தொகுப்பு

Archive for the ‘பெருமிதம்’ Category

சுதந்திரம் – வருத்தங்களுடன் கூடிய பெருமிதம்

ஒவ்வொரு வருடமும் போலவே இந்த முறையும் அந்தத் தருணம் வந்துவிட்டது.. கடந்த வருடங்களைப் போலவே இந்த முறையும் அதற்கான முக்கியத்துவம் குறைந்தே காணப்படுகின்றது. நமது உற்சாகங்களையும், நேரங்களையும் பெரும்பாலும் சினிமா சம்பந்தப்பட்டவர்களுடன் மட்டுமே கொண்டாடப்பட வேண்டும் என்கிற எழுதப்படாத விதியை இந்த முறையும் தொலைக்காட்சி ஊடகங்கள் நிறுவ முயன்றாலும், அதை மீறிச் செயல்பட முடியும் என்பதை நிரூபிக்க முயலும் முயற்சிகளையும் காண முடிகிறது.

ஒவ்வொரு முறையும் போலவே இந்த முறையும் பலத்த பாதுகாவல்களில் நமது நாட்டின் சுதந்திரத்தை காக்க வேண்டியிருக்கிறது. மற்ற நாடுகளைப் போன்றே எனது நாடும் பல சமயங்களில் சுயநலம் கொண்ட, முகமூடி பூட்டிய மனிதர்களின் பிடியில் இருக்க நேரிட்டாலும், இந்த சுயநலப் பிசாசுகளின் குரூரம், சுடுகாட்டில் நாட்டிற்கான வளங்களை விதைக்க முயன்றாலும், எனது நாட்டில் பிறந்த மற்ற மாமனிதர்களை நினைத்து இந்தக் கோமாளிகளை மறக்க வேண்டியிருக்கிறது.

அறிவியல் முதற்கொண்டு அகிம்சை வரை நாம் இந்த உலகிற்கு கொடுத்த தத்துவங்களும், நன்மைகளும் பல பல. வழக்கமாக இந்த சுதந்திர நாளில் சுயநலமில்லா பல தியாக உள்ளங்களை நினைவு கூர்வோம், அந்த நல்ல உள்ளங்களோடு சேர்த்து இந்த உலகிற்கு நாம் அளித்த சில ’புருவந்தூக்கிகளையும்’ நினைவு கூர்வோம்…

ஆர்யபட்டர் (476 CE)

கணிதத்திலும், வானியலிலும் பல கண்டுபிடிப்புகளை கொடுத்த மாமேதை. 23வது வயதிலேயே வானியலிலும், ’ஆரியபட்டியம்’ என்கிற கணித முறையிலும் ஆய்வுக் கட்டுரை எழுதியவர். கிரகங்களின் இயங்கு முறையையும், கிரகணங்களின் தோற்றத்தையும், கணிக்கும் முறையைக் கண்டறிந்தவர். கணிதத்தில் முக்கோணவியலில் (Trigonometry) சைன் அட்டவணையையும் (sine table), ’பை’யின் மதிப்பையும் (3.1416) கொடுத்தவர். எல்லாவற்றுக்கும் மேலாக பூஜ்யம் என்கிற ஒரு எண்ணைக் கொடுத்தவர். கணினி உலகில் இருக்கிறோம் என்று அடிக்கடி சொல்லிக்கொள்ளும் நாம், அதற்கு அடிப்படையான இந்த பூஜ்யத்தை கண்டறிந்தவர்கள் நாம்தான் என்பதில் பெருமிதம் கொள்வோம்…

பாஸ்கராச்சார்யா II  (1114-1183 CE)

குறிக் கணக்கியல் அல்லது அட்சரக் கணிதத்தில் (Algebra) மேதையாகத் திகழ்ந்தவர், ’லீலாவாதி’, ’பிஜகணிதம்’ என்ற படைப்புகளுக்கு காரணகர்த்தா, ’சித்தாந்த சிரோமணி’ என்ற படைப்பின் மூலம் கிரகங்களின் நிலைகள், கிரகணங்கள், காஸ்மோகிராபி, வானியல் மற்றும் கணித நுட்பங்கள் பலவற்றை உலகிற்கு கொடுத்தவர், ’சூர்ய சித்தாந்தம்’ என்ற படைப்பின் மூலம் பொருட்கள் பூமியில் மீண்டும் விழுவதற்கு பூமியில் இருக்கும் ஒரு ஈர்ப்பு சக்தியே காரணம், இந்த விசையினாலேயே, புவி, சூரியன், நிலா, மற்ற கிரகங்கள் எல்லாம் ஒரு கோட்டில் சுற்றி வருகின்றன என்ற கருத்தை முன்வைத்தவர் (நியூட்டனுக்கு 500 வருடங்களுக்கு முன்பே புவியீர்ப்பு விசையை நாம் பேசியிருக்கிறோம்!!!) மற்றும் கணித்திலும் வானியலிலும் பல்வேறு கண்டுபிடிப்புகளுக்கு காரணமாகவும் அடிப்படையாகவும் இருந்தவர்.

ஆச்சார்யா கனட் (600 BCE)

’வைஷேஷிக் தர்ஷன்’ என்ற படைப்பின் சொந்தக்காரர். ரியலிசம் (realism), லா அஃப் காஷேசன் (law of causation ) மற்றும் அணுக் கொள்கை (atomic theory) ஆகியவற்றை விளக்கியவர். எந்த ஒரு பொருளும் அணுக்களால் ஆனவை, அவை இணைந்து ஒரு மூலக்கூறுகளை (Molecules) உருவாக்குகின்றன என்ற கருத்தைக் கொடுத்தவர். ஏறக்குறைய ஜான் டால்டனின் பொருட்கள் அணுக்களால் ஆனவை என்கிற கண்டுபிடிப்புக்கு 2,500 ஆண்டுகளுக்கு முன்பே நாம் அந்த உண்மையைச் சொல்லியிருக்கிறோம். இது தவிர ஆச்சார்யா அவர்கள், அணுக்களின் அளவையும், இயக்கத்தையும் விளக்கியுள்ளார்…

நாகார்ஜுனா (100 CE)

வேதியியலிலும், உலோகவியலிலும் 12 வருடங்கள் ஆய்வுகள் செய்து பல உண்மைகளைத் தந்தவர், ’ரத்னாஷ்கர்’, ’ரஷ்ரூதயா’, ’ராசேந்திரமங்கள்’ ஆகிய படைப்புகளின் மூலம் வேதியியலில் பல பங்களிப்புகளை ஆற்றியவர், இங்கிலாந்து நிபுணர்களால் கண்டறிய முடியாத, இரசவாதம் மூலம் உலோகங்களை தங்கமாக மாற்றும் முறையை கண்டறிந்தவர், குணப்படுத்தும் மருத்துவமுறைகளில் பல பங்களிப்புகளை ஆற்றியவர், மருத்துவத்தில் ’ஆரோக்கிய மஞ்சரி’ மற்றும், ’யோகாசர்’ போன்ற நூல்களை எழுதியவர்…

ஆச்சார்யா சரகர் (600 BCE)

ஆயுர்வேத மருத்துவத்தில் தந்தை என்று புகழப்படுபவர், ஆயுர்வேத மருத்துவத்தின் என்சைக்ளோபீடியா எனப்படும் ’சாரக் ஷமிதா’ என்ற படைப்பைக் கொடுத்தவர், 100,000 ஆயுர்வேத மூலிகைகளின் குணநலன்களைக் கொடுத்தவர், கட்டுப்பாடான உணவு முறையின் அவசியத்தையும், மனதிற்கும் உடல்நிலைக்கும் உள்ள தொடர்பையும் கண்டறிந்தவர், மருத்துவர்கள் நடந்து கொள்ள வேண்டிய முறைகளாக உருவான ’ஹிப்போகிராடிக் ஓத்’ (Hippocratic oath) உருவாகுவதற்கு 200 ஆண்டுகள் முன்பே, மருத்துவர்களுக்கான நன்னெறி சாசனத்தை பயன்படுத்தியவர், மனித உடலியல், கருவியல் (embryology),  ஃபார்மகாலஜி (pharmacology), இரத்த ஓட்டம், காச நோய், சர்க்கரை நோய், இதய நோய் துறைகளில் இவரது பங்களிப்பு மிக முக்கியமானது…

ஆச்சார்யா சுஷ்ருத் (600 BCE)

மருத்துவத் துறையில் மிகுந்த பங்காற்றியவர், அறுவை சிகிச்சை முறையின் என்சைக்ளோபீடியா என்று அழைக்கப் பெறும் ’சுஷ்ருத் ஷமிதா’ மூலம் முதன் முதலில் அறுவை சிகிச்சைக்கான செயல் முறைகளைக் கொடுத்தவர்,  முகமாற்று அறுவை சிகிச்சை முறைக்கும் (plastic surgery), அனஸ்தீஷியா முறைக்கும் தந்தை என்று அழைக்கப்படுபவர், ஐரோப்பிய நாடுகளில் கூட அறுவை சிகிச்சை முறை கண்டிபிடிக்கப்படாத போது ரினோபிளாஸ்டி (Rhinoplasty – உடைபட்ட மூக்கை திரும்ப ஒட்ட வைக்கும் முறை) முறையையும், மற்ற சிக்கலான அறுவை சிகிச்சையையும் செயல்படுத்தியவர், 12 வகையான எலும்பு முறிவுக்கும், 6 வகையான எலும்பு இடமாற்றக் கோளாறுக்கும் (dislocation) மருத்துவ முறையை கொணர்ந்தவர், 125 வகையான அறுவை சிகிச்சைக் கருவிகளை உபயோகப்படுத்தியவர் (பல கருவிகள் பறவைகள் மற்றும் விலங்குகளின் எலும்புகளால் செய்யப்பட்டவை), அறுவை சிகிச்சையின் பின் செய்யப்படும் பல வகையான தைக்கும் முறைகளைக் கண்டறிந்தவர்

ஆச்சார்யா பதாஞ்சலி (200 BCE)

உலகெங்கும் பரவலாக எல்லாராலும் சிலாகிக்கப்படுகின்ற, பரிந்துரைக்கப்படுகின்ற யோகா முறையின் தந்தை என்றழைக்கப்படுபவர், மூச்சை கட்டுப்படுத்துவதன் மூலம் உடலையும், மனத்தையும் கட்டுப்படுத்த முடியும் என்று சொல்லியவர், 84 வகையான யோகாசன முறைகளைத் தந்தவர், அதன் மூலம் இரத்த ஓட்டம், சுவாசம், நரம்பு மண்டலம், உணவுச் செறிமானம், மற்ற உடலுறுப்புகளை சிறப்பாக வைத்திருக்க முடியும் என்று நிறுவியவர், பரபரப்பும், அவசரமும் நிறைந்த இந்த உலகில் பலரும் மகிழ்ச்சியும், நிம்மதியாகவும் வாழ யோகாவின் மூலம் வழி செய்தவர்

ஆச்சார்யா பரத்வாஜ் (800 BCE)

ஏவியேஷன்  துறையின் (Aviation Technology) முன்னோடி, ’யந்த்ர சர்வாஷா’ என்ற படைப்பின் மூலம் 1. புவியிலேயே ஒரு இடத்திலிருந்து இன்னொரு இட்த்திற்கு பறக்கும் வாகனம், 2. ஒரு கிரகத்திலிருந்து இன்னொரு கிரகத்திற்கு கொண்டு செல்லும் வாகனம், ஒரு பால்வெளியிலிருந்து (Universe) இன்னொரு பால்வெளிக்கு கொண்டு செல்லும் வாகனம் என்று மூன்று வகையான பறக்கும் வாகனங்களை கண்டறிந்தவர், சூரியவெளிச்சத்தின் மூலமும், காற்றின் விசையின் மூலமும் ஒரு பறக்கும் வாகனத்தை மறையச் செய்யும் நுட்பம் (Profound Secret), மறைந்திருக்கும் ஒரு வாகனம் மின் ஆற்றலின் மூலம் மீண்டும் தெரியக் கூடியதாய் மாறும் நுட்பம் (Living Secret), இரு விமானங்களுக்கிடையேயான உரையாடலை கேட்கும் நுட்பம் (Secret of Eavesdropping), இன்னொரு விமானத்தில் என்ன நடக்கிறது என்பதை பார்க்கும் நுட்பம் (Visual Secrets) ஆகியவற்றை உலகிற்கு தந்தவர்

இந்த மாமனிதர்கள் பல சமயங்களில் இவ்வுலகை புருவம் தூக்க வைத்ததை நினைத்து புன்முறுவல் கொள்வோம். இந்த தருணத்தில், இந்த நிலையை நாம் அடைந்திருப்பதற்கு பெருமிதமும் (வருத்தங்களுடன் கூடிய), இன்னும் உன்னத நிலையை அடைவதற்கு உறுதியும் கொள்வோம்…

அனைவருக்கும்

சுதந்திர தின வாழ்த்துக்கள்

பின்குறிப்பு:

ஒரு விஷயத்தை நன்றாக கவனிக்க முடிகிறது. கணினி உலகம் என்றும், மேம்பட்ட வாழ்க்கை முறை, பல புதிய கல்வித் திட்டங்கள் என்றும் நாம் சிலாகித்துக் கொண்டாலும் பழங்காலத்தில் ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத வேறுபட்ட துறைகளில் கூட ஒருவரே நிபுணராக இருக்கும் அதிசியத்தைக் காண முடிகிறது. இன்றோ ஒரு துறையை சேர்ந்த ஒருவருக்கு மற்ற துறைகளில் அடிப்படை அறிவே இல்லாத சூழலையும் காண வேண்டியிருக்கிறது…

பிரிவுகள்:பெருமிதம் குறிச்சொற்கள்: