தொகுப்பு

Posts Tagged ‘அரசியல்’

ஏனெனில், இவர்கள் மாணவர்கள்!

Because

ஈழப் போராட்டத்தின் போது, இதற்கும் அதிகமான கல்லூரிகள், மாணவர் அமைப்புகளும், வராது வரும் விருந்தாளியாக சில பல பொறியியல் கல்லூரிகளும் கூட இணைந்து போராடிய சமயத்திலேயே அதனை எப்படி அடக்கினர், நீர்த்துப் போகச் செய்தனர் என்பதெல்லாம் எல்லாரும் நேரில் பார்த்த ஒன்றே!

ஈழப்போராட்டங்களில், எல்லாக் கட்சிகளை விடவும், எந்த வித எதிர்பார்ப்புமின்றி, சுய நேர்மையாக, அக்க‌றை என்ற ஒற்றைபுள்ளியில் எல்லாரும் இணைந்து நின்றனர்.

அவர்களுடைய போராட்டம் வெற்றியடையாம‌ல் போயிருக்கலாம், அவர்களுல் பலருக்கு ஈழத்தின் முழு வரலாறும் கூட தெரிந்திருக்காது, இந்திய, மாநில‌ அரசுகளினுடய‌ அரசியல் முழுமையாக புரிந்திருக்காது. ஆனால் அவர்கள் ஒன்றிணைந்து நின்றதற்கான காரணதிலோ, அந்த நேர்மையின் மேலோ எந்த வித சிறுமையும் படுத்திவிட முடியாது!

அப்படி ஒரு இணைப்பு, அந்த நேர்மை, எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் உவப்பானதாக இருக்க முடியாது! அதனாலேயே அவர்களுடைய போராட்டங்களை நீர்த்துபோகச் செய்வதில் எல்லாக் கட்சிகளுமே மறைமுகமாக இணக்கம் காட்டுவார்கள்!

அந்தக் கூட்டத்தையே கலைத்தவர்களுக்கு, போராட்டத்தை நீர்த்துப் போக வைத்தவர்களுக்கு இப்பொழுது மாணவர்கள் எடுக்கும் போராட்டத்தை கலைப்பது ஒன்றும் கடினமான விஷயமாக இருக்க முடியாது!

வருடந்தோறும் மாணவர்கள் மாறுவார்கள்! ஆனால், காலம் முழுக்க, ஆட்சியாளர்களும், அரசு எந்திரங்களும், அவர்களது சிந்தனைகளும் மாறப் போவதேயில்லை. ஈழப்போராட்டம் முதல், ஏற்கனவே நடந்த போராட்டங்களிலேயே, ஜனநாயக அடக்குமுறைக்கான பாதையை கண்டறிந்திருப்பார்கள்!

ஒரு பக்கம், போராடக்கூடிய மாணவர்களின் யோக்கியதையை அவர்கள் கேள்விக்குள்ளாக்குவார்கள்.

மாணவர்கள், போராட்டத்தினூடே பாட்டில்களை அள்ளுவதாகவோ, அவர்களே குடித்துவிட்டுதான் போராடுவதாகவோ காட்சிகள் பரப்பப்படும். இன்னொரு புறம் அவர்களை ஒடுக்க, கல்லூரிகள் விடுமுறை அறிவிக்கும். காவல்துறை அவர்களை கைது செய்யும் அல்லது பயமுறுத்தும்.

இன்னொரு புறம் மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தாமல், போராடலாமா, வன்முறையைக் கையில் எடுக்கலாமா? என்பது போன்ற கேள்விகளை பொதுமக்கள் வாயிலாக கேட்க வைக்கும்!

இதில் இரண்டு விதக் கூட்டம் இருக்கிறது. ஒரு கூட்டம், எந்தப் போராட்டத்தையும் தவறு என்று பேசும். சாதீயப் பாகுபாடை பேசும் சமூகத்தில் வளர்ந்து, ஒழுக்கத்தைப் பேசாத கல்வி அமைப்பில் கற்று, மனித நியதிகள் எண்ணாத நிறுவனங்களில் சம்பாதிப்பது மட்டுமே முன்னேற்றம் என்று பேசும். எந்த இடத்திலும் கேள்வி கேட்பவன் பிழைக்கத் தெரியாதவன் என்ற கொள்கையைக் கொண்டிருக்கும்!

இன்னொரு கூட்டம், போராட்டம் தன் சார்புக் கட்சி, அமைப்பு, மதம், சாதிக்கு எதிராக என்றால் அதன் நியாயத்தை பேசாமல், முழுக்க புறம் கூறும். அவர்களை கேவலப்படுத்தும். அதே, தமக்கு ஆதரவாக என்றால், அவர்களை தலைக்கு மேல் தூக்கி வைக்கும்!

ஆனால், எல்லா இடங்களிலும் மாணவர்கள், அதே பக்குவமற்ற, முறையான திட்டமிடல் இல்லாத, முழுச் சித்தாந்த புரிதலற்ற போராட்ட முறையையே மேற்கொண்டிருப்பார்கள்!

ஆளானப்பட்ட, போர்களிலும் சரி, நிர்வாகப் பாடங்களிலும் சரி, வெற்றியடையும் வரை, தோல்விகள் கூட படிப்பினைகளாக ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. அவை வெறும் தோல்விகள் மட்டுமே!

ஆம், வன்முறையை கையில் எடுத்திருக்கிறார்கள்.

ஏனெனில் இவர்கள் மாணவர்கள். எளிதில் உணர்ச்சி வயப்படுபவர்கள். முழு முதிர்ச்சி இல்லாதவர்கள் (?), விழுந்தாலும், திமிறி எழுவதே வெற்றி என்று எண்ணிக் கொண்டிருப்பவர்கள். தூண்டிவிடத் தோதானவர்கள்.

ஏனெனில், சாதீய பாகுபாடு, மதத் தீவிரவாதம், மோசடி, மூடநம்பிக்கைகள் என்று சமூகத்தின் புரையோடிப் போன பிரச்சினைகளினூடே வளர்ந்தாலும், மாணவக் காலத்தில் மட்டுமே இதைத் தாண்டிய ஒற்றுமை சாத்தியம் என்பதை உணர்ந்து, அதனை நோக்கி நகரத்துவங்கியிருப்பவர்கள்.

ஏனெனில், இதைத் தேர்தல் உத்தியாகவோ, வாக்குவங்கி அரசியலாகவோ பார்க்கத் தெரியாதவர்கள். வெறும் பிரச்சினையாக மட்டும் பார்ப்பவர்கள். இதற்கான, முழுமையான தீர்வு கூட இவர்களிடம் இருக்காது. பூரண மதுவிலக்கு சாத்தியமற்ற ஒன்று என்ற நிதர்சனம் இவகளுக்கு புரிந்திருக்காது.

ஏனெனில், ஒரு அரசியல் கட்சியினைப் போல, ஒவ்வொரு கட்டமாக போராட்டத்தைக் கொண்டு செல்லும், பிரச்சினையினை உயிர்ப்புடனே வைத்திருக்கும், அதன் மூலம் எந்தளவு அரசியல் ஆதாயம் அடையமுடியும் என்ற திட்டமிடல் இல்லாதவர்கள்!

ஏனெனில், அறப்போராட்டத்தை வன்முறையாகவோ, வன்முறையே நடந்திருந்தாலும் அதை அறப்போராட்டம் என்று மாற்றக் கூடிய கலையையோ, செல்வாக்கையோ, அதிகாரத்தையோ முழுமையாகக் கொண்டிராதவர்கள்!

ஏனெனில், இவர்களின் யாருடைய உறவினர்களும், சொந்தங்களும் மதுபான ஆலையையோ, ஏன் கடையயோ வைத்திருக்காதவர்கள். மாறாக பெரும்பாலும், மதுவால் பாதிக்கப்பட்டவர்கள். ஏன், நேற்று வரை அது சம்பந்தமான பிரக்ஞையற்றவர்களாய் கூட இருந்திருப்பர். முந்தைய வார இறுதியில் கூட தண்ணியடித்திருப்பார்கள்! அடுத்த வார இறுதியில் தண்ணியடிக்க, எப்படி காசு தேற்றுவது என்ற யோசனையில் இருப்பவர்கள்.

ஏனெனில், கேவலம் ஊழலுக்காக கைதானாலும், நீதிமன்றமே தீர்ப்பு அளித்தாலும், அதை ஏற்க்காமல், வன்முறையை தொடர்ந்து வன்முறைகளை கட்டவிழ்த்த கட்சிகளையும், தொண்டர்களையும், அதனை அனுமதிக்கும் அரசு எந்திரத்தையும் பார்த்தே வளர்ந்தவர்கள். அவர்கள்தான் சொல்லித் தந்தார்கள், வன்முறையை கையில் எடுப்பதே கவனத்தை ஈர்க்கும் என்று! அது ஒன்றும் பெரிய தவறு இல்லை என்று!

ஏனெனில், இவர்கள் வெறும் மாணவர்கள்!

பிரிவுகள்:அரசியல் குறிச்சொற்கள்:,

தும்பை விட்டு வாலைப்பிடிக்கும்……

சாட்டர்ஜியும், நீல்சிங்கும் அந்நிறுவனத்தின் நிதித்துறையில் மிக முக்கிய பதவி வகிக்கின்றனர்…

அந்நிறுவனம் ஒரு பழம்பெரும் நிறுவனம். அது கால்பதிக்காத துறையோ, அளிக்காத சேவைகளோ கிடையாது. மிக அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்களை மட்டுமல்ல, மிகப் பெரிய வாடிக்கையாளர் தளத்தையும் கொண்டிருக்கிறது. மிகச்சிறந்த வல்லுநர்களைக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படும் அந்நிறுவனம் சமீப காலங்களில் மிகப் பெரிய பொருளாதாரச் சவால்களைச் சந்தித்து வந்தது. சற்றே சோம்பேறியான புத்திசாலிகளைக்(?) கொண்டிருந்ததனாலோ என்னமோ, மிகத் தாமதமாகத்தான் அந்நிறுவனத்தின் செலவீனங்களைக் குறைக்க வேண்டியிருப்பதை அவர்கள் கண்டறிந்தனர்…

உடனே அது தனது முதல்நிலை நிர்வாகக் குழுவிற்கு செலவினைக் குறைக்க ஆலோசனை கேட்டு அறிக்கை விடுகிறது. ஆலோசனைக் குழுவோ, இந்த இரு நிர்வாகிகளின் பொறுப்பில் அச்செயலை விட்டு இன்னும் ஒரு மாதத்தில் அதற்கான திட்டத்தைக் கொடுக்கச் சொல்லி கட்டளையிடுகிறது….இனி அவர்கள் இருவரும் பேசிக் கொள்கிறார்கள்….

இடம்: ஒரு ஐந்து நட்சத்திர விடுதி!!!

நீல்சிங்ஜி, நாளைக்கு வெள்ளிக்கிழமை

ஆமா சாட்டர்ஜி சார், இன்னிக்கு வியாழக்கிழமை!!!

கடுப்பேத்தாதீங்க நீல்சிங்ஜி, நாளைக்கு நாம திட்டத்தைக் கொடுக்க வேண்டிய கடைசி நாள், இன்னும் உருப்படியா நாம ஒண்ணும் செய்யலை….

என்ன பண்றது சாட்டர்ஜி சார், இவ்ளோ கஷ்டமான விஷயத்தை நம்மளை மட்டும் தீர்த்து வைங்கன்னா நாம என்ன பண்றது? எல்லாரும் சேந்து செலவு பண்ணுவாங்களாம், ஆனா செலவு குறைக்கறது எப்படிங்கறதை மட்டும் நாம ரெண்டு பேருந்தான் சொல்லனும்னா நாம என்ன செய்ய முடியும்? இடியட்ஸ்….

சரி, சரி விடுங்க, சரக்கு வாங்கிட்டு வரச் சொல்லி ஆளை அனுப்பிட்டீங்களா???

ஓ, அப்பவே ஆர்டர் பண்ணிட்டேன், சரக்கு எல்லாம் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடும், ஆனா இந்தப் பாழாப் போன திட்டந்தான் வரமாட்டேங்குது…..அய்ய்ய்யோ, சட்டர்ஜி சார், சரக்கு, சைட் டிஸ் எல்லாம் ஆர்டர் பண்ணேன், ஆனா இந்த ஊறுகாயை மறந்துட்டேனே!!!

எதையோ யோசித்துக் கொண்டிருந்த சட்டர்ஜியின் முகத்தில் திடீரென்று பல்பு எரிந்தது……நீல்சிங்ஜி ஒரு ஐடியா!!! உடனே நம்ம ஆட்கள் எல்லாருடைய பயணத் திட்டத்துலியும் ஒரு மாற்றம் பண்ணிடலாம்…முதல் கட்டமா, நம்ம ஆட்கள் யாரும், ரஷ்யா, நார்வே, கனடா, ஸ்வீடன், ஆப்பிரிக்கா இங்கல்லாம் போகக் கூடாதுன்னு அறிவிச்சிரலாம்!!!

நீல்சிங் புரியாமல் முழிக்க, சாட்டர்ஜியோ மொபைல் போனில் கால்குலேட்டரை எடுத்து கணக்கு போடுகிறார். நீல்சிங்ஜி, இப்பிடி பண்ணா மாசம் ஒரு கோடி செலவு கம்மியாவும்பா!!!

ஒரு கோடிங்கிறது ரொம்ப சின்ன அமவுண்ட்டு சாட்டர்ஜி சார்!!! சரி, வழக்கமா நம்மாளுங்க பிஸினஸ் க்ளாஸ்லதான் போவாங்க, அதுனால அமவுண்ட்டுல இன்னும் ஒரு 30% சேத்துக்கோங்க….

கரெக்ட், அது மட்டுமில்ல, வழக்கமா நம்மாளுங்க வெளிநாடு போனா, ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்லதான் தங்குவாங்க…அதுனால அதையும் கொறைச்சா மாசம் ரெண்டு கோடி வருது…அப்ப வருசத்துக்கு அப்ராக்ஸிமேட்டா 25 கோடி செலவு கம்மியாகும்!!!

ம்ம்ம், ஆனா 25 கோடி ரொம்ப கம்மியாச்சே?

ஆமால்ல,…………. ஒண்ணு பண்ணுங்க, நீங்க வோர்ல்டு மேப்பை எடுத்துட்டு வாங்க, நான் லேப்டாப்பை எடுக்கறேன், இன்னும் சில நாட்டைச் சேத்தலாம்…

ம்ம்ம், ஆங், ஜப்பானை சேத்துங்க, அப்புறம் சீனா, கொரியா, இத்தாலி….சுவிட்சர்லாந்து

யோவ் அறிவிருக்கா? சுவிட்சர்லாந்தை சேத்தச் சொல்றீங்க, அப்புறம் வெயில் காலத்துல நாம எங்க போறதாம்? இந்த சுவிட்சர்லாந்து, தாய்லாந்துலாம் சேத்த வேணாம்…வேணும்னா சிங்கப்பூர், மலேசியா, துபாய்லாம் சேத்துக்கலாம்….

ஆனா சட்டர்ஜி சார், இங்கல்லாம் நம்மளோட டெவலப்மெண்ட்சுக்கு ஏத்த மாதிரி கத்துக்க வேண்டிய விஷயம் நிறைய இருக்கே?

நீல்சிங்ஜி, அதெல்லாம் கம்பெனியோட தலையெழுத்து!!! நமக்கென்ன வந்துது? நாம இந்த திட்டத்தை சொல்ற மாதிரி சொன்னா, நாம நல்லவங்களா போயிடலாம், இப்போதைக்கு அடுத்தா வாரம் நாம ஆப்பிரிக்கா போக வேண்டிய திட்டத்தை கேன்சல் பண்ணிடலாம், அந்த ஊருக்கெல்லாம் போறதுல எனக்கு முன்னமே புடிக்கலை, இதை சாக்கா வெச்சு கட் பண்ணிட்டம்னா நமக்கு நல்ல புகழ் கிடைக்கும், …இப்ப எக்சல்ல கணக்கு போடுங்க…கூட வேணும்னா இன்னும் நிறைய நாடு சேத்திக்கலாம், ஆனா நம்ம டார்கெட் 200 கோடி வருசத்துக்கு சேமிக்கிற மாதிரி கணக்கு காமிக்கனும் நாளைக்கு, என்ன சொல்றீங்க?

சூப்பர் ஐடியா சட்டர்ஜி சார்!!!

ஓகே, நான் சொல்ற நாட்டையெல்லாம் சேத்துங்க…

டொக் டொக்

என்ன அது?

நாம ஆர்டர் பண்ண சரக்குதான் வந்திருக்கு, ஆனா ஊறுகாய்தான் மறந்துட்டேன்…

பராவாயில்லை, பராவாயில்லை விடுங்க, அதான் திட்டமே ரெடியாயிருச்சே, இனிமே எதுக்கு ஊறுகாய்?

———————————————————————————————————————————————————————————————

அது சுமார் 15 வருடங்களேனும் முந்தைய காலகட்டம். பொருளாதரச் சீர்திருத்தக் கொள்கையால் பல இந்திய நிறுவனங்கள் புதுப்புது போட்டிகளையும் சவால்களையும் சந்தித்துக்கொண்டிருந்தன. இதனை எதிர்கொள்ள அவர்கள் பல்வேறு உத்திகளைக் கையாள வேண்டியிருந்தது. வாகனதயாரிப்புத் துறையில் இருந்த மாருதிசுசூகி நிறுவனமும் அப்போது இதே வகையானச் சவாலைத்தான் சந்தித்தது.

பொதுவாக எந்த ஒரு நிறுவனமும் தனது நிறுவனத்தின் விற்பனையை / சேவையை அதிகரிக்க இரு வகையானச் தத்துவங்களைக் கையாள்வார்கள். ஒன்று காம்பிடிட்டிவ் அட்வாண்டேஜ் (Competitive advantage – தனது பொருளை / சேவையை மற்றவையுடன் இருந்து வித்தியாசப்படுத்திக் காட்டுபவை), மற்றொன்று ப்ரடக்டிவ் அட்வாண்டேஜ் (Productive advantage – மற்ற பொருட்களை விட தனது பொருட்களை குறைந்த விலையில் விற்றல்). விலையைக் குறப்பது என்றால் சும்மாவாக குறைத்து விடவிடியாது.

தனது வாகனங்களை குறைந்த விலைக்கு விற்க மாருதி நிறுவனம் அமல்படுத்திய முதல் விஷயம் லீன் மேனேஜ்மெண்ட் (Lean management). இந்த முறையில், அவர்கள் தங்கள் நிறுவனத்தின் அனைத்து பொருட்கள், செயல்கள் எல்லாவற்றையும் கேள்விக்குட்படுத்தினர் – அதன் தேவை என்ன, செலவு என்ன, எவ்வாறு குறைக்க முடியும் என்று. இந்த முறையில் அவர்கள் மாற்றம் ஏற்படுத்திய முதல் விஷயம் – ஒரு தொழிலாளி அசம்ப்ளிங் யூனிட்டில் வேண்டிய டூல்சை எடுக்க நடக்க வேண்டிய தூரத்தை 15 அடிகளிலிருந்து 6 அடியாகக் குறைத்தனர் (இதற்காகச் செலவு செய்து, ராக் சிஸ்டத்தை இடம் மாற்றி, அதனுடன் ஒரு கண்வேயர் சிஸ்டத்தை இணைத்தார்கள்). மிகச் சாதாரணமாகக் காணப்படும் இந்தச் செயலின் மூலம் அவர்கள் அடைந்த பயன், ஒரு நாளில் 20 நிமிடங்களை அவர்களால் சேமிக்க முடிந்தது. இந்த 20 நிமிடங்களில் அவர்கள் கூடுதலாக இரண்டு கார்களை தயாரித்தனர் (மாசம் சுமாராக 60 கார்கள் – ஒரு காருக்கு அடிப்படை லாபம் ரூபாய் 20,000 எனில், அதே நிலையானச் செயல்களுக்கு அவர்கள் அடைந்த கூடுதல் லாபம் (60*20000*12) வருடத்திற்கு ரூ 14,400,000 (ஒரு கோடியே நாற்பத்து நான்கு லட்சம்). அப்படி ஆரம்பித்த அவர்களது சீர்திருத்தம், வெண்டார் மேனேஜ்மெண்ட், டிஸ்ட்ரிப்யூஷன் சிஸ்டம் என்று பல தளங்களுக்கும் கொண்டு சென்றதன் விளைவுதான், குறைந்த விலையில் அவர்களால் காரினை விற்க முடிந்தது.

———————————————————————————————————————————————————————————————

ஆக ’காஸ்ட் கட்டிங்’ என்ற இந்த தாரக மந்திரம் இந்திய துணைக் கண்டத்தின் நிறுவனங்களில் ஒன்றும் புதிய விஷயம் இல்லை. சில நாட்களாக காணமல் போயிருந்த இந்த தாரக மந்திரம் மீண்டும் பழைய உத்வேகத்துடன் பலருடைய வாயிலிருந்தும் உதிரத்துவங்கியிருக்கிறது. ரிசஷன், பொருளாதார மந்தம் என்று பல சவால்களைச் சந்தித்துக் கொண்டிருக்கும் இந்தியச் சந்தையில் இது ஒன்றும் ஆச்சரியப்படத்தக்க விஷயம் இல்லை என்றாலும், நிறுவனங்களில் மட்டுமே உதிர்க்கப்பட்ட இந்த மந்திரத்தை இந்த முறை பல அரசியல்வாதிகளும் உதிர்த்ததுதான் மிகப் பெரிய ஆச்சரியம்…

காஸ்ட் கட்டிங் என்ற தாரக மந்திரத்தை அரசியல்வாதிகள் உதிர்த்தாலும், அதனைத் தொடர்ந்து செய்த காமெடிதான், இதுவரை எந்த திரைப்படத்திலும் வந்த்தை விட மிகப் பெரிய காமெடியாக இருக்கிறது… செலவுகளைக் குறைக்க மத்திய அரசு எடுத்த முதல் நடவடிக்கை தனது அமைச்சர்களை, பாராளுமன்ற உறுப்பினர்களை வெளிநாட்டுப் பயணங்களைக் குறைத்துக் கொள்ளும்படியும், விமானத்தில் சாதாரண வகுப்பில் பயணம் செய்யும் படியும் அறிவுறுத்தியுள்ளது இது தவிர பிரணாப் கேட்டுக்கொண்ட இன்னொரு விஷயம், அமைச்சர்கள் தங்குவதும், செய்தியாளர்களுடனான சந்திப்பை நடத்துவதையும் ஐந்து நட்சத்திர விடுதிகளில் நடத்தக் கூடாது என்பதுதான், ஏனெனில் அது தேவையற்ற செலவு என்பதுதான் காரணமாம்!!! அப்படி என்றால் இத்தனை நாள் அத்தகைய தேவையற்ற செயல்கள்தான் செய்யப்பட்டனவா என்ற கேள்வி யாரும் கேட்கவுமில்லை, அதற்கு பதிலுமில்லை.

அறிவிப்பு வந்தவுடன் சொல்லி வைத்தாற் போன்று சசி தாரூரும், எஸ்.எம். கிருஷ்ணாவும் தங்களது விடுதி அறையை காலி செய்து விட்டு அரசு விருந்தினர் மாளிகைக்கு ஜாகையை மாற்றினார்கள்… அவர்களுக்கென்று அரசு மாளிகை இருக்கும் போது இத்தனை நாள் ஏன் நட்சத்திர விடுதியில் அவர்கள் தங்கினார்கள் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்!!! சரி போனாவர்கள் சும்மா சென்றார்களா? அவர்கள் விடுதியில் தங்கியிருந்த பொழுது சொந்த செலவிலதான் தங்கினோம் என்றும், இருந்தும் பிரணாப்ஜியின் வேண்டுகோளுக்காக காலி செய்கிறோம் என்று அறிக்கை வேறு!!! எனக்கு புரியாத விஷயம் என்னவென்றால், அவர்களுடைய சொந்த காசுன்னா யாரு சொன்னா என்னான்னு அங்கேயே தங்கலாமே!!! எதற்காக இதை செலவைக் கம்மி பண்ணும் விஷயத்தில் செய்தியாகக் கொண்டு வரவேண்டும்? இதுதான் போகட்டும் என்றால், இந்த வேண்டுகோளை ஏற்று பஞ்சாயத்து ராஜ் அமைச்சர், நார்வேக்கு போறதா இருந்த பயணத்தை ரத்து செய்கிறேன்னு பெருமையா அறிக்கை விடுகிறார்!!! எனக்கு தலையே சுத்துது, இந்தியாவோட பஞ்சாயத்து முறைக்கும், நார்வேக்கும் என்ன சம்பந்தம்? ஏற்கனவே கூவத்தை சுத்தம் பண்ண ஐடியா கற்றுக் கொள்கிறோம் என்று அமெரிக்காவிற்கு சுற்று பயணம் சென்று வந்த நம்மாட்கள் காதில் இது போன்ற ஐடியாக்கள் விழுந்தால் என்னாவது?

என்னதான் நகைச்சுவைக்கென்று தனித்தனி சானல்கள் வந்தாலும் அரசாங்கத்தின் செய்திகளில் அல்லது அறிவுப்புகளில் தருகின்ற காமெடிக்கு இணையே இல்லைதான். கூட்டணி அரசு என்பதால் ஒன்றாகவே இருந்தாலும் இந்த விஷயத்தில் போட்டி போட்டுக் கொண்டு காமெடி செய்வதில் மாநில திமுக அரசோ அல்லது மத்திய காங்கிரசு அரசோ சளைப்பதில்லை… மத்திய அரசுக்கு செலவுகள் அதிகமாகிறது என்று அமைச்சர்களை விமானத்தில் சாதாரண வகுப்பில் பயணம் செய்யுங்கள் என்று பிரணாப் சொன்னதன் மூலம் தமிழ் செய்தி ஊடகங்கள் உட்பட அனைத்தும் அவரை மொய்த்ததை காணப் பிடிக்கமாலோ என்னமோ, மாநில அரசின் அத்தனை அமைச்சர்களும், அதிகாரிகளும் வேலை வெட்டியை விட்டு விட்டு கருத்தரங்கு நடத்துகிறார்கள், நமக்கு நாமே திட்டத்தின் மூலமாக விருதினை வழங்குகிறார்கள், உலகத் தமிழ் மாநாடு நடத்துப் போகிறோம் என்று அறிக்கை விடுகிறார்கள்…

தாமதமாக செயல்படுத்திவருவதால் பொதுத்துறையின் 54 திட்டங்களில் (தெர்மல் மற்றும் ஹைட்ரோ) ஏற்பட்டுள்ள நட்டம் மட்டுமே சுமார் ரூ 29,000 கோடிகள். இந்த லட்சணத்தில்தான், இன்னும் வாழ்க்கைத்தரத்தில் மற்ற முன்னேறிய மாநிலங்கள் அளவுக்கு முன்னேறாத உத்திரபிரதேசத்தில் ரூ 2,500 கோடிக்கு சிலைகளை அமைக்கும் திட்டம் கனஜோராக நீதிமன்ற உத்தரவையும் மீறி நடக்கிறது. இதேநிலை தொடர்ந்தால் செலவை ஈடுகட்ட, அமைச்சர்களிடமிருந்து மட்டுமல்ல எல்லாரிடமிருந்தும் சம்பளத்தில் 20% வாங்கினாலும் வாங்குவார்கள் (ஆனால் அமைச்சர்களிடம் சொன்னது போல் கண் துடைப்பாக இல்லாமல், நம்மிடம் உண்மையாக வாங்கி விடுவார்கள்)

என்னதான் ஜனநாயகம், மக்கள் அரசு என்று பெயருக்குச் சொன்னாலும், அரசின் பல நடவடிக்கைகளை விருப்பமிருந்தாலும், இல்லாவிட்டாலும், கேள்விக்குட்படுத்தும் உரிமையோ அல்லது தெளிவோ மக்களுக்கு இருப்பதில்லை. தப்பித்தவறி தெளிவடைந்து விடக் கூடாது என்றுதானோ என்னமோ பல விஷயங்களில், அரசுக்கும், பயனாளர்களுக்கும் இடையே பெருத்த இடைவெளியே இருக்கிறது……காஸ்ட் கட்டிங் என்ற விஷயத்தில் மாருதி முதல் இன்றைய நேனோ வரை பல நிறுவனங்கள் முன்னுதாரணமாக இருந்தது மட்டுமல்ல, உலகையே திரும்பிப் பார்க்கவும் செய்துள்ளனர். ஒரு காலத்தில் இந்தியாவில் பொருளாதார்ச் சீர்திருத்தத்தை அறிமுகப்படுத்திய ஒருவருடைய தலைமையில் அமைந்த ஒரு அரசில்தான் இது போன்ற பொறுப்பற்ற, விளம்பரத்தை மட்டுமே தேடுகின்ற, ஆதாயமளிக்காத வெட்டி விஷயங்கள் நடந்தேறுகின்றன என்பது வேதனையை மட்டுமல்ல, நம் நாட்டின் எதிர்காலம் பற்றிய பயத்தையும் ஏற்படுத்துகிறது….

தொடர்புடைய பதிவு:

http://www.nesamudan.com/blog/2009/09/16/austerity/ 

பிரிவுகள்:அரசியல் குறிச்சொற்கள்:

இவனுங்க காமெடி தாங்க முடியலடா சாமி!!!

என்னடா, வாரக் கடைசில குவார்ட்டர் அடிக்கப் போகாம விஜய் படம் பாத்துட்டு வந்த மாதிரி ‘திரு’ ‘திரு’ ன்னு முழிச்சிட்டிருக்க?

டேய், வவுத்தெரிச்சலை கிளப்பாத, ஏற்கனவே குவார்ட்டர் அடிச்சிட்டுதான் வந்தேன்!

அப்புறம் ஏண்டா இப்படி உக்காந்துட்டிருக்க?

இல்லடா, ரொம்ப நாளாச்சேன்னு கொஞ்சம் நியூஸ்லாம் படிச்சேன்னா, ஒரேடியா குழம்பிட்டேன், அதான்…

அப்படி என்னாத்தைடா படிச்சு குழம்பிட்ட?

இல்லடா, கொஞ்ச நாளைக்கு முன்னால கலைஞர், யாரோ தலைவர் பதவிக்கு ஆசைப்பட்டதுனால, குட்டை மனப் பேராசை அப்படி இப்படின்னு என்னன்னமோ சொல்லி ஒரு கவிதை படிச்சாரு ஞாபகமிருக்கா?

ஆமா, அவரு யாரை திட்டுனாருன்னு யோசிச்சு குழம்பிட்டியாக்கும்?

அது யாரோவோவா இருந்துட்டுப் போகட்டும், என் சந்தேகம் அதைப் பத்தி இல்லை, என் சந்தேகம் என்னன்னா, ஒரு தொண்டனா இருக்கறவன், கட்சித் தலைவர் பதவிக்கு ஆசைப் படறது தப்பா என்ன? சரி அது அப்படியே தப்புன்னு வெச்சுகிட்டாலும், ஒரு முறை தலைவனாவனும்னு நினைக்கிறதே பேராசைன்னா, எப்பவும் தான் மட்டும் தலைவரா இருக்கனும்னு நினைச்சா அது எவ்ளோ பெரிய பேராசை, இல்ல தனக்கப்புறம் தன் புள்ளைங்க மட்டும் தலைவனா இருக்கனும்னு நினைச்சா அது எவ்ளோ பெரிய பேராசை?…… ஏண்டா எதுவும் பேசமாட்டேங்குற?

அடியேய் உனக்கு சனி பக்கத்துல டபுள் காட் பெட் போட்டு படுத்துட்டு இருக்குடியேய்!!! எலக்சன் டைம்ல மக்கள் யோசிக்கவே கூடாது, அதுவும் இந்த மாதிரில்லாம் யோசிக்க அரம்பிச்சா, வீட்டுக்கு ஆட்டோதாண்டி!!!

ஏண்டா சந்தேகம் கேக்கறது தப்பா என்ன? சரி, சட்டக் கல்லூரி பிரச்சனையில, ஏண்டா போலீஸ் வேடிக்கை பாத்துட்டு இருந்தது, உள்ள போயி தடுத்துருக்கலாமேன்னு கேட்டா, அனுமதி இல்லாம போகக் கூடாதுன்னு சொன்னாங்க, ஆனா அதே கோர்ட்டுல, அனுமதி இல்லாமயே, 4000 பேரு உள்ள பூந்து போட்டு தாக்குனாங்க. இதுல காமெடி என்னான்னா, மும்பைல, தாஜ் ஹோட்டல்ல எல்லாம் தீவிரவாதிகள் பூந்து அட்டூழியம் பண்ணப்ப கூட, துணை ராணுவப்படை வந்ததுக்கு 6 மணி நேரம் பண்ணாங்கன்னு பிரச்சனை ஆச்சு, ஆனா இங்க, ஒரு மணிநேரத்துக்குள்ளியே, 4000 பேரை கொண்டு வந்துருக்காங்க அப்படின்னுல்லாம் வக்கீல் சொல்றாங்களே அப்படீன்னா இது திட்டமிட்ட தாக்குதலா இருக்கும்னு சொல்றாங்களே அதுக்கு என்ன பதில்?

ம்ம்ம், டேய், நம்ம அரசாங்கம் அவ்ளோ விரைவா செயல்படுதுன்னு அர்த்தம்டா! இதை ஏன் நீ இந்த மாதிரி பாக்க கூடாது. டேய், உன்பேரை பேரை பேசாம செந்தில்னு மாத்திக்கோ, செந்தில்தான் கவுண்டமணிகிட்ட இப்படில்லாம் சந்தேகம் கேட்டுகிட்டே இருப்பாரு………………….டேய் திடிர்னு ஏண்டா இப்படி யோசிக்கிற?

இல்ல மச்சி, நீ பேர்னு சொன்னவுடனே திடீர்னு எனக்கு ஒரு சந்தேகம்!,……. காந்தி யாரு?

என்னடா, டீக்கடையில பழைய பேப்பர் படிச்சவனாட்டம் கேக்கற?

டேய் கிண்டல் பண்ணாம சொல்டா?

காந்தி வந்து, நம்ம நாடு சுதந்திரம் அடையறதுக்கு, அஹிம்சை போராட்டத்தை எடுத்துச் சென்றதுல முக்கிய காரணமானவர். இதுல உனக்கு என்ன சந்தேகம்?

எனக்கு அவர் மேல எந்த சந்தேகமும் இல்ல, காந்தி சுதந்திரத்திற்காக பாடு பட்டது எனக்கும் தெரியும், ஆனா அதுக்காக ஒரு சிலர் அவரு பேரை பின்னாடி சேத்துகிட்டு பண்ற அழிச்சாட்டியம், பேசுற பேச்சு தாங்க முடியலைடா!

ஏண்டா, சந்திராசாமிக்கும், அரவிந்த்சாமிக்கும் சாமின்னு முடியுது. அதுக்காக ரெண்டு பேருக்கும் ஒரே கொள்கைன்னு அர்த்தமா? இதுல எல்லாம் இவ்ளோ டீப்பா யோசிக்க கூடாதுடா!

இல்லா மச்சான், இவங்க, பண்ணாத அழிச்சாட்டியம் எல்லாம் பண்ணிட்டு, ஒவ்வொரு முறையும் பேரு பின்னாடி காந்தின்னு வர்றப்ப சங்கடமா இருக்குடா, இவங்க எல்லா தப்பும் பண்ணட்டும், தயவு செஞ்சு அந்த பேருல இருந்து காந்தியை தூக்கிருங்கன்னு மனு கொடுக்கலாம்னு யோசிக்கிறேன். சரி இதுலதான் இந்தப் பிரச்சனைன்னா, ராஜீவை தப்பா பேசுனாவோ, சோனியாவை விமரிசனம் பண்ணாவோ, மன்மோகன் சிங்கை விமரிசனம் பண்ணாவோ தேசிய பாதுகப்பு சட்டதுல கலைஞர் உள்ள தூக்கி போட்டுறாரே, அதுக்கு பேசாம “கூட்டணி பாதுகாப்பு சட்டம்னு“ பேரு வைக்கலாம்ல, அதை ஏன் “தேசிய பாதுகாப்பு சட்டம்”னு சொல்லனும். தயவு செஞ்சு இது ரெண்டுக்கும் பேரு மாத்த சொல்லனும்டா!!!

நீ ரொம்ப ஓவரா பேசுற! இவ்ளோ பேசுறியே நீ ஏன் எலக்சன்ல நிக்கக் கூடாது?

இது கூட நல்ல ஐடியாதான், அதுக்கு என்னடா தகுதி வேணும்?

ஐய்யோ, அந்த கருமத்துக்கு தகுதியே வேணாண்டா! ரவுடி, கொலைகாரன், ரெண்டு பொண்டாட்டி கட்டுனவன், ஜெயிலுக்குப் போனவன், யாரு வேணா நிக்கலாம், சொல்லப் போனா அவங்கதான் நிக்கறாங்க!

டேய் சீரியசா சொல்லுடா…

டேய், ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு தகுதிடா. இப்ப திமுகன்னா, உன் நெருங்கிய சொந்தக்காராங்கள்ல யாருக்காவது பேரு, அழகிரி, கனிமொழி, ஸ்டாலின்னு இருக்கனும். அதிமுகன்னா, நவகிரகத்தை சுத்தி வர்ற மாதிரி சுத்தி வந்து அம்மா கால்ல உழுவணும், இப்படி பல இருக்குடா!!!

சரி காங்கிரஸ் சார்பா நிக்கனும்னா?

ம்க்கும்ம், அதுக்கு நீ நிக்காமயே இருக்கலாம்!

இல்லடா, திமுக பாட்டுக்கு, 16 தொகுதின்னு அள்ளி வழங்கிடுச்சி, தொகுதிக்கு ஒரு வேட்பாளர்னு வெச்சுகிட்டா கூட, மொத்தம் 16 பேரு வேணுமே, அவ்ளோ பேரு அந்தக் கட்சில இருக்காங்களா என்ன?—————-என்னடா பதில் சொல்லாம அப்படி பாக்கற?

டேய் என் வாழ்க்கைல நான் தண்ணியே அடிச்சதில்லை, இன்னும் கொஞ்சம் நேரம் உன்கிட்ட பேசுனா, என்னையே தண்ணி அடிக்க வெச்சிருவ போலிருக்கு! என்னை உட்டுடு!

சரி கடைசியா ஒரு கேள்வி இருக்கு பதில் சொல்லு, எலக்சன்ல யாருக்கு ஓட்டுப் போடறது?

ம்ம்ம்ம், முதல்ல குருவி படம் நல்லாயிருந்துதா இல்லை வில்லு படம் நல்லாயிருந்துதான்னு சொல்லு, அப்புறம் அதுக்கு பதில் சொல்லுறேன்!!!

எல்லோரும் சுயநலப் பேய்கள்தான்…

ஆரம்பித்து விட்டது தேர்தல் கூத்துகள். யார் கேவலமாக நடந்து கொள்வது என்று கட்சிகளுக்குள் கடும் போராட்டம் நடைபெறுகிறது. எததனை காலமானாலும் நாங்கள் மாறப் போவதில்லை என்று ஆரம்பத்திலேயே தங்களது முகத்தை பாஜக ‘வருண் காந்தி மூலம் வெளிப்படுத்தியது. அதை விடக் கொடுமை, ஜெயிலுக்குள் சென்று பார்த்து விட்டு வந்த மேனகா காந்தி ‘தன் மகன் மிகுந்த தைரியசாலி, அவனை நினைத்து பெருமைப் படுகிறேன் என்று கூறியது!

 

ஒரு காலத்தில் மிருகங்களின் முறையான வாழ்விற்கு கடுமையாகப் போராடியதற்காக நன்மதிப்பைப் பெற்ற இவர், மிருகங்களுக்கான அன்பைக் கூட மனிதர்களிடத்தில் செலுத்த மறுப்பதேனோ? மக்கள் வருண்காந்தியின் பேச்சை ஒத்துக் கொண்டார்களோ இல்லையோ, தாங்கள் நினைத்த புகழ் கிடைத்த திருப்தி பாஜகவிற்கு.

 

இந்தியாவின் மிகப் பெரிய முதியோர் இல்லமாக பாராளுமன்றம் காட்சி அளிக்கின்றது. என் நாட்டின் பிரதமர், முன்னாள் பிரதமர், என் மாநிலத்தின் முதல்வர் என அனைவருமே மருத்துவமனையில் இருந்து வந்த காட்சிகளையெல்லாம் மக்கள் காண வேண்டி வந்தது

 

மத்தியில் நடப்பதை விட, தமிழ் நாட்டில் நடக்கும் கூத்துகள்தான் மிகக் கொடுமை. தமிழகத்தில் வரலாற்றில் எங்கும் கண்டிராத படி, அத்தனை கட்சிகளும் ஈழ மக்களுக்காக அனுதாபம் காட்டினாலும், அங்கு போர், ஏன் முற்றுப் பெற வில்லை என்ற மர்மம் மக்கள் மனதை விட்டு நீங்கவே இல்லை.

 

நேற்றுவரை காங்கிரசுடன் கூட்டணி அமைத்த பாமக இன்று அதிமுகவுடன், ஒருவருடன் ஒருவர் கை கலப்பு வரை சென்ற விடுதலை சிறுத்தைகளும் காங்கிரசும் ஒரே கூட்டணி!. அணிதாவல், கொள்கை மாற்றம் என்று நம் அரசியல்வியாதிகளின் திறமையை கண்டு பச்சோந்திகள் கூட பொந்தை விட்டு வெளி வர மறுக்கின்றன. ஈழப் பிரச்சனையில் கலைஞர் ஏன், தன் எம்பிக்களையும், அமைச்சர்களையும் பதவி விலகச் சொல்ல வில்லை என்று கேள்வி எழுப்பிய அதே பாமக, தனது மகனையும், அமைச்சர்களையும் பதவி விலகச் சொல்லாத அதே பாமக, இப்போது அதிமுகவுடன் கூட்டணி வைத்தவுடன் அவர்களை பதவி விலக வைத்திருக்கிறது. கேட்டால் கூட்டணி தர்மம் என்று வியாக்கியாணம் பேசுகிறது.

 

இவர்கள் எல்லாரையும் தூக்கிச் சாப்பிடும் காமெடியை திமுகவும், காங்கிரசும் அரங்கேற்றி வருகிறது. என்னதான் முதுகெலும்பு ஆபரேசன் வெற்றி என்று மருத்துவர்கள் சொன்னாலும், செய்திகள் வந்தாலும், அப்படி ஒன்றும் வெற்றி இல்லை என்பதை ஈழத் தமிழர்களுக்காக திமுக என்றும் பாடுபடும், ஈழத்தில் அமைதி ஏற்பட பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வார்த்தைகளின் மூலம் நிரூபித்துக் கொண்டே இருக்கிறார் தமிழினத் தலைவர். இதன் அடுத்த கட்ட காமெடிதான், வியாழக்கிழமை (09.04.09) அன்று கட்சி பேதமின்றி பேரணி நடத்துகிறாராம். தவிர பிரதமர் மன்மோகன்சிங்குக்கும், உண்மைப் பிரதமர் சோனியாவுக்கும், ஈழப் பிரச்சனை சார்பாக தந்தி கொடுத்திருக்காராம்.

 

இந்த விஷயத்தில் மட்டும் மிகச் சரியாகவே நடந்து கொண்டிருக்கிறார் தலைவர். இன்னமும் கிராமங்களில், எழவு செய்தியைச் சொல்ல தந்தி முறையைத்தான் பயன்படுத்துகிறார்கள். அப்படி இருக்கையில், இப்போது தந்தி அடித்து, நடவடிக்கை எடுக்கச் சொல்லியிருக்கிறார். என்ன ஒரே குழப்பம் என்றால், பிரதமர்களை நடவடிக்கை எடுக்கச் சொல்லுகிறாரா, அல்லது எல்லாவற்றையும் முடித்து விட்டு எழவுக்கு வந்து சேருங்கள் என்று அழைக்கிறாரா என்றுதான் புரியவில்லை. அதற்கு சப்பைகட்டு கட்டிக்கொண்டு, தலைவர்தான் மிகப் பெரிய தியாகி, அவரளவு இந்த விஷயத்தில் ஒழுக்கம் வேறு யாரும் கிடையாது என்று புள்ளி விவரம் பேசும் அறிவுஜீவிகளைப் பார்க்கும் போது, படிப்பறிவுக்கும் பகுத்தறிவுக்கும் சம்பந்தம் கிடையாது என்ற உண்மையே மனதில் நிற்கிறது

 

தனது கட்சிக்கு, இந்திய நாட்டிலிருந்து ஒரு தலைவரை தேர்ந்தெடுக்க திராணியில்லாத காங்கிரசின் கையில் அடுத்த 5 வருடங்கள் இருந்தால் என்ன ஆகும் என்று நினைத்தாலே பயமாய் இருக்கிறது. இலங்கையில் எம்மக்களை அழிப்பதோடில்லாமல், இந்திய நாட்டையும் தூக்கி தீவிரவாதிகளிடமும், அமெரிக்காவிடமும் அடகு வைத்து விடுவார்களோ என்ற அளவிலேயே ஆட்சி இருக்கிறது. தேசிய பாதுகாப்பு சட்டத்திற்கும், பொடாவிற்கும் உள்ள வித்தியாசம்தான் காங்கிரசுக்கும், பாஜகவுக்கும் இருக்கிற வித்தியாசம்

 

இவர்கள் எல்லாரையும் தூக்கிச் சாப்பிட்டுவிடுவார்கள் என் நாட்டு மக்கள். சுரணை என்றால் விலை எவ்வளவு என்று கேட்பார்கள். சீக்கியர்கள் தனது தலைப்பாகைக்கு கொடுக்கும் மரியாதையை, எம்மக்கள் தனது சகோதரர்களின் தலைகளுக்கு கொடுப்பதில்லை. இவர்களுக்கு தன்மானத்தை போதிக்க கூட, அதே சீக்கியர்கள் மத்தியில் இருந்து ஒருவர் ஷூவை வீச வேண்டி இருக்கிறது.

 

யாருக்காவது அடிமையாய் இருப்பது என்றால் அவர்களுக்கு கொள்ளை விருப்பம். குவார்ட்டரும், கொஞ்சம் காசும் போதும், ஒரு சிலருக்கு, யாருக்கு ஓட்டு போடுவது என்று தீர்மானிக்க. அரசு அலுவலர்களுக்கோ, ஒழுங்காய் வேலை செய்யச் சொல்லி வற்புறுத்தாமல், கேட்கும் போனசை கொடுக்கும் கலைஞருக்குத்தான் அவர்களது நிரந்த ஓட்டு. சில கிருத்துவ அமைப்புகளுக்கோ, மதமாரற்ற தடைச் சட்டத்தை கொண்டு வராமல் இருப்பவர்களுக்கே ஓட்டு. நடுத்தர மக்களோ, டிவிக்கு அடுத்து டிவிடி பிளேயர் கொடுத்தால் ஓட்டுப் போட ரெடியாகி விடுகிறார்கள். ஆக மொத்தத்தில் எல்லாரும் சுயநலப் பிசாசுகளாய் இருப்பதில் கூச்சமே அடைவதில்லை.

 

பிச்சைக்காரனிடம், பத்து ரூபாய் கொடுத்தாலே நடு ரோட்டில் பல்டி அடிப்பான். அதற்கு அடுத்தக் கட்டதிலிருப்பவனுக்கு, நூறு ரூபாய் கொடுத்தால் போதும். நடுத்தரவாசிக்கு, ஆயிரம் கொடுத்தால் போதும், அரசியல்வாதிக்கு, அவரது தலைவர் விருப்பம் என்றால் போது. ஆக மொத்தத்தில் ஈனத்தனத்தை செய்ய எல்லாருமே தயாராக இருக்கிறோம், என்ன, அதற்கான விலைதான் ஆளைப் பொறுத்து மாறுகிறது.

பிரிவுகள்:அரசியல் குறிச்சொற்கள்:,

இவனுங்க காமெடி தாங்க முடியலடா சாமி….

டேய், வாரக்கடைசியும் அதுவுமா ஏண்டா இங்கிலீஸ் படம் போட்டு உயிரை வாங்குற, தயவு செஞ்சு எதாவது தமிழ் சேனல் வையேன்?

மச்சான், நீ சாதா நாள்லியே சும்மா தூங்க மாட்ட, இன்னிக்கு வெள்ளிக்கிழமை வேற, வழக்கமா பண்ற மாதிரி குவார்ட்டர் அடிச்சிட்டு, கமுந்தடிச்சு தூங்க வேண்டியதுதானே, அதை விட்டுட்டு என் உயிரை ஏண்டா வாங்கற?

இல்லடா, நான் இனிமே தண்ணி அதிகம் அடிக்க வேண்டாம்னு இருக்கேன், அது மட்டுமில்ல இந்த சமுதாயத்தைப் பத்தியும் கொஞ்சம் கவலைப் படலாம்னு இருக்கேன்…

அய்யய்யோ, இது எப்பருந்து?

இன்னைல இருந்துதான், இன்னிக்குதான் நீ சொன்ன இந்த வலைப்பதிவு, குழுமத்துலலாம் போய் படிச்சி பாத்தேன், அதுல எத்தனை பேரு இந்த சமூகத்தைப் பத்தி கவலைப்பட்டு என்னென்னமோ பண்றாங்க, அதான் நானும் இப்படி…

டேய், நீ தண்ணி அடிக்கறதை நிறுத்தினது கூட பெரிய விஷயமில்லை, ஆனா சமூகத்தைப் பத்தி கவலைப் படறேன்னு சொன்ன பாத்தியா, அது போதுண்டா, இன்னிக்கு நீ எந்த சானல் சொல்றியோ அதையே நானும் பாக்குறேன். சொல்லு எதைப் போடுறது?

சரி, எதாவது காமெடி வையி…
……………
……………
…………….
என்னடா எல்லாத்துலியும் பாட்டு இல்லாட்டி சீரியலே ஓடுது?உருப்படியா ஒன்னுமே இல்லியா?

மிட்னைட் மசாலாவையும், மெகா சீரியலையும் ஒன்னா பாக்குறியா?

அது எப்படிடா முடியும்?

‘மானாட மயிலாட’ வைக்கிறேன், இல்லாட்டி இதே மாதிரி நிறைய புரோகிராம் இருக்கு, பாரு…

டேய் வேணாண்டா, வாரக்கடைசி, காமெடியா எதாவது பாக்கலாம்னா கடுப்பேத்துறானுங்க…

மச்சான், காமெடி பாக்கனும்னா, காமெடி சானலேதான் பாக்கனுமா? சன் நியுஸோ இல்ல ஜெயா நியுஸோ பாரு, அது சினிமா காமெடியை விட பயங்கரமா இருக்கும்.

உண்மையாவா?

செத்துபோன எங்க மேனேஜரோட தாத்தா மேல சத்தியமா சொல்றேன்…

சரி நியுஸே வெய்யி, அதுல எது நல்லா காமெடியா இருக்கும்?

ரெண்டும் நல்ல காமெடிதான், ஒண்ணு வடிவேலு காமெடி, இன்னொன்னு கவுண்டமணி காமெடி, உனக்கு எது வேணும்னு சொல்லு

அதென்னடா வடிவேலு காமெடி, கவுண்டமணி காமெடி?

சன் நியூஸ் வந்து வடிவேலு காமெடி, ஜெயா நியூஸ் கவுண்டமணி காமெடி!!!

எப்படி?

வடிவேலு காமெடி எப்படி இருக்கும்? தான் அடி வாங்கியே மத்தவங்களை சிரிக்க வைக்கறது வடிவேலு காமெடி!!!

ஓ! அதாவது வக்கீல்கள் போராட்டத்தை நிறுத்தாட்டி, நான் ஆஸ்பித்திரிலியே உண்ணாவிரதம் இருப்பேன்னு சொன்னாங்களே அது மாதிரியா?

அதேதான்!!!

ஆனா அடிவாங்குனதுக்கப்புறம், ‘நீ ரொம்ப நல்லவன்னு’ சொல்ல நாலு பேரு கூட வேணுமே?

அதான் அவரு உண்ணாவிரதம் இருக்கறேன்னு சொன்னதுக்கப்புறம் அறிக்கை நிறைய வந்துதே?

ஆமாமா!!! கரெக்டுதான்!!!

சரி கவுண்டமணி காமெடி எப்படி?

கவுண்டமணி அடி வாங்க மாட்டாரு, ஆனா மத்தவங்களை திட்டியோ, அடிச்சோதான் காமெடி பண்ணுவாரு…

ஓ, அடிக்கடி நியுஸ்ல தலைவி அறிக்கை விடுறப்ப ‘மைனாரிட்டி திமுக’ன்னுலாம் சொல்றாங்களே அதுமாதிரி!!!

அதேதாண்டா, இப்பதான் நீ நம்ம லைனுக்கே வந்துருக்க!!!

சரி எனக்கு ஒரு சந்தேகம்?

என்ன?

இல்ல எல்லா கட்சியுமே மைனாரிட்டி மக்களை முன்னேத்துவோம், மைனாரிட்டி மக்களுக்காக போராடுவோம்னு சொல்றாங்களே, அப்படி பாத்தா கவுண்டமணி வடிவேலுவை முன்னேத்த போராடுனும்தானே?…. டேய், டேய் ஏண்டா அப்படி பாக்குற?

இன்னிக்கு ரொம்ப நேரம் வலைப்பதிவுல, குழுமத்துல இருந்தியா?

ஆமா, ஏன் கேக்குற?

உன் பேச்சுலியே தெரியுது!!!!

சரி சரி, கவுண்டமணி காமெடியே போடு…
………..
………….
…………
செய்தி: ஈழத்தமிழர்களுக்காக ‘தாயுள்ளம்’ அவர்கள் வருகிற பத்தாம் தேதி உண்ணாவிரதம் இருக்கப் போகிறார்கள்…………..

ஹா ஹா ஹா ஹா ஹா

டேய் இதுக்கு ஏண்டா இப்படி சிரிக்கிற? அரசியல்ல இதெல்லாம் சகஜம்தானே?

இல்ல கவுண்டமணி, வடிவேலு காமெடி பண்றாரே அதை நினைச்சேன் சிரிச்சேன்…….ஹா ஹா ஹா…….. சரி, நீ எங்க கிளம்பிட்ட?

ம்ம்ம், குவார்ட்டர் வாங்கறதுக்கு!

அடக்கடவுளே, இப்பதான் நல்லவனான, அதுக்குள ஏண்டா?

இல்ல மச்சான், என் போதைக்கே நான் ஊறுகாயா இருந்துக்கறேன்!!!

?????????????????

இவனுங்க காமெடி தாங்க முடியலடா சாமி….

பிப்ரவரி 27, 2009 1 மறுமொழி

அதிமுக கட்சியில் இருக்கும் ஒருவர் செல்வி.ஜெயலலிதாவை எதிர்த்து குரல் எழுப்ப முடியுமா? கிண்டல் பண்ணி போஸ்டர்லாம் ஒட்ட முடியுமா?

முடியும் என்று நிரூபித்திருக்கிறார்கள் ஒரு சில தொண்டர்கள். நானும் ஆரம்பத்தில் அப்படி எல்லாம் நடக்க வாய்ப்பில்லை என்றே நினைத்திருந்தேன். ஆனால் அந்த பேனரை பார்த்த பொழுது என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை.

பிப்ரவரி 24 ஆம் தேதியன்று செல்வி அவர்களின் பிறந்த நாள் வந்ததல்லவா? அதையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவிக்க ஒட்டப்பட்ட பேனர்தான் அது. கிண்டி ஸ்டேட் பாங்க் ஆஃப் இண்டியா க்கு பக்கத்தில்தான் வைக்கப்பட்டிருந்தது அந்த பானர்.

அப்படி என்ன சொல்லியிருந்தாங்கன்னு கேக்கறீங்களா? இவங்க ஒழுங்கா ‘அம்மா’வுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொன்னதோட நிப்பாட்டியிருக்கலாம். ஆனா ஆரம்பிக்கறதே, “இலங்கைத் தமிழர்களுக்குகாக பாடுபடும் ஒரே தலைவி…..”
அப்படின்னு என்னென்னமோ எழுதியிருந்தாங்க!!!!

எனக்கோ பயங்கர ஷாக், இவங்க தெரிஞ்சுதான் வெச்சாங்களா, இல்லியா?. பொதுவாகவே ஈழப் பிரச்சனையில் ”தாயுள்ளத்தின்” நிலைப்பாடு எல்லாருக்கும் தெரிந்ததே. அப்படியிருக்க இப்படி ஒரு பேனர் வெச்சிருக்காங்களே, இந்த விஷயம் தலைமைக்கு தெரியுமா? தெரிஞ்சா சும்மா விடுவாங்களா?

ஐயா, பேனர் வெச்ச நல்லவங்களே, சீக்கிரம் பேனரை தூக்கிருங்க, தப்பி தவறி அம்மா அந்தப் பக்கம் போகறப்ப அந்த பேனரை பாத்தாலோ, அல்லது கட்சிகாரங்களே யாராவது உங்க மேல பொறாமை கொண்டவங்க அம்மா காதுக்கு கொண்டு போயிட்டாங்கன்னா அப்புறம் உங்களை கட்சியை விட்டே தூக்கிடுவாங்க அது மட்டுமில்லாம தங்கள் தலைவியை அவமானப் படுத்துனதால கட்சிகாரங்க முழுக்க எதிரி ஆகிடுவாங்க, சொல்லிபுட்டேன்…..
*******************************************************************************
”ஹிந்துஸ்தான் பெட்ரோல் பங்க்குல இந்துக்கள் மட்டும்தான் பெட்ரோல் போடுறாங்களா? முஸ்லீம்கள் போடுறதில்ல!!!!

…..காதர் பாய் கறி கடையில முஸ்லீம்கள் மட்டும்தான் கறி வாங்குறாங்களா? இந்துக்கள் வாங்குறதில்ல!!!!

வரிசையாக சானல் மாற்றிக் கொண்டே வரும் போது ”கலைமாமணி.திரு, சுந்தர்.சி” அவர்கள் ஒரு வில்லனிடம் இந்த டயலாக் சொல்லிக்கொண்டிருந்தார்.

அட, வித்தியாசமான சிந்தனையா இருக்கே, இந்த சிந்தனை ஏன் இத்தனை நாளா எனக்கு தோணவே இல்லைன்னு நான் யோசிக்க ஆரம்பிக்கும் போதே ‘நமீதா’ சேலை கட்டிய படி (இந்த மாதிரில்லாம் சேலை கட்ட யார் சொல்லி கொடுத்தாங்க மேடம்?), தன்னுடைய வழக்கமான பாணியில் ஆடிக்கொண்டே வந்தார்.

அப்புறம்தான் தெரிந்தது அது கலைமாமணி.திரு, சுந்தர்.சி அவர்கள் நடிக்கும் ‘தீ’ படத்தின் டிரைலராம். அடுத்து வந்த காட்சிகள், எல்லாம் அந்தப் படம் எந்த லட்சணத்தில் இருக்கும் என்பதை தெளிவாக காட்டின.

அதுவும் படம் சன் குழுமத்தோடது. செத்தானுங்கடா தமிழ்நாட்டுக் காரனுங்க, இனி இந்த படம் வெளி வரும் வரை 5 நிமிஷத்துக்கொரு முறை இதுக்கு விளம்பரம் வரும், படம் வந்ததுக்கப்புறம் சன் நியூஸிலேயே, இது தலைப்பு செய்தியாக வரும், தொடர்ந்து அடுத்த படம் இதே குழுமம் வெளியிடும் வரை டாப் டென்ல முதல் இடத்துல வரும் (இப்படியே வரும் வரும்னு குணா ஸ்டைல்ல சொல்லிகிட்டே இருக்க வேண்டியதுதான்…..)

சரி இவனுங்க தொந்தரவு தாங்க முடியலைன்னு இன்னொரு சானலில் ‘சிம்பு’ “நான் தமிழண்டா, தமிழன்னா எழுந்து நில்லுடா” னு கூவிகிட்டு இருந்தாரு. ஆகா, நமக்கு அடுத்த தமிழினத் தலைவர் கிடைச்சிட்டாருடான்னு சிலாகிக்கும் போதே, கொஞ்ச நேரத்திலியே “where is the party” போட்டாங்க. சும்மா சொல்லக் கூடாது, பாரதி கண்ட புதுமைப் பெண்ணை இயக்குநர் என்னாமா படைச்சிருந்தாரு!!! நடன அசைவுகள்லாம் உலகத் தரம்….

பாட்டையே இந்த லட்சணத்துல எடுத்துட்டு அப்புறம் என்ன வெங்காயத்துக்கு “தமிழா நிமிர்ந்து நில், குமிஞ்சு நில், கமுந்து படு” னு பாட்டு எழுதறாங்களோன்னு தெரியலை. இவங்க போதைக்கு நம்மளை ஊறுகாய் ஆக்கிட்டே இருக்கானுங்க.

கொடுக்கறது டப்பா மசாலா படம், அதுல எதுக்கு ஹிந்துஸ்தான் பெட்ரோலியமும், காதர் பாய் கறி கடையும், தமிழாவும்…

யப்பா புண்ணியவான்களே, நீங்க மசாலா படம் எடுங்க இல்ல மலையாளப் படம் எடுங்க, ஆனா தயவு செஞ்சு அதுல கருத்து சொல்லாதீங்க!!!, நாடு தாங்காது.

இவனுங்க காமெடி தாங்க முடியலடா சாமி….

பிப்ரவரி 24, 2009 1 மறுமொழி

இந்திய விமானப்படை தனது சாதனையில் இன்னொரு மைல்கல்லை எட்டியுள்ளது. ஆம், இந்திய விமானப்படை, திருவனந்தபுரத்தில் உள்ள தென்னக விமானப்படை பிரிவில் ‘ஏர்சோட்’ என்ற அதிநவீன ராடார் நிறுவ போகிறார்களாம். இந்த ராடார்,மிக சக்தி வாய்ந்ததாம், இது இலக்குகளை மிகத் துல்லியமாக, நெருக்கமாக காட்டக் கூடியதாம். எல்லாம் சரி இதுல காமெடி என்னன்னு கேக்கறீங்களா?

இதை நிறுவ, நம்மாளுங்க சொன்ன காரணம்தான் காமெடி. அதவது 20 ஆம் தேதி, குட்டி விமானங்கள் மூலம் விடுதலைப்புலிகள் கொழும்பில் தாக்குதல் நட்த்தியுள்ளதால், தென்னிந்தியாவை காப்பாற்ற முன்னெச்சிரிக்கையாக இந்த ராடாரை நிறுவியுள்ளனர். எனக்கு என்ன புரியலைன்னா, விடுதலைப் புலிகள் விமானப் படை வெச்சிருக்கறது எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்லருந்து தெரியும், அதே மாதிரி இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் சண்டை நடப்பதும், விடுதலைப் புலிகள்  ஏற்கனவே இலங்கையில் கொழும்பில் விமானம் மூலம் சென்று தாக்குதல் நடத்தியிருப்பதும் தெரிந்த விஷயமே.

அப்டியிருக்க இத்தனை நாள் இல்லாம இப்பதான் நம்ம ஆளுங்களுக்கு அவங்க குட்டி விமானம் வெச்சிருக்கறது ஞாபகத்துக்கு வந்துதா?.    கொழும்புல நடந்த மாதிரி இங்கேயும் தாக்குதல் நடத்தலாம்னு முன்னெச்செரிக்கையாக இந்த நடவடிக்கை எடுத்துருக்காங்க. சரி அப்படித்தான் ராடாரை நிறுவிட்டாங்களே, இனிமே நாம் நிம்மதியா இருக்கலாம்னு நினைச்சா அதுலியும் மண். அதாவது, இப்ப போட்டிருக்கறது ஒரு திட்டம்தான். இந்த திட்டம் முடிய இன்னும் ரெண்டு வருஷம் ஆகுமாம். அப்புறம் அதுவரைக்கும், நாங்க எப்டிங்க நிம்மதியா இருக்கறது? ஏன்னா ஒருவேளை யாராவது விமானம் மூலம் தாக்கனும்னு நினைச்சா வந்து சேரவே ரெண்டு வருஷம் ஆகுமா இல்ல தாக்கறவங்க ரெண்டு வருஷம் காத்திருந்து நாம ராடார் வைத்ததுக்கப்புறம் வந்து தாக்குவாங்களா?

ைதுல இன்னொரு விஷயம் என்னான்னா, ஏற்கனவே 2007 ல விடுதலைப்புலிகள் நடத்திய கொழும்பு தாக்குதலில் இருந்தே தென்னிந்திய கடலோர பகுதி முழுதும் விமான எதிர்ப்பு பீரங்கிகளையும், நடமாடும் ராடார்களையும் நிருவி இருப்பதால், அவை 24 மணி நேரமும் கண்காணிப்பில் இருப்பதால் எதிரிகளின் ஊடுருவலை சமாளிக்க எந்நேரமும் தயார் நிலையில் இருக்காங்களாம்.

எனக்கு என்ன சந்தேகம்னா!!! இந்த பீரங்கி மற்றும் ராடார்களாலியோ இல்ல புதுசா நீங்க கொண்டு வர்ற ராடார் மூலமாவோ எங்க மீனவர்களை இலங்கை ராணுவம் எப்பவுமே சுட்டுகிட்டே இருக்கே, அதை தடுக்க முடியாதா? ஏன்னா எனக்கு தெரிஞ்சு விடுதலைப் புலிகள் சம்பந்தப் பட்டு இந்தியாவில் நடந்த ஒரு வன்முறை சம்பவம், ராஜீவ் காந்தி, சில போலீஸ்காரர்கள் மற்றும் சில பொது ஜனங்களின் சாவுதான் (வேறெந்த காங்கிரசு தலைவர்களும் இல்லை!!!!?). அது நடந்து வருஷக் கணக்கு இருக்கும். அதுக்கப்புறம் அவர்கள் தலையிட்டு எந்த வன்முறையோ, அல்லது அவர்கள் தாக்குதலோ தமிழ்நாட்டிலோ அல்லது இந்தியாவின் வேறெந்த பகுதிகளிலோ நடந்தது இல்லை. ஆனா இன்னமும் எங்க மீனவர்களை இலங்கை ராணுவம் சுட்டுடுதான் இருக்கு. அதை தடுக்கறதுக்கு ஏதாவது ஒரு கருவி கண்டு பிடியுங்களேன்….

அப்புறம் இதே மாதிரி ராடார்களை மும்பை கடல் பகுதி, காஷ்மீர், டெல்லி இது மாதிரி இடங்கள்லியும் வெச்சிருங்க. இல்லாட்டி திருப்பி, திருப்பி இன்னொரு கார்கில், இன்னொரு மும்பை சம்பவம்னு ஏதாவது நடந்திட்டே இருக்கும், அப்புறம் நம்ம பத்திரிக்கைகளும் தாஜ் ஹோட்டல்ல செத்தாதான் உயிர் என்று அழுவாச்சி காவியம் படைத்துக் கொண்டே இருக்கும், எல்லாத்துக்கும் மேல இந்தியாவின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகிறதா என்று விவாதம் சாருக்கானுக்கு அடுத்த காயம் ஏற்படும்வரையோ, இல்லை ஐஸ்வர்யா அடுத்த படம் நடிப்பதை சொல்லும் வரையிலோ நடத்திக் கொண்டே இருக்கும்…