தொகுப்பு

Archive for திசெம்பர், 2009

மை நேம் ஈஸ் கான் (My name is Khan)

திசெம்பர் 18, 2009 5 பின்னூட்டங்கள்

மிக யதேச்சையாகத்தான் அந்த ட்ரெய்லரை பார்க்க நேர்ந்தது!!! மழையின் தாக்கம் சென்னை முழுதும் பீடித்திருக்க, பேட்டரி வேலை செய்யாததால் ரிமோட்டின் மீது கடுப்பேறி வேறு வழியில்லாமல் ஒரே சானலை பார்க்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் விஜய் டிவியை பார்க்க நேரிட்ட்து. சுமார் பத்து மணி அளவிதான் அந்த ட்ரெய்லரும் ஒளிபரப்பப் பட்டது!!!

தமிழ் சானலில், இந்தி நிகழ்ச்சிகள் என்றுமே ஒளிபரப்பப்படாத நிலையில், ஷாருக்கான் தொடர்ச்சியாக இந்தியில் 2 நிமிடங்கள் பேசிய போது இந்தி தெரியாத காரணத்தினால், முதலில் மத்திய அரசின் ஏதாவது செய்தி விளம்பரமாக இருக்கலாம் என்றுதான் தோன்றியது. ஆனால் அதன்பின்தான் ஷாருக்கான் நடிக்கும் ஒரு படத்தின் ட்ரெய்லர் என்று சொல்லப்பட்டது.

சுமார் மூன்று நிமிடங்கள் மட்டுமே அந்த ட்ரெய்லர் ஓடியது. ஆனால் அந்த ட்ரெய்லர் ஏற்படுத்திய எதிர்பார்ப்புகள், சிந்தனைகள் நீண்ட நேரம் மனதில் நின்றன. தவிர, அந்த ட்ரெய்லர் ஏற்படுத்திய தாக்கம், அந்தப்படத்தின் மற்ற விஷயங்களைத் தேடிப்பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தையும் தூண்டியது!!!
இந்தி அதிகம் தெரியாத காரணத்தினால் இந்தி சினிமாவின் புதுவரவுகளிலோ, படைப்புகளிலோ நானாக அதிக ஆர்வம் காட்டியதில்லை. இதனாலேயே இந்தப்படத்தின் பெயரை ட்ரெயிலரில் சொன்ன போது எனக்கு அதனைப் பற்றி ஒன்றும் தெரிந்திருக்க வில்லை. அந்தப் படத்தின் பெயர் “மை நேம் ஈஸ் கான்”.

My name s Khan

ஷாருக்கான் பேசி முடித்த பின்பு, முதலில் தாரே ஜமீன் பரில் வரும் சிறுவனின் சாயலில் ஆட்டிசக் குறைபாடு கொண்ட ஒரு சிறுவனைக் காண்பித்த பொழுது, அமீர்கானைப் போல் ஷாரூக்கானும் அதே மாதிரி படம் எடுக்கிறாரோ என்றுதான் தோன்றியது!!! அந்த சிறுவன்தான் ஷாரூக்கான் என்று காட்டிய பொழுது இதுதான் இரண்டு படத்திற்குமிடையேயுள்ள ஒரு வித்தியாசமோ என்று தோன்றியது. அன்றலர்ந்த மலராக திடீரென்று கஜோல் திரையில் வந்த பொழுது, வயதாக ஆக இவர் மட்டும் எப்படி அழகாகிக் கொண்டே செல்கிறார் என்று தோன்றினாலும், வழக்கமான கமர்சியல் இந்தி படத்திற்குதான் இவ்ளோ பில்டப்பா என்றே தோன்றியது……

ஆனால் அதன் பின் திரையில் வந்த சம்பவங்கள் ஒவ்வொன்றும் முற்றிலும் நான் எதிபார்க்காத கோணத்தில் சென்றது. பல்வேறுபட்ட திருப்பங்களைக் கொண்ட படம் இது என்பதை அடுத்த ஒவ்வொரு நொடியும் திரையில் ஓடிய காட்சிகள் சொல்லின. அமெரிக்க விமான நிலையத்தில் ஷாரூக்கான் கைது, குண்டு வெடிப்பு, துடிப்பான போலீஸ் அதிகாரிகளின் ஓட்டம் ஆகியவை எல்லா கமர்சியல் படங்களிலும் பார்க்கக் கூடிய ஒன்றெனினும், இது மற்ற படங்களிலிருந்து சற்றே வித்தியாசப்பட்டது என்ற உணர்வை காட்சிகள், அதில் தொக்கி நிற்கும் சில வலிகள் உணர்த்தின. அதிகம் வசனங்களே இல்லாத ட்ரெய்லராக இருந்தாலும், ட்ரெய்லர் முடியும் தருவாயில் இரண்டே இரண்டு வசன்ங்கள் மட்டும் என்னை மெலிதாக உலுக்கியிருந்தன. ஒன்று Why are you going to Washington? And he replies back I want to meet the president and say something. வசனத்தைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரை சந்திக்க முயலும் கானின் பயணம் நம்மையும் அவருடனே அழைத்துச் சென்றது. இறுதியில் கானின் “My name is Khan, and I am not a Terrorist” என்ற வசனத்தோடு முடியும் போது, அந்த ஒற்றை வரி உணர்த்துகின்ற உணர்வுகள், அதில் மறைந்திருக்குள் பொருட்கள் ஏராளம், ஏராளம்.

சமயங்களில் ட்ரெய்லர்கள் கொடுக்கின்ற எதிர்பார்ப்பை படங்கள் கொடுப்பதில்லை என்றாலும், ட்ரெய்லரைப் பார்க்கும் போதே ஒவ்வொரு காட்சிகளும் முந்தைய காட்சிகளை விட பரபரப்பாகவும், வெவ்வேறு அர்த்தங்களைச் சொல்லும் கனமான காட்சியாகவும் அமைந்திருப்பது மிகச் சிறப்பு. ட்ரெயிலரிலேயே யார் கேமிராமேன் என்கிற ஆர்வத்தைத் தூண்டியதைத் தேடிப் பார்த்த போது நம் ரவி.கே சந்திரன் எனும் போது சற்றே பெருமிதமாகத்தான் இருந்த்து. ஆனால் மிகவும் ஆச்சரியமாக இருந்தது இது கரண் ஜோகருடைய படம் என்பதுதான்……நல்லவேளை அவர் தயாரிப்போடு நின்றுவிட்டார், இயக்கத்தில் நுழையவில்லை.

இந்த விஷயங்களால் பெரிதும் கவரப்பட்டு சற்று தேடிய போது கிடைத்த செய்திகள் இன்னும் ஆர்வமூட்டின. பழைய பேட்டிகளில் ஷாரூக்கான் இந்தப்படத்தைப் பற்றி சொன்னது, இந்தப்படம் மூன்று முக்கிய விஷயங்களைக் கொண்டுள்ளது, அவை காதல், இஸ்லாம், ஆட்டிஷம்!!!. இந்தப்படம் பேசும் இன்னொரு விஷயம் கடந்த சில வருடங்களாக இஸ்லாமிற்கும், மேறகத்திய நாடுகளுக்குமிடையேயான உறவு மறிய விதம்தான். இது ஒன்றும் ஒரு ஊனமுள்ள மனிதனின், அவனுடைய ஊனத்திற்கெதிரான போராட்டமல்ல, மாறாக ஒரு ஊனமுள்ள மனிதனின், இந்த உலகில் நிரம்பியுள்ள ஒரு ஊனத்திற்கெதிரான போராட்டம். இதில் நாங்கள் எந்த பக்கமும் பேசவில்லை…நாங்கள் சொல்ல வருவதெல்லாம், இந்த உலகில் மொத்தம் இருவர் மட்டுமே!!! நல்லவர்கள் மற்றும் கெட்டவர்கள். இதில் நல்ல இந்து, கெட்ட இந்து என்றோ, நல்ல கிறித்தவன், கெட்ட கிறித்தவன் என்றோ எதுவும் இல்லை. ஒருவன் நல்லவனாய் இருப்பதற்கும், கெட்டவனாய் இருப்பதற்கும் மதம் அளவுகோல் இல்லை, மனிதாபிமானம் மட்டுமே!!!

படத்தின் ட்ரெய்லர் ஏற்படுத்திய தாக்கத்தை விட, இந்த வார்த்தைகள் மிகுந்த தாக்கத்தை உண்டு பண்ணியது!!! என்னுடைய எண்ணமெல்லாம் ஒன்றே ஒன்றுதான்…இதுவரை இந்த வலிகளை, உணர்வுகளை இந்திய வர்த்தக சினிமாவில் ஒழுங்காக பதிவு செய்யப்படவில்லை, பதிவு செய்த சில படங்களோ முழுமையாக மக்களைச் சென்றடையவில்லை… Khuda ke liye, Ramchand Pakistani, A mighty heart, Train to Pakistan போன்ற படங்களோ முழுமையாக அனைவரையும் போய் சேர்ந்த்தா என்பது சந்தேகமே!!! நியுயார்க், ஃபன்னா மற்ற சில வர்த்தக சினிமாக்களோ சொல்லிய விதமோ சாதாரண பார்வையாளர்களை வெறுமனே வேடிக்கை மட்டுமே பார்க்க வைத்தது. ஷாரூக்கான் என்ற மிகப்பெரிய பிராண்டின் மூலாமாகவும், கரண்ஜோகர் என்ற பெரிய வெற்றிப்பட வியாபாரியின் மூலமாக வரும் இந்தப்படம் சிறிதளவேனும் தாக்கத்தை ஏற்படுத்துமா??? பிப்ரவரி 12 வரை பொறுத்திருங்கள்!!! 

பின்குறிப்பு:
இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக அமெரிக்க சென்ற போதுதான் அமெரிக்க விமான நிலையத்தில் ஷாரூக்கான் மோசமாக நடத்தப்பட்டதாக எழுந்த சர்ச்சைகள் அனைவருக்கும் ஞாபகம் வரலாம்…தனது படத்தில் வரப்போகும் காட்சியை ஒத்த ஒரு சம்பவம் அங்கே அரங்கேறியது, இந்தப் படத்திற்கான விளம்பரமே என்று கூட சில குரல்கள் எழுந்தன. ஆனால் படமோ, அந்த சம்பவமோ இதன் ஒட்டு மொத்த அடிப்படையாக, ஒரு ஒற்றை பெயர் ஒரு மனிதனின் மீதான ஒட்டு மொத்த நம்பிக்கையையும், மனிதாபிமானத்தையும், அர்ப்பணிப்பையும் கேள்விக்குள்ளாக்குகிறது என்றால் அந்தச் சூழலை, அவலத்தை என்னவென்று சொல்வது???

பிரிவுகள்:சினிமா குறிச்சொற்கள்: