலுக்கு.

ஒரு போலீஸாக இருந்துக் கொண்டு தம்மால் எதுவும் செய்ய முடியவில்லையே என்ற கோபத்திலும், இயலாமையிலும் தவித்துக் கொண்டு, மனசாட்சிக்கும் உண்மைக்கும் நடுவில் போராடிக் கொண்டிருப்பவராகவும் பரேஷ் ராவலின் நண்பருமாகவும்,
போதாக்குறக்கு மும்பை வெடிகுண்டு சம்பவம் அவரது தேனிலவு பயணத்தை நிறுத்தி விட்ட கடுப்பில் இருக்கும் வேடத்தில் விஜய் மவுரியா.

சமூகத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் நிலையிலும், வீட்டு வேலை செய்து கொண்டே கூடுதல் வருமானத்திற்காக, வார இறுதியில் தெருவில், மிதி வண்டியில் டீ விற்றுக் கொண்டு, வெடிகுண்டு சம்பவம் அதையும் தடை செய்து விட்ட நிலையில் என்ன செய்வது என்று புரியாமல் தவிக்கும் வேடத்தில் இர்ஃபான் கான்.

வேலையில்லாப் பட்டதாரியும், முஸ்லீம்களின் மேல் கோபம் கொண்டு, வெடிகுண்டு விபத்திற்கு தான் டீ குடிக்கும் கடையில் தான் அடிக்கடி பார்த்த, தன்க்குப் பிடிக்காத ஒரு முஸ்லீமும் காரணமாக இருக்கக் கூடும் என்ற சந்தேகத்துடன் அவரை தேடும் வேடத்தில் கேகே மேனன்.

சுற்று சூழல் முன்னேர்றத்தில் ஆர்வம் கொண்டு தெருவோர கடை வாசிகளை பிளாஸ்டிக் உபயோகிக்க வேண்டாம் என்று அறிவுரை செய்து கொண்டு, வாங்கும் திறன் இருந்தும், கார் வாங்க விருப்பமின்றி, ரயிலில் பயணம் செய்து கொண்டு, வெளிநாடு செல்ல வாய்ப்புகள் பல வந்தும் அதை நிராகரித்து, தான் இந்தியாவில்தான் வேலை செய்ய வேண்டும் என்ற உறுதியும் கொண்ட, ஒரு தேசப் பற்று கொண்ட, உயர் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த வேடத்தில் மாதவன்.

கேவலம், டிஆர்பி ரேட்டிங்காகவும், பரபரப்பிற்ககவும் பேட்டிகளையும்
செய்திகளையும் வெளியிடும் இன்றைய டிவி நியூஸ் சேனல்களின் பிரதிபலிப்பாக காட்டப் படும் ஒரு நியூஸ் சேனலில் வேலை பார்ப்பவரும், இந்தத் தொழிலை எந்தவொரு குற்ற உணர்ச்சியோ, வருத்தமோ இல்லாமல் மாறாக ஒருவித பெருமிதத்துடன் வேலை செய்யும் வேடத்தில் ஷோகா அலி கான் (வெடிகுண்டு சம்பவத்தில் பாதிக்கப் பட்டவர்களிடம் போய், போலீஸ் சரியான நேரத்தில் வந்ததா, மருத்துவர்கள் சரியாக பார்க்கிறார்களா, அவர்களுடைய மனநிலை எவ்வாறிருந்தது மாதிரியான கேள்விகளை கேட்கும் வேடம்).

இவர்கள் அனைவருக்கும் மும்பை வெடிகுண்டு சம்பவத்துடன் இருந்த
தொடர்பு, சம்பவத்திற்குப் பின் இவர்கள் மனதிலும், வாழ்க்கையிலும்
ஏற்படும் போராட்டங்கள் ஆகியவர்றைச் சுற்றி நகர்கிறது படம்.

படத்தில் அதிக பபட்சம் 20 முதல் 30 நிமிடத்திற்குதான் பிண்ணனி இசையே. மீதி நேரங்களில் அந்தந்த காட்சி சம்பந்தப் பட்ட சத்தங்களோடு படத்தை உலவ விட்டிருக்கின்றார் இயக்குனர். படதில் பரேஷ் ராவல், கேகே மேனன் தவிர வேறு யாரும் அதிகம் ஒருவருக்கொருவர் அதிகம் சந்தித்துக் கொள்வதுமில்லை, பேசிக் கொள்வதுமில்லை. இது போன்ற படங்கள் நம்மூரிற்கு புதிது என்றே நினைக்கிறேன்.

வெடிகுண்டு சம்பவத்தால் எல்லாரும் சோகத்தில் மூழ்கியிருக்க, ஷோகா அலி கானோ, இதில் பாதிக்கப்பட்ட ஒரு சிலரை கொண்டு எவ்வாறு ஒரு செண்டிமெண்டலான, பரபரப்பான வீடியோ கிளிப்பிங்கை உருவாக்குவது பற்றி தனது நியூஸ் சேனல் ஆட்களுடன் ஆலோசனை செய்கிறார். ஆனால் அதே சமயம்தான் அவருக்கும் தெரிய வருகிறது, தான் கல்யாணம் பண்ணிக் கொள்ளப் போகும் தனது காதலனும் அதே ரயிலில் பயணம் செய்தார் என்று.

அவரைத் தேடி மருத்துவ மனைகளில் அலையும் போது ஷோகா அலி கானை வைத்தே அவருடைய மனநிலை எவ்வாறிருந்தது என்பது போன்ற கேள்விகளை அவர் வேலை பார்க்கும் நியூஸ் சேனலே கேட்கும் போதும், எந்த வீடியோ கிளிப்பிங்கை உருவாக்க வேண்டும் என்று ஷோகா அலி கான் நினைத்தாரோ அதே வீடியோ கிளிப்பிங்கை அவரை வைத்தே உருவாக்கும் போது அவருடைய மனநிலையை காண்பிக்கும் போதும் இன்றைய டிவி நியூஸ் சேனல்களை சாட்டையால் அடித்திருப்பார் இயக்குநர்.

படத்தில் அனைவருமே அருமையாக நடித்திருந்தாலும் பரேஷ் ராவலும், இர்ஃஃபான் கானும் மிரட்டியிருகிறார்கள். தனது அலட்டலில்லாத நகைச்சுவை பேச்சாலும், இறுதியில் தனது நண்பரிடம் வெடித்து உருகும் பாத்திரத்தில் பரேஷ் ராவல் பட்டையை கிளப்பினாரென்றால் , வெறும் கண்ணசைவாலும், உடலசைவாலும் பட்டையை கிளப்பியிருக்கிறார் இர்ஃபான் கான். (தயவு செய்து நம்ம இளைய தளபதி மாதிரி ஆட்களை அவங்ககிட்ட போய் பயிற்சி எடுத்துட்டு வரச் சொல்லுங்களேன்).

கேகே மேனன் ஏறக்குறைய மனம் திருந்தும் சமயத்தில், அவர் வளர்ந்த குடும்பச் சூழலையும், அவர் முஸ்லீம்களை வெறுப்பதற்கான காரணத்தை சொல்லியது, கடைசி கட்ட காட்சிகளில் கேகே மேனனின் நடிப்பு மிக அருமை.

படத்தின் இயக்குநர் யார் தெரியுமா? எவனோ ஒருவன் படத்தை இயக்கிய நிஷிகாந்த் காமத்.

படத்தின் பெரிய பலம் பாத்திரப் படைப்புகள், அதை தூக்கி நிறுத்தும்
நடிப்பு, அருமையான திரைக்கதை, குறியீடுகளில் பல விஷயங்களை உணர்த்தும் உத்தி மற்றும் காமிரா. இரண்டாம் பாதி சற்றே தொய்வடைந்தாற் போல் தோன்றினாலும் பல நல்ல விஷயங்களுக்காக இந்தக் குறையை மன்னித்து விடலாம்.

பின்குறிப்பு: முடிந்த வரையில் கதையை அதிகம் சொல்லாமல் சில முக்கிய விஷய்ங்களை மட்டுமே சொல்லியிருக்கிறேன். மாதவன், கேகே மேனன், விஜய் மவுரியா, இர்ஃபான் கான் நடிப்பு பற்றி இன்னும் பல விஷயங்கள் சொல்ல ஆசைதான். ஆனால் அது முழு கதையையும் சொல்ல வேண்டியிருக்குமே என்பதால் அதை தவிர்க்கிறேன். என்னைப் பொருத்த வரையில் இது அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் என்றே நினைக்கிறேன் அது மட்டுமல்ல, ஹிந்தி தெரியவில்லையே என்ற எனது ஏக்கத்தையும் அதிகப்படுத்திய படம்.

பிரிவுகள்:சினிமா குறிச்சொற்கள்:,

முதல் மொக்கை (பதிவு)

ஏறக்குறைய ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக, வெறுமனே பார்வையாளனாகவும், சில குழுமங்களில் மட்டும் பங்கு பெற்ற நான் எனது வலைப்பதிவை தொடங்குகிறேன்.

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி இருக்கு (Its always better to learn from other’s mistakes). அதே மாதிரி மத்தவங்களை படிக்க வெச்சு என்னுடைய இயங்கு வெளியை மேம்படுத்தலாம்னு இருக்கேன்!

பிரிவுகள்:என்னைப் பற்றி