தொகுப்பு
BCCI @ Cat
உலகக் கோப்பைக்கு மட்டுமல்ல, ஐபிஎல் உருவாகவே ஒருவகையில் காரணமாக இருந்தது மட்டுமல்ல, கிரிக்கெட் வணிகரீதியாகவும், அதிக புகழுடனும் இந்தியாவில் காலூன்றக் காரணமாக இருந்ததும் கபில் தேவ்தான்! ஐசிஎல் என்ற மணியை கட்டியிருக்காவிட்டின், பிசிசிஐ என்கிற பூனையின் கொட்டம் அதிகரித்துக் கொண்டே இருந்திருக்கும்! வணிக ரீதியிலோ, எதிர்பார்ப்பிலோ வெற்றியை அடைந்திருக்காவிடினும், முழுக்க முழுக்க பழைய ரஞ்சி போட்டிகளை மட்டுமே ஏனோதானோவென நடத்தி வந்த பிசிசிஐ, அதிலிருந்து ஒருவரை தேர்வு செய்த தேர்வு முறை எல்லாவற்றையும் ஐசிஎல் ஏளனம் செய்ததாலேயே, இப்பொழுது நடந்து வரும் ஐபிஎல்லும், ரோகித், யூசூப், போலார்டு, வாட்சன், மார்ஷ், வால்தாட்டி, பாண்டே, மண்டீப் சிங், ஜடேஜா, அஸ்வின், முரளி விஜய் போன்ற வீரர்களும்!
ஐபிஎல்லை வைத்து தேர்வு செய்ய மாட்டோம் என்று சொல்லிக் கொண்டாலும், இந்தியா மட்டுமல்ல, ஆஸ்திரேலியா உட்பட பல நாடுகளும் ஐபிஎல்லில் வெளிப்படும் ஆட்டத்தை மறைமுகமாக கணக்கில் வைத்துக் கொண்டுதான் உள்ளனர்! இப்படி பலவற்றிற்கு காரணமாக இருந்தாலும், ஐபிஎல்லில் வரும் லாபத்தை தரும் லிஸ்ட்டில் கபில்தேவிற்கு இடமில்லை இதுவரை! முழுக்க முழுக்க அணிக்காக (தேசத்திற்காக) ஆடியதோ, முதல் உலகக் கோப்பையை ப்ற்றுத் தந்தது, கிரிக்கெட்டின் நலனுக்காக கமிட்டியை விமர்சனம் செய்ததோ, கோட் சூட் போட்டுக் கொண்டு பல தவறுகளுக்கு மேல் பூச்சு பூசாதது போன்ற பல குற்றங்களை செய்தது அவரை அந்த பட்டியலில் இடம் பெற வைக்காமல் போயிருக்கலாம்!
அரசியல்வாதிகள் அமைப்பாளர்கள், நடிகர்கள், நடிகைகள், வியாபாரிகள் அணியின் உரிமையாளர்களாக இருக்கின்ற நிலையில், டன்னிற்கும் மேலாக உணவு தாணியங்கள் வீணாவதற்கு போதுமான சாக்குப் பைகள் இல்லை என்ற காரணத்தை வெட்கமின்றி பத்திரிக்கைகளில் சொல்லுகின்ற அமைச்சர்கள் இருக்கும் நாட்டில், நாட்டின் தானியக் கிடங்க இந்த லட்சணத்தில் இருக்கும் நிலையிலும், உலகக் கோப்பையின் போது மூன்று மாதங்கள் போட்டி நடக்கும் இடங்களுக்கு போய் வருவதை மட்டுமே வேலையாகக் கொண்டுருந்த வேளாண்மைத் துறை அமைச்சர் தலைவராக இருக்கும் ஒரு அமைப்புல், கபில்தேவிற்கு பட்டியலில் இடமில்லாத செய்தி பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்த தேவையில்லைதான்!
மேற்கு வங்கம், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் ஆட்சியை பறிகொடுத்தவர்கள் எதுவும் செய்ய வேண்டாம், ஆட்சியாளர்களே மீண்டும் அவர்களுக்கு வழியை ஏற்படுத்து தந்துவிடுவார்கள்! கிரிக்கெட் எதிர்ப்பாளர்களுக்கும் அதுவே செய்தி. நீங்கள் ஒன்றும் செய்யாதீர்கள், ஆமை புகுந்த வீடு போன்று, அரசியல் புகுந்த விளையாட்டும், தன் வீழ்ச்சிக்கு தானே வழிவகுக்கும்!