தொகுப்பு

Posts Tagged ‘புத்தகம்’

ர.சு. நல்லபெருமாள்

எல்லாருடைய எழுத்துக்களும் அவ்வளவு எளிதில் நம்மை வசீகரித்து விடுவதில்லை. வசீகரிக்கும் எழுத்துக்கள் அனைத்துமே நம் சிந்தையையும் தூண்டுவதில்லை. எனது பால்யப் பருவத்தில் என்னை வசீகரித்த எழுத்துக்களின் சொந்தக்காரரைப் பற்றி திடீரென்று நினைத்தாற் போல் இணையத்தில் தேடிய போது என்னால் அவரைப் பற்றி அதிகம் கண்டு பிடிக்க முடியவில்லை. அப்பொழுது விளைந்த எண்ணம்தான் இந்த பதிவு. அந்த எழுத்துகளுக்குச் சொந்தக்காரர் .சு. நல்ல பெருமாள். சிறு வயதில் நடந்திருந்தாலும், இவரது எழுத்தை நான் தேடிப் படிக்க ஆரம்பித்ததற்கு காரணமான சம்பவம் இன்றும் நினைவிலிருக்கிறது.

அது, தந்தையை நாயகனாக பாவிப்பதற்கும், வில்லனாகப் பார்ப்பதற்கும் இடைப்பட்ட ஒரு பருவம். ராஜேஷ்குமார், பிகேபி, சுபா, போன்றோரின் மாத நாவல்களிலும், மற்ற சில எழுத்தாளர்களின் படைப்புகளிலும் சற்றே சலிப்பு ஏற்பட்டிருந்த சமயம். இளமையின் காரணமாக மெலிதாக அரசியல், சமூகம், புரட்சி சம்பந்தப்பட்ட புத்தகங்களில் ஈடுபாடு ஏற்பட்டிருந்த சமயம். எங்கள் ஊரில் ஒரு மிகப் பெரிய கொடுப்பினையாக, அரசாங்கத்தால் நிறுவப்பட்டிருந்த நூலகம் ஒழுங்காக பராமரிக்கப்பட்டு வந்தது. வேலையை முடித்த பல குடும்பத் தலைவிகளுக்கும் (மெகா சீரியல்கள் அப்பொழுது மனிதர்களை முழுமையாக ஆக்கிரமித்திருக்கவில்லை), படிப்பை முடித்து வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கும், சிறு வயது பிள்ளைகளுக்கும் அதுதான் ஒரு பொழுது போக்கும் இடமே.

வாசிப்பனுபவத்தில் அடுத்தடுத்த கட்டங்களுக்குச் செல்வதற்கு மிகுந்த உதவியாக இருந்ததும் அந்த நூலகந்தான். மாத நாவல் எழுத்தாளர்களையும், கல்கி, அனுராதா ரமணன், சிவசங்கரி, சாண்டில்யன், தவிர எனக்கு அதிகம் மற்ற எழுத்தாளர்களைப் பற்றி தெரிந்திருக்கவில்லை. ஆகையால் நூலகத்தில் இருந்து நானாக மூன்று புத்தகங்களை எடுத்து வந்து படிப்பது வழக்கமாகியிருந்தது. எப்போதும் மாத நாவல்களையோ அல்லது நூலக புத்தகங்களையோ நான் படிப்பதை பார்க்க நேர்ந்தால், சும்மா புரட்டி மட்டும் பார்த்துவிட்டு செல்லும் எந்தை (அதற்கு மேல் அவருக்கு நேரம் கிடைப்பதில்லை, என்னைப் பொறுத்த வரை அதுவே ஒரு பெரிய கொடுப்பினை. ஏனெனில், பாட புத்தகங்கள் மட்டும்தான் வாழ்க்கை என்ற சூழ்நிலை நிலவும் ஒரு சமூகத்தில், மற்ற புத்தகங்களை படிக்க அனுமதிப்பது என்பதையும் தாண்டி அதை ஊக்குவிக்கவும்கூடிய ஒரு குடும்ப அமைப்பை பெற்றிருப்பது எனக்கு கிடைத்த மிகப் பெரிய வரந்தான்) அன்று மட்டும் நான் எடுத்து வந்த ஒரு நூலை மிக ஆர்வத்துடன் பார்த்தது மட்டுமில்லாமல் ஒரு மணி நேரம் இருந்து படித்துவிட்டுச் சென்றார்.

அது மட்டுமில்லாமல் அந்த புத்தகத்தை படிக்குமாறு என்னையும் சொல்லிவிட்டுச் சென்றார். அந்தச் செயல் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது, ஏனெனில் அதற்கு முன் அவராக என்னைப் படிக்கச் சொன்ன ஒரு புத்தகம், காமராசருடைய வாழ்க்கை வரலாறு தான், காமராசருடைய நெருங்கிய நண்பர் (பெயர் முத்துசாமி என்று நினைக்கிறேன்) ஒருவரால் எழுதப்பட்ட புத்தகம் அது, மற்றபடி அவர் எனது ரசனையிலோ, வாசிப்பிலோ தலையிடுவதேயில்லை. இப்போது அவர் படிக்கச் சொன்ன புத்தகம், ர.சு. நல்ல பெருமாள் என்பவர் எழுதிய மயக்கங்கள்”. என் தந்தை விரும்பி படித்த அந்தச் செயல்தான் ர.சு. நல்லபெருமாளின் மற்ற புத்தகங்களை அந்த நூலகத்திலிருந்து தேடி எடுத்து வந்து படிப்பதற்கும் முக்கியமாக என் தந்தைக்கு படிக்கக் கொடுப்பதற்கும் காரணமாக இருந்தது (நமக்கு பிடித்தமானவர்களுடைய விருப்பங்களுக்கான தேடலும் மிகச் சுகமானதுதானே!!!)

எந்தைக்காக படிக்க ஆரம்பித்தாலும் படிக்க படிக்க அவரது எழுத்துக்கள் மீதான ஈர்ப்பு அதிகரித்துக் கொண்டேச் சென்றது. இளமைப்பருவத்தில் வருகின்ற காதல் மட்டுமல்ல, சில சமயங்களில் நம்மை வியக்க வைக்கிற மனிதர்களும், சில நூல்களும், சம்பவங்களும் கூட நம் நெஞ்சில் பசுமையாக நிலைக்கத்தான் செய்கின்றன.

சற்றே புரட்சி சம்பந்தப்பட்ட நூல்களில் ஆர்வம் இருந்ததாலோ என்னமோ “ஆத்திகம், நாத்திகம்” இரண்டையும் கேள்விக்குட்படுத்தி அவர் எழுதியிருந்த ”மயக்கங்கள்” நாவல் என்னுள் மிகுந்த ஈடுபாட்டை ஏற்படுத்தியது. நாவலின் முடிவில் எது உண்மை எது பொய், எது சரி, எது தவறு என்பதைப் பற்றியெல்லாம் முடிவுகள் ஏதும் தராமல் வாசகனை சிந்திக்க விட்டிருந்தது என்னை மிகவும் ஈர்த்தது.

அந்த புத்தகம் ஏற்படுத்திய நம்பிக்கைதான் அடுத்த முறை அவர் எழுதிய கல்லுக்குள் ஈரம்(1966-1969), போராட்டங்கள் (1972) ஆகிய இரு நூல்களைக் கொணரச் செய்தது. இந்த இரு நாவல்களும் ஏற்படுத்திய சிந்தனைகள், ஆச்சரியங்கள், திடுக்கிடல்களை வார்த்தைகளில் சொல்ல முடியாது. அதுவும் ”கல்லுக்குள் ஈரம்” புத்தகத்தில் சொல்லப்பட்டிருந்த விஷயங்கள், சுதந்திரப் போராட்டக் காலத்தை அப்படியே நம் கண்முன்னே கொண்டு வந்தது. திலகர், பாரதி, காந்தி என்று பலருடைய சிந்தனைகளை நடவடிக்கைகளை, அவர்களைப் பற்றி படிக்கும் போதும் சரி, ”சிலைகளுக்கு மாலைகளை அணிவிக்கிறார்கள், சிந்தனைகளுக்கு மலர்வளையம் வைக்கிறார்கள்” என்பது போன்ற வரிகளை படிக்கும் போதும் சரி ஏற்படுத்திய உணர்வுகள் ஏராளம்!!!

பின்னாளில், இந்த ”கல்லுக்குள் ஈரம்” என்ற இந்த நாவல், இன்னொரு நாட்டின் சுதந்திரப்போருக்கு ஒரு வித்தாக அமைந்ததை அறிந்த போது மிகுந்த வியப்புமேற்பட்ட்து!!! இதில் வரும் ரங்கமணி பாத்திரம்தான் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு ஒரு தூண்டுகோலாக அமைந்தது என்று அவரே பேட்டி கொடுத்திருக்கிறார். நம் நாட்டின் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றிய நாவல், இன்னொரு நாட்டின் சுதந்திர வேட்கையில் பங்கு வகித்தது பெரிய விஷயம்தானே!!!…பின்னாளில் ஹேராம் திரைப்படம் பார்க்க நேர்ந்த போது, படத்தில் வரும் பல சம்பவங்கள் இந்த நாவலைத் தழுவியிருந்த போது (கமல் அதை ஒற்றுக் கொள்ளாவிடினும்) அந்த நாவலின் வெற்றியை என்னால் உணர முடிந்தது!!! இந்த நாவல்தான் கல்கி வெள்ளி விழா ஆண்டிற்கான போட்டியில் இரண்டாம் பரிசையும் வென்றிருந்த்து!

அவருடைய மற்றொரு நாவலான போராட்டங்கள், அது தொட்டுச் சென்ற தளங்களோ ஏற்படுத்திய அதிர்வுகளோ சாதாரணமானதன்று. 1960களில் கம்யூனிச சித்தாந்தம் நிலவிய விதமும், அந்தக் கட்சியின் செயல்பாடுகள், அதில் தலைமைப் பொறுப்பை ஏற்க நடந்த கொலைகள், சீனப் போரின் போது நடைபெற்ற பாராளுமன்ற பேச்சுக்கள், நேருவின் தவறுகள் என பலவற்றையும் தொட்டுச் சென்றது. இத்தனைக்கும் நடுவில் வெறுமனே பரப்பரப்புச் செய்திகளை விரும்பிப் படிக்கும் மக்களும், அதனைத் தரும் செய்தி ஊடகங்களும் இருக்கும் சூழலில் ஒரு நேர்மையான பத்திரிக்கையை நடத்தும்  வேட்கைக் கொண்ட நாயகன், அவனது உணர்வுகள், சந்திக்கும் சோதனைகள் என அந்தக் காலத்திலேயே சொல்லியிருப்பது சற்றே ஆச்சரியத்தையும் ஏற்படுத்துகிறது!!!

இதே போன்று பத்திரிக்கைத் தொழில் நடத்துவதை அடிப்படையாகக் கொண்டு அவர் எழுதியிருக்கும் மற்றொரு நாவல்தான் மாயமான்கள். சமூகத்தில் உயர்வாகக் கருதப்பட்ட சிலரது மூகமூடியைக் கிழிக்கும் வகையிலும், அதிக அளவில் பெண்ணீயம் பேசும் வகையிலும் இவர் எழுதிய  மற்றொரு நாவல் திருடர்கள்(1976).

இந்த நாவல்கள் எந்த அளவிற்கு இவருக்கு வாசகர் வட்ட்த்தைப் பெற்றுத் தந்ததோ அதே அளவிற்கு சில பல சிக்கல்களையும் கொணர்ந்தது. கம்யூனிஸ்ட் கட்சியினர் பலரின் அதிருப்திக்கு இவரது ”போராட்டங்கள்” உண்டாக்கியதென்றால், ”கல்லுக்குள் ஈரம்” நாவல் தன்னுள் விடுதலை உணர்வைத் தூண்டியது என்ற ‘பிரபாகரன்’ அவர்களின் பேட்டி, சிபிஐ, சிஐடி போலீசாரால் இவரை விசாரிக்க வைத்தது.

ஆத்திகம், நாத்திகம், கம்யூனிசம் என்றெல்லாம் சற்றே சர்ச்சையான நூல்களை எழுதிய அதே நல்ல பெருமாள்தான், தனது பிரம்ம ரகசியம்(19820 என்ற நூலின் மூலம் பல்வேறு தத்துவ ஞானிகளின் கருத்துக்கள், சமய அறிஞர்களின் கருத்துக்கள், புத்த மதம் முதல் சைவ சமயம் வரை பல சமயக் கருத்துக்களை, தத்துவங்களை எளிமைப்படுத்தி கொடுத்திருக்கிறார் என்பது சற்றே ஆச்சரியமூட்டும் விஷயந்தான். எனக்குத் தெரிந்த இவருடைய மற்ற நூல்கள் எண்ணங்கள் மாறலாம் (1976), வீண் வேதனை (1950), நம்பிக்கைகள் (1981)  மற்றும் மருக்கொழுந்து மங்கை

நல்லபெருமாளின் சமூக நாவல்கள் பிரபலம் அடைந்த அளவிற்கு அவரது சிறுகதைகள் பெரிதாகப் பேசப் படவில்லை. மிகச் சாதாரணமாகவே கருதப்பட்டது. அவரது கல்லூரிக் காலத்திலேயே அவர் சிறுகதைகளை எழுத ஆரம்பித்ததோ அல்லது அவருக்கு பெருமை சேர்த்த சமூகச் சாடல்கள் அவரது சிறுகதைகளில் இல்லாததோ அதற்குக் காரணமாயிருந்திருக்கலாம்.

இத்தனை நூல்களை எழுதிய நல்ல பெருமாள் சட்டம் படித்தவர் என்பது பண்பலையில் அவர் கொடுத்த ஒரு நேர்காணலில்தான் எனக்கு தெரிந்தது. காந்தீயக் கொள்கைகளுக்கு தன்னுடைய ”கல்லுக்குள் ஈரத்தில்” குரல் கொடுத்த இதே நல்ல பெருமாள், அதே பேட்டியில் இந்தக் காலகட்டத்திற்கு காந்தீயக் கொள்கைகள் ஒத்து வராது என்று சொன்னது ஒரு நகை முரணாகவும் இருந்தது.

ர.சு நல்லபெருமாள் மொத்தம் 10 சமூக நாவல்கள், 2 சரித்திர நாவல்கள், 1 தத்துவ நூல், 2 சிறுகதைத் தொகுப்பு மற்றும் ஒரு சுய முன்னேற்ற நூலினை எழுதியுள்ளார். மிகப் பரவலாக அறியப்பட்ட நல்லபெருமாள், 1990க்குப் பிறகு எழுதவில்லை. எழுத வேண்டுமே என்று எழுத முடியாது, எனக்கு அதன் பின் நடை வரவில்லை, அதனால்தான் எழுதவில்லை, எழுத்தாளர்களுக்கு ஒரு சாச்சுரேஷன் பாயிண்ட் வருவது இயற்கை, எனக்கு அது ஏற்பட்டிருக்கலாம் என தைரியமாகத் தன் பேட்டியில் சொன்னது எனக்கு சற்று ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.

பிரிவுகள்:புத்தகம் குறிச்சொற்கள்:,

பாமரனின் ‘படித்ததும் கிழித்ததும்’

கவுண்டமணியோட நக்கலை கேள்விப்பட்டிருப்பீர்கள், பாமரனோட நக்கலை தெரியுமா?

அவருடைய ‘படித்ததும் கிழித்ததும்’ புத்தகத்தை படித்தால் உங்களுக்குப் புரியும்.

பாமரனின் சில சில கட்டுரைகளை அவ்வப்போது படித்ததுண்டு. ஆனால் முழு புத்தகமாக படித்தது, புத்தக கண்காட்சி சென்று வாங்கிய வெவ்வேறு புத்தகங்களில் ஒன்றான இந்த பாமரனின் ‘படித்ததும் கிழித்ததும்’ புத்தகம்தான்.

வெறுமனே ஒரு பக்க, இரு பக்க கட்டுரைகள்தான் ஒவ்வொன்றும், ஆனால் ஒவ்வொரு நிகழ்விற்கோ, செய்திக்கோ பாமரன் அடித்திருக்கும் கமெண்ட் செம நக்கல்.

‘மக்களுக்காகப் போராடி மடியும் நெல்லை மணி பாத்திரத்தில் நடித்த பசுபதிக்கு தமிழக அரசின் சிறந்த வில்லன் விருது…
அதுவும் சரிதான்
கலைஞராகட்டும், புரட்சித்தலைவியாகட்டும்…
இவர்கள் எல்லாருக்குமே மக்களுக்காகப் போராடும் போராளிகள் யாராயிருந்தாலும் வில்லன்கள்தானே?’

‘நுழைவுத் தேர்வு ரத்தானதால், மதிப்பெண்களுக்கு அடுத்த படியாக, பிறந்த நாளின் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் – என்னங்கடா உங்க கணக்கு, பொறந்த நாளுக்கும், வயசுக்கும் என்னய்யா சம்பந்தம்…

கிணத்து தண்ணியை ஆத்து வெள்ளமா அடிச்சுட்டு போயிரப்போகுதுன்னு ரெண்டாம் ஆட்டம் சினிமா பாத்துட்டு வந்து கமுந்தடிச்சு  தூங்குனவனுக்கு இதுதான் முடிவா? இல்ல, முதல் குழந்தை இப்போதைக்கு வேணாம், ரெண்டாம் குழந்தை எப்பவுமே வேணாம்னு அரசாங்கத்தோட கொள்கையை ஒழுங்கா கடைபிடிச்சவனுக்கு அரசாங்கம் கொடுக்கிற மரியாதை இதுதானா?

நிலைமை இப்படியே போனா, அப்புறம் நாளைக்கு யாரும் பிள்ளை  பெத்துக்கறதுக்கு கல்யாணம் வரைக்கும் வெய்ட் பண்ணிட்டு இருக்க மாட்டாங்க, எச்சரிக்கை’

‘எப்படியோ ஒருவழியா 1948ல் எழுதப்பட்ட காந்தி கடிதம் ஏலம் விடுவது தடுக்கப்பட்டு விட்டது. அதற்கு மன்மோகன் சிங், மத்திய கலாச்சார அமைச்சகம், பிரணாப் முகர்ஜி என எல்லோரும் எடுத்துக்கொண்ட முயற்சிகள் சொல்லி மாளாதது.

அந்நியப் பொருள் புறக்கணிப்பு தொடங்கி அந்நிய முதலீடுகள் வரைக்கும் காந்தியையே ஏலம் விட்டாச்சு, இதுல கடுதாசி ஒன்னுதான் பாக்கி’

‘கோர்ட் அவமதிப்பு வழக்கில் ஜெயிலுக்கே போனாலும் சரி, இதை சும்மா விடப் போவதில்லை.

பின்னே அமிதாப் விவசாயி இல்லியாம்! அவருக்கு நிலத்தை ஒதுக்கியது தவறாம்!

அவரு விவசாயி, அவங்க அப்பா விவசாயி, புனேவுல இருக்கற அவங்க அப்பா நெலத்துல அமிதாப் ஏரோட்டியிருக்கார்

சாணி வழிச்சு வறட்டி தட்டியிருக்கார், உரக்கடை கியூவுல கால் கடுக்க நின்னு பாக்டம்பாஸ் வாங்கி தோள்ல வெச்சு தோட்டத்துக்கு கொண்டு போயிருக்கார்

விதர்பாவுல விவசாயிகள் கூட்டம் கூட்டமா தற்கொலை செஞ்சப்ப இந்தப் பயிருக்குப் பயன்படாத பூச்சி மருந்து எனக்காவது பயன்படட்டும்னு அப்படியே வாயில ஊத்தப் போயிருக்கார்

நல்லவேளையா, அந்த நேரம் சுள்ளி பொறுக்கப் போன ஜெயா பச்சன் வந்து காப்பாத்துனதால இந்திய விவசாயமே காப்பாத்தப்பட்டது’

‘நல்லவேளை இளவரசி டயானாவின் வழக்கு முடிவுக்கு வந்தது, அதில் நம் இந்தியப் பத்திரிக்கைகள் ஆற்றிய பங்கிருக்கே!!

பிரிட்டிஷ் பிரஜைகளையே தூக்கி சாப்பிடும் வகையில் ராஜ விசுவாசத்துடன் நடந்து கொண்டன

டயானா ஏதோ இவர்களது அத்தை மகளைப் போலவும்..

இளவரசர் சார்லஸ் ஏதோ இவர்களது சித்தப்பா பையனைப் போலவும்…

புள்ளிவிவரமாக அச்சு பிசகாமல் கொடுத்த செய்திகள் இருக்கிறதே… அடடா…

சார்லஸின் மனைவி டயானா

டோடி பயத்தின் காதலி

டயானாவின் கணவன் சார்லஸ்

கமீலாவின் காதலன்…

இதையே உள்ளூர் கூலித் தொழிலாளிகள் செய்திருந்தால் அந்தக் காதல் கள்ளக்காதலாகி இருக்கும். நம்மவர்கள் காதலை அளப்பதற்கு வைத்திருக்கும் அளவுகோலே தனி ரகம்தான்’

இவையெல்லாம் பாமரனின் நக்கல்களுக்கு சில சாம்பிள்கள்…

அரசியலோ, அரசியல்வாதிகளோ, சமூக நிகழ்வுகளோ, நாட்டு நடப்போ என பல விஷயங்களில் மனிதர் அநியாயத்துக்கு கோபப்படுவதும், நக்கல் அடிப்பதுமாக அழிச்சாட்டியம் பண்ணியிருக்கார்.

என்னதான் நக்கல் அடித்தாலும், அதன் பிண்ணனியிலுள்ள தார்மீக கோபத்தையும், சமுதாய அக்கறையையும் நம்மால் எளிதில் அடையாளம் காணமுடிகிறது.

அங்கவை சங்கவை விஷயத்தில் மனிதரின் கோபம் கட்டுக்கடங்காமல் போகிறது

…இன்று எங்கள் தந்தையையும் இழந்தோம், நாட்டையும் இழந்தோமே, என பாரியின் மகளிர் அங்கவையும், சங்கவையும் கதறிய கதறல் புறநானூற்றைப் புரட்டிப் பார்த்தவர்களுக்கு தெரியும்

இவர்கள்தான் இன்றைய தமிழ் சினிமாவின்  கேலிப் பொருள்

இதற்கு ‘தமிழ்வாய்ந்த’ வாத்தி ஒருத்தர் பல்லை இளித்துக் கொண்டு ‘வாங்க வந்து பழகுக’ என்று மாமா வேலை பார்க்கும் காட்சியைப் பார்க்கும் போது ரத்தம் சூடேறி விட்டது

வசனம்: சுஜாதா

அங்கவை சங்கவைக்குப் பதிலாக பிரியதர்ஷிணி, தேவதர்ஷினி என்றோ … அபித குஜலாம்பாள், குசல குஜாம்பாள் என்றோ அல்லது சிவாஜிராவ்வுக்குப் பிடித்த பர்வதம்மா பசவம்மா என்றோ போட்டிருக்கலாமே, எது தடுத்தது இவர்கள் அனைவரையும்?…….

‘படங்களுக்குத் தமிழில் பெயர் சூட்டுங்கள்’ என்று பொங்கி எழுந்த தமிழ் பாதுகாப்பு பேரவையினர் இப்போது தமிழ்நாட்டில்தான் இருக்கிறார்களா?

கற்பு விஷயத்தில் குஷ்புவை விட்டேனா பார் என்று தொடை தட்டிய ஜாம்பவான்கள் இப்போது மட்டும் எங்கே போய் தொலைந்தார்கள்…

இதில் வக்கிரத்தின் உச்சகட்டம் என்னவென்றால் இருவருக்கும் கருப்புச் சாயம் பூசிக் காட்டியிருப்பதுதான்…

ஒன்றை மட்டும் நினைவில் வையுங்கள்

கருப்பு என்பது நிறமல்ல, இனம். இதை உங்களுக்குப் ‘புரியும் மொழியில்’ சொல்வதனால்…

Black is not a color
to erase
It is a RACE

இத்தோடு நிறுத்துங்கள் உங்கள் விபரீத விளையாட்டை அப்புறம்…

நாங்களும் ‘பழக’ ஆரம்பித்தால்… எச்சரிக்கை.

வெறுமனே நக்கல் மட்டுமாக இல்லாமல், அவர் சொல்லும் சில யோசனைகளும் பரிசீக்கக் கூடியதாக இருக்கிறது.

நுழைவுத்தேர்வு பிர்ச்சனையில், பிறந்த நாளை ஒரு அளவுகோலாய் வைக்காமல், அரசுபள்ளிகளில் படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கலாம் (பள்ளி இறுதி வரை அரசு நிறுவனங்களை நிராகரித்து விட்டு, பொறியியல், மருத்துவப் படிப்பின் போது மட்டும் அரசு கல்லூரிகளை நாடுவது எந்த விதம்?)

சமத்துவபுரத்தில் இந்த சாதியை சேர்ந்தோர் இத்தனை சதவீதம், இன்னொரு சாதியை சேர்ந்தோர் இத்தனை சதவீதம் என்று வழங்காமல் உண்மையான சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கே முன்னுரிமை வழங்கப் படவேண்டும். அப்பதான் …பையன், … பொண்ணுக்கு லெட்டர் கொடுத்தான், …. பொண்ணு, ….பையன் கூட ஓடிப்போயிட்டா போன்ற பிர்ச்சனைகள் அங்கு எழாது

என்பதெல்லாம் யோசிக்க வேண்டிய விஷயங்கள்தான்…

புத்தகத்தில் இவர் பெரிதும் விளாசுவது தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு என்ற அரசின் ஆணை, தமிழ் சினிமாவின் போக்கு, அரசியல்வாதிகளின் நடவடிக்கைகள், வேடிக்கை பார்ப்பதன் மூலம் சமூகக் கொடுமைகளை ஊக்கப்படுத்துகிற ஊனமுற்ற சமூகம், கம்யூனிஸ்டுகள் (முக்கியமாக கேரள கம்யூனிஸ்டுகள்) மற்றும் ஜார்ஜ் புஷ்! ஆகியோரைத்தான்

இவை தவிர இந்த புத்தகத்தின் வாயிலாக அவர் அறிமுகப்படுத்துகின்ற சில கவிஞர்கள், அவர்களுடைய கவிதைகள் மிக அருமை

காதல் கவிதைகளுக்குத் தப்பித்து அறிவுப்பூர்வமான எழுத்துக்களோடு உலா வரும் கவிஞர்களுள் மனதுக்கு ஆறுதலாக இருந்ததாக அவர் சிலாகிப்பது அ.ப.சிவா அவர்கள் எழுதிய ”கருப்பு காத்து” என்ற நூலைத்தான்…

‘அட்சயத்திரிதியை
தங்கம் வாங்கினான்
கூடியது
கடன்

ஆறு மாதத்துக்கப்புறம்
சீராய் ஓடியிருந்தது
செலுத்திய
சேரி இரத்தம்!

சனி
6-ம் வீட்டில்
புதன்
2-ம் வீட்டில்
நான்
வாடகை வீட்டில்’

”வீடு வாங்குவதற்குப் பதிலாக வீடு நிறைய புத்தகங்கள் வாங்கிய அப்பாவிற்கு” என்று மனதைத் தொடும் வரிகளோடு “நிறமறியாத் தூரிகை”  என்ற கவிதை நூலுக்கு சொந்தக்காரர் கவிஞர் பா. மீனாட்சி சுந்தரம், முதல் நூலை வெளியிட்டது ஆங்கிலத்தில்…

மனிதர்கள் மீது இவர் கொண்டுள்ள காதலுக்கு இவர் வரிகளே சாட்சி

‘வீடற்ற குழந்தையொன்று
சோப்பு நுரையை ஊதியபடி
உடைத்தெறிகிறது
ஓராயிரம் உலகங்களை

இலட்சங்கள் கொடுத்து
வாங்கிய நான்கு சக்கர வாகனம்
எச்சங்களைத் தவிர்க்க
வெட்டியெறியப்பட்ட
மரத்தைத் தேடியவாறு
சுவர் நெடுக மரங்கள்!

எல்லாம் ஒன்றுபோல இருப்பதால்
எதுவென்று தெரிவதில்லை
அப்பாவின் குழிமேடு’

என்ற வரிகள் ஏற்படுத்தும் வலியும், ஏக்கமும்… இந்த புத்தகத்தை நான் வாங்க வேண்டும் என்கிற தாக்கத்தை ஏற்படுத்தியது

காஞ்சிபுரத்தில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் அறிமுகமானதாக, இவரைப் போலவே சமூக கோபங்களை வெளிப்படுத்துவதாக இவர் சிலாகிப்பது பாரதி ஜிப்ரானின் ‘முன்பனிக்காலம்’ என்ற கவிதை நூலைத்தான்…

‘மிகச் சரியாய்
இசைக்கும்
இசைக் கருவிக்கு
இங்கெவனோ
பெயர் வைத்தான்
‘தப்’பென்று
……………………

கடவுளுக்காக
மொட்டையடித்துக்
கொள்கிறான்
மனிதன்…
மனிதனுக்காக
ஒரு மயிரையும்
இழக்கத் தயாராய் இல்லை
கடவுள்.

‘எல்லோரும்
காதலிக்கிறார்கள்
பின்னொரு நாளில்
வருத்தப்படுகிறார்கள்.
சிலர் சேர்ந்ததற்காக
சிலர் பிரிந்ததற்காக’

என்ற கவிதை என்னை ‘அட’ சொல்ல வைத்தது (இப்போ என் கூகள்ல ஸ்டேட்டஸ் மெஸேஜ் இதுதான்)

இது தவிற நம்முடைய சக வலைபதிவர் நவீன் பிரகாஷின் கவிதைகளை, மீண்டும் ஒரு முறை காதலிக்கத் தூண்டுவதாக பெரிதும் பாராட்டுகிறார். இணைய தளங்களில் இளைப்பாறியது போதும், இவற்றை புத்தகமாக போடச் சொல்லி பாராட்டுகிறார். வாழ்த்துக்கள் நவீன் பிரகாஷ்!!!!

ஆனால் இவை எல்லாவற்றையும் விட பாண்டிச்சேரியில் அவருக்கு அறிமுகமான 14 வயது சிறுமி எழுதிய ‘சிறகின் கீழ் வானம்’ என்ற நூல் ஏற்படுத்திய அதிர்ச்சி அவருக்கு மட்டுமில்லை எனக்கும்தான். அந்த சிறுமியின் பெயர் கு.அ. தமிழ்மொழி.

அவருடைய இரு நெத்தியடிகள்

‘அரசு கோப்பு
நடவடிக்கை எடுத்தது
கரையான்…

ஆறுமுகனே
பன்னிரு கைகள் வேண்டும்
வீட்டுப்பாடம்’

மொத்தத்தில் கவுண்டமணி ரசிகனான எனக்கு இந்தப் புத்தகம் மிக பிடித்து விட்டது. நண்பர்கள் யாருக்கு இந்தப் புத்தகம் படிக்க விரும்பினாலும் அணுகலாம் (பதிலுக்கு ஒரு புத்தகத்தோடு மட்டுமே!!!!!)

பிரிவுகள்:புத்தகம் குறிச்சொற்கள்:,