தொகுப்பு
வொயிட்வாஸ் என்கிற கரிபூசுதல்!
இந்தத் தொடர், விஜய்க்கோ, அஸ்வினுக்கோ, தவானுக்கோ மட்டுமல்ல தோனிக்கும், ஒட்டு மொத்த இந்திய அணிக்குமே மிகப் பெரிய திருப்பு முனையாக அமையுமென்று சொல்லியிருக்கிறது! தொடர் ஆரம்பிக்கும் முன்போ, தோனி டெஸ்ட் அணியில் இருக்க வேண்டுமா என்ற அளவிற்கு விவாதங்கள் எழுந்தன! இப்பொழுதோ 2019 வரை தோனிதான் கேப்டன் என்று முழக்கங்கள் கேட்கின்றன! உலகக் கோப்பைக்குப் பின்பு, ஆர்பரித்துக் கொண்டாட வேண்டிய இன்னொரு வெற்றியை இந்திய அணி பெற்றிருக்கிறது!
வெற்றியைத் தந்த அணியில், சச்சின் மட்டுமே மூத்த வீரர்! பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி கோலோச்சியவர்கள் எல்லாரும் அணிக்குப் புதியவர்களே! இன்னும் சொல்லப்போனால், சச்சினுடைய பங்களிப்பு இந்தத் தொடரில் பெரியளவு இல்லை!
இந்திய அணி தேடிக்கொண்டிருந்த பல கேள்விகளுக்கான பதில் இந்தத் தொடர் தந்திருக்கிறது! ஓபனிங் தொடர்ந்து சொதப்புகிறது! விஜயும், தவானும் நம்பிக்கையூட்டுகின்றனர். காம்பிர் பேக் அப்பில் இருக்கிறார். டிராவிட் ரிடயர்டு. புஜாரா இருக்கிறார். ஆரம்ப கட்டத்தில், டிராவிட் அளவிற்கு வருமா என்ற சந்தேகத்திற்கு, ஏறக்குறைய அவருடைய பாணியிலேயே ஆட்டத்தை வெளிப்படுத்தி சந்தேகத்தை நிவர்த்தி செய்திருக்கிறார்! லக்ஸ்மண் ரிடயர்டு. கோலி இருக்கிறார். இந்தியாவின் பலமான ஸ்பின் எடுபடவில்லை! அஸ்வின், ஓஜா மட்டுமல்ல, ஜடேஜா கூட ஸ்பெஷலிஸ்ட் ஸ்பின்னர் அளவிலேயே பந்து வீசினார்! புவனேஷ்குமார், இஷாந்தும் பங்களிப்பை நன்றாகவேச் செய்தனர்! இது தென் ஆப்பிரிக்காவில் பந்துவீச்சிற்கு 3 மித வேகப் பந்துவீச்சு, அஸ்வின், ஜடேஜா என்ற கூட்டணிக்கு அடிப்படையாக அமையலாம்!
தற்போதைய ஒரே யோசனை, இந்த பதில்கள் தற்காலிகமா அல்லது நிரந்தரமா என்பது மட்டுமே! ரகானே பெரிய அளவு சோபிக்காவிட்டாலும், ஒரு போட்டியை வைத்து முடிவு செய்துவிடமுடியாது! அணியின் செயல்களை வைத்துப் பார்க்கும் பொழுது, ஏறக்குறைய சச்சினின் இடத்திற்கு அவரைத் தயார் செய்வதாகவே தோன்றுகிறது! தென் ஆப்பிரிக்காவிலும் நல்லதொரு ஆட்டத்தை இந்திய அணி வெளிப்படுத்துமாயின், ஆஸி, இங்கிலாந்திற்கெதிரான தோல்விகள் அணியின் ட்ராசிஷன் பீரியட் என எடுத்துக் கொள்ளலாம்!
புதுமுகங்களான தவானும், புவனேஷ்குமாரும் மட்டுமல்ல, திறமையிருந்தும் பல முறை சோபிக்காத முரளி விஜய் கூட ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றனர்! தமிழ்நாட்டின் அஸ்வின், தொடரில் அதிக விக்கட்டுகளை எடுத்தாரென்றால், விஜய் அதிக ரன்களை எடுத்திருக்கிறார்! தவான், விஜய், ஜடேஜாவின் ஆட்டம் டெஸ்ட்டிற்கு மட்டுமல்ல, ஒரு நாள் போட்டிகளிலும் அவர்களுக்கான வாய்ப்பினை ஏற்படுத்தக் கூடும்! இது புஜாராவிற்கும் பொருந்தும்!
4 போட்டிகளில், அனைத்திலும் டாசில் தோற்றாலும், ஒரே ஒரு முறைதான் முதலில் இந்தியா பேட்டிங் செய்திருக்கிறது! அதிலும் இன்னிங்ஸ் வெற்றி! மற்ற போட்டிகளிலும் பெரிய வெற்றிகள்! ஏறக்குறைய எல்லா இன்னிங்சிலுமே இந்தியாவின் கையே ஓங்கி இருந்தது!
ஆஸி அணிக்கோ இது போதாத கால கட்டம்! திடிரென்று பார்க்கும் பொழுது ஸ்டார், சிடில் எல்லாம் ஆல்ரவுண்டர்கள் போல் தோன்றூகிறது! ஹஸ்ஸியே திரும்ப வந்தால் வரவேற்போம் என கோச் பேட்டி கொடுக்கும் அளவிற்கு நிலைமை மோசமாக இருப்பது கண்கூடு! கோவன், ஹியூக்ஸ் என நல்ல ஆட்டக்காரர்கள் இருந்தும் அனுபவமின்மை அணியை ரொம்பவே ஆட்டிவிட்டது! மிக மோசமான தோல்வி என்பதைத் தாண்டி, இதை மாற்ற அடுத்து செய்யவேண்டியது என்ன என்பதே அணியினருக்கு புரியவில்லை! உலகையே திரும்பிப் பார்க்க வைத்த வார்னேயைக் கொடுத்த ஒரு அணியால், நல்ல ஸ்பின்னரைக் கொடுக்க முடியவில்லை! மெக்ராத், ப்ரெட்லீ போன்ற கன்சிஸ்டண்ட் வேகப்பந்து வீச்சாளர்களை அவர்களால் உருவாக்க முடியவில்லை! ஜாம்பவான்கள் செல்லல்ச் செல்ல சிறுது சிறிதாக ஏற்பட்ட வெற்றிடம் , தற்பொழுது அணிக்கு ப்ரு பெரும் வெற்று வெளியையே ஏற்படுத்தியிருக்கிறது!
ஒரு கட்டத்தில் இளம் வீரர்கள் வேண்டும் என்பதற்காக கேடிச், கில்கிறீஸ்ட் முதற்கொண்டு பலரையும் ஃபார்மில் இருக்கும் போதே தூக்கிய அணி இப்பொழுது தத்தளித்துக் கொண்டிருக்கிறது! ஹாஸ்ஸியோ இதைத் தெரிந்துகொண்டு, அவர்கள் தூக்கும் முன்பே தான் ரிடயர் ஆகி விட்டதாக்ச் சொல்கிறார்! மார்ஸ், கவாஜா, ஹென்ரிக்ஸ், வோக்ஸ், பெய்லி, என ஒரு நாள் போட்டிகளில் சிலர் நம்பிக்கை ஏற்படுத்தினாலும், அணி புரிந்து கொள்ள வேண்டியது ஒன்றுதான்! பழைய, எல்லாப் போட்டிகளிலும், எப்பொழுதும் கோலோச்சுகின்ற ஆஸி அணியை உருவாக்க அவர்கள் போக வேண்டிய தூரம் மிக அதிகம் அல்லது இனி அவர்களால் உருவாக்க முடியாது என்பதே!
அதே மென்புன்னகையுடன், பழிவாங்குதல் என்பதெல்லாம் தேவையற்ற வார்த்தைகள் எனப் புறந்தள்ளுகிறார் தோனி, தோனியின் பல முடிவுகளில் விமர்சனங்கள் உண்டு என்றாலும், வெற்றியையும், தோல்வியையும் ஏறக்குறைய சமமாக உள்வாங்கிக் கொள்ளக்கூடிய பாணியை பாராட்டுவதா அல்லது கேள்வியெழுப்புவதா என்று நம்மை சற்று திகைக்கவே வைக்கிறார்! எப்படியிருந்தாலும் அணியின் கேப்டனாக அவர் சாதித்துக் கொடுத்திருக்கும் பல வெற்றிகளுக்கு வாழ்த்துக்கள்!
பி.கு.
2011 ஐபிஎல்லுக்கு முன்பு இந்திய அணி உலகக் கோப்பையை வென்றது! இப்பொழுது ஆஸிக்கெதிரான தொடரில் அவர்களை வொயிட்வாஸ் செய்துள்ளது! இந்த இரு பெரும் வெற்றிகளை விடவே மகிழவான செய்தியாக இருக்ககூடிய ஒன்றும் இருக்கத்தான் செய்கிறது! அது, இந்த ஐபிஎல் லில் சென்னை போட்டிகளில் மட்டும் இலங்கை வீரர்கள் விளையாடப் போவதில்லை என்ற செய்தியே! சென்னைப் போட்டிகளில் மட்டும்தானா என்ற ஏக்கம் இருந்தாலும், இந்த முடிவும் மகிழ்ச்சியூட்டுவதாகத்தான் இருக்கிறது! விளையாட்டினில், அரசியல் வேண்டாம் என்பவர்களுக்கு ஒன்றே ஒன்று மட்டும்! முதலில் அரசியலையே விளையாட்டாக எடுத்துக் கொள்பவர்களை தட்டிக் கேட்டுவிட்டு வாருங்கள்!
அடிச்சாச்சு ஹாட்ரிக்!
இரண்டாவது டெஸ்ட்டிலும் பாஸ்!
ஒரு வருடம் முன்பு ஆஸ்திரேலியா டூரின் போது இந்தியா எந்த நிலையில் இருந்ததோ, ஏறக்குறைய அதே நிலையில் இப்பொழுது ஆஸ்திரேலியா இருக்கிறது! நம்முடைய பேட்ஸ்மேன்களால் அதிக ஸ்கோரினை எடுக்க முடியவில்லை! பவுலர்கள் 10 விக்கெட்டுகளை எடுத்து முடிக்கும் முன் எதிர் அணியினர் குறைந்தது 450 ரன்களை கடந்திருப்பார்கள்! ஓரிரு சமயம் அவர்களாகப் பார்த்து டிக்ளேர் செய்தனர்! இப்பொழுது இந்தியா திருப்பிக் கொடுக்கிறது! இதுவரை தான் சந்தித்த எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வினைக் கண்டுபிடித்துவிட்ட ஒரு தற்காலிக சந்தோஷத்தில் இந்திய அணியும் எஞ்சாயுகிறது! தொடர் இப்பொழுது நம் கையில், அதிக பட்சம் ஆஸி தொடரினைச் சமன் செய்யலாம், ஆனாலும் அணியின் நிலையைப் பார்க்கும் பொழுது, தொடர் நமக்கு என்றே தோன்றுகிறது, வேதாளம் மறூபடி முருங்கை மரம் ஏறாவிடின்!
இந்தப் போட்டி முடிந்தபின், அடுத்த இரு போட்டிக்கான தேர்வு நடைபெறும்! அடுத்து, தெனாப்பிரிக்காவுடனான போட்டி இருக்கும் நிலையில், அடுத்த இரு போட்டிகள், அதற்கான அஸ்திவாரமாகவே அமையும்! மிக முக்கிய தேர்வு ஓபனிங் யார் என்பதிலேயே! சேவாக்கின் இடம் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், விஜயின் சதம் அவருக்கு இன்னும் சில வாய்ப்புகள் ஏற்படுத்தியிருக்க, அவருடன் இணையப் போவது சேவாக்கா, காம்பீரா, அல்லது ஏற்கனவே இடம்பிடித்துள்ள தவானா அல்லாது ரகானேயா? ஒரு வேளை திடிரென்று வாசிம் ஜாஃபரை கொண்டு வந்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை! காரணம் விடை காணவேண்டிய கேள்விகள் பல இருக்கின்றன!
எப்பொழுதுமே தென் ஆப்பிரிக்கத் தொடர் இந்தியாவிற்க்கு ஒரு சத்திய சோதனையாக இருக்கும் நிலையில், முழுக்க முழுக்க அனுபவம் குறைந்த இரு ஓபனிங் பாட்ஸ்மேன்களை அனுப்ப இந்தியா தயாரா? இந்திய பிட்சில் பெரும் வெற்றி மட்டும் பேட்ஸ்மேனை கணிக்க போதுமா? ரகானேயை மிடில் ஆர்டருக்கு மட்டும் பயன்படுத்தப் போவதாக ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், ஓபனிங்கிற்கு இந்தியாவின் அஃப்ஷன்ஸ் இப்பொழுது விஜய், தவான், காம்பீர், ரகானே, சேவாக், ஜாஃபர் மட்டுமே (இதில் கடைசி மூன்று பேருக்கு வாய்ப்பு குறைவு(?)) அடுத்த இரு போட்டிகளில் விஜய் மீண்டும் சொதப்பினால் என்ன முடிவு எடுப்பார்கள் என்பது சற்று சுவாரசியத்தைக் கூட்டவேச் செய்கிறது!
சொல்லப்போனால், கடந்த வருடத் ஆஸித் தொடரில் இந்திய அணி இன்னும் பலம் வாய்ந்த அணியே! டிராவிட்டும், லக்ஸ்மணனும் ரிட்டயராகியிருக்க வில்லை! பந்துவீச்சில் ஜாகீர்கான் இருந்தார்! இருந்தும் நாம் வாங்கிய அடி சாதாரண அடி இல்லை! இந்தியா இப்பொழுது நம்பிக் கொண்டிருப்பது, புஜாராவும், கோலியும் தங்களுடைய இடத்தை ஓரளவு நிரப்பிக் கொண்டது மட்டுமல்லாமல், இதே ஆட்டத்தைத் தொடர்வார்கள் என்பதுமே! ஆனாலும், இந்தத் தொடரில் நான் கண்ட இன்னொரு மிக முக்கியக் மாற்றம், வெற்றிக்கான காரணம், தோனி தன் இடத்தை மட்டுமல்ல, ஆட்டத்தையும் முன்னேற்றியிருப்பதுமே!
போனப் போட்டியைப் போலல்லாமல், புவனேஷ் குமாரின் ஆரம்ப விக்கட்டுகள்தான், ஆஸி அணியின் சரிவுக்கு காரணம்! ஆஸிக்கு அது பெரிய பதட்டத்தை ஏற்படுத்தியது என்றால், இந்திய அணிக்கு மிகப்பெரிய தன்னம்பிக்கையைக் கொடுத்தது! போனப் போட்டியில் ஏற்படுத்திய நம்பிக்கையை, இந்தப் போட்டியில் ஜடேஜா உறுதிபடுத்தியிருக்கிறார்! ஹர்பஜனுடைய பந்து வீச்சு முழுமையாக இல்லா விட்டாலும், ஓரளவு முன்னேறி இருந்தது! இஷாந்துக்கு தொடரில் முதல் விக்கெட், அது மிக முக்கிய திருப்பு முனையும் கூட! விஜய், புஜாராவின் பார்ட்னர்ஷிப், டெஸ்ட் போட்டியின் இலக்கணம் சொல்வதாய் அமைந்தது! ஆக மொத்தத்தில் இந்திய அணிக்கு இந்தப் போட்டி அதனுடைய எல்லாப் பிரச்சினைகளுக்கான வழியையும் ஓரளவு காட்டியிருக்கிறது! அணியின் ஒரே எதிர்பார்ப்பு, இது தொடரவேண்டும் என்பதே!
ஆஸி அணிக்கு இது ஒரு முக்கிய கட்டம்! ஏறக்குறைய வார்னே, மெக்ராத் போன்ற ஜாம்பவான்கள் போன பின் அணி பந்து வீச்சில் கண்ட சரிவை, இப்பொழுது பாட்டிங், பவுலிங், கீப்பிங் என ஒட்டு மொத்த துறைகளிலும் சந்திக்கிறது! வார்னர், வாட்சன், க்ளார்க் என மூவர் மட்டுமே அச்சுறுத்தக் கூடியவர்களாகத் தெரிகின்றனர்! லியானை விட்டு தோகர்ட்டியை தேர்வு செய்தது ஆஸியின் பெரிய தவறு! மாக்ஸ்வெல்லின் ஆஃப் ஸ்பின், அதை ஈடு செய்யும் என நினைத்திருந்தாலும், தோகர்ட்டியால் ஜடேஜா அளவிற்கு கூட பந்து வீச முடியவில்லை! அடுத்து என்ன செய்வது என்பது அவர்களுக்கே தெரியுமா என்பது தெரியவில்லை! இருந்தாலும், மோதுவது ஆஸியுடன் என்பதால், எதுவும் நடக்கலாம்!
ஆனாலும் அடுத்த இரு போட்டிகளில் இந்திய அணி முடிவு செய்யவேண்டிய விஷயம் சிலவை இருக்கின்றன! அடுத்த இரு போட்டிகள் தென் ஆப்பிரிக்காவிற்கெதிரான போட்டிக்கான அஸ்திவாரம் என்றால், இந்திய அணி இதே இரு ஸ்பின்னர்கள், இரு மிதவேகப் பந்துவீச்சாளர்கள், ஒரு ஆல்ரவுண்டர் (ஸ்பின்) காம்பினேஷனிற்கான வாய்ப்பு மிகக் குறைவு! கண்டிப்பாக மூன்று மிதவேகப் பந்துவீச்சினை இறக்க வேண்டி வரும், ஒரே ஸ்பின்னராக அஸ்வினும் இருப்பார்கள். ஜடேஜாவை வைத்துதான் இந்தியா களமிறாங்குமா? ஏனெனில் ஜடேஜா இன்னும் பேட்டிங்கில், நிரூபிக்க வேண்டியது நிறைய உள்ளது! அப்படி ஜடேஜா இல்லாவிடின், வெறுமனே நான்கு பந்து வீச்சாளர்கள் உடன் இறங்குவது சரியா? மூன்றாவது பந்துவீச்சாளர் யார்? ராகானேயை நேரடியாக தெ. ஆப்பிரிக்காவில் பரிட்சிக்க வேண்டுமா? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதிலினை அடுத்த இரு போட்டிகளின் முடிவில் இந்திய அணி கண்டுபிடிக்குமா என்பது போகப் போகத் தெரியும்…
முதல் டெஸ்ட்டில் பாஸ்!
