தொகுப்பு

Archive for the ‘அரசியல்’ Category

ஏனெனில், இவர்கள் மாணவர்கள்!

Because

ஈழப் போராட்டத்தின் போது, இதற்கும் அதிகமான கல்லூரிகள், மாணவர் அமைப்புகளும், வராது வரும் விருந்தாளியாக சில பல பொறியியல் கல்லூரிகளும் கூட இணைந்து போராடிய சமயத்திலேயே அதனை எப்படி அடக்கினர், நீர்த்துப் போகச் செய்தனர் என்பதெல்லாம் எல்லாரும் நேரில் பார்த்த ஒன்றே!

ஈழப்போராட்டங்களில், எல்லாக் கட்சிகளை விடவும், எந்த வித எதிர்பார்ப்புமின்றி, சுய நேர்மையாக, அக்க‌றை என்ற ஒற்றைபுள்ளியில் எல்லாரும் இணைந்து நின்றனர்.

அவர்களுடைய போராட்டம் வெற்றியடையாம‌ல் போயிருக்கலாம், அவர்களுல் பலருக்கு ஈழத்தின் முழு வரலாறும் கூட தெரிந்திருக்காது, இந்திய, மாநில‌ அரசுகளினுடய‌ அரசியல் முழுமையாக புரிந்திருக்காது. ஆனால் அவர்கள் ஒன்றிணைந்து நின்றதற்கான காரணதிலோ, அந்த நேர்மையின் மேலோ எந்த வித சிறுமையும் படுத்திவிட முடியாது!

அப்படி ஒரு இணைப்பு, அந்த நேர்மை, எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் உவப்பானதாக இருக்க முடியாது! அதனாலேயே அவர்களுடைய போராட்டங்களை நீர்த்துபோகச் செய்வதில் எல்லாக் கட்சிகளுமே மறைமுகமாக இணக்கம் காட்டுவார்கள்!

அந்தக் கூட்டத்தையே கலைத்தவர்களுக்கு, போராட்டத்தை நீர்த்துப் போக வைத்தவர்களுக்கு இப்பொழுது மாணவர்கள் எடுக்கும் போராட்டத்தை கலைப்பது ஒன்றும் கடினமான விஷயமாக இருக்க முடியாது!

வருடந்தோறும் மாணவர்கள் மாறுவார்கள்! ஆனால், காலம் முழுக்க, ஆட்சியாளர்களும், அரசு எந்திரங்களும், அவர்களது சிந்தனைகளும் மாறப் போவதேயில்லை. ஈழப்போராட்டம் முதல், ஏற்கனவே நடந்த போராட்டங்களிலேயே, ஜனநாயக அடக்குமுறைக்கான பாதையை கண்டறிந்திருப்பார்கள்!

ஒரு பக்கம், போராடக்கூடிய மாணவர்களின் யோக்கியதையை அவர்கள் கேள்விக்குள்ளாக்குவார்கள்.

மாணவர்கள், போராட்டத்தினூடே பாட்டில்களை அள்ளுவதாகவோ, அவர்களே குடித்துவிட்டுதான் போராடுவதாகவோ காட்சிகள் பரப்பப்படும். இன்னொரு புறம் அவர்களை ஒடுக்க, கல்லூரிகள் விடுமுறை அறிவிக்கும். காவல்துறை அவர்களை கைது செய்யும் அல்லது பயமுறுத்தும்.

இன்னொரு புறம் மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தாமல், போராடலாமா, வன்முறையைக் கையில் எடுக்கலாமா? என்பது போன்ற கேள்விகளை பொதுமக்கள் வாயிலாக கேட்க வைக்கும்!

இதில் இரண்டு விதக் கூட்டம் இருக்கிறது. ஒரு கூட்டம், எந்தப் போராட்டத்தையும் தவறு என்று பேசும். சாதீயப் பாகுபாடை பேசும் சமூகத்தில் வளர்ந்து, ஒழுக்கத்தைப் பேசாத கல்வி அமைப்பில் கற்று, மனித நியதிகள் எண்ணாத நிறுவனங்களில் சம்பாதிப்பது மட்டுமே முன்னேற்றம் என்று பேசும். எந்த இடத்திலும் கேள்வி கேட்பவன் பிழைக்கத் தெரியாதவன் என்ற கொள்கையைக் கொண்டிருக்கும்!

இன்னொரு கூட்டம், போராட்டம் தன் சார்புக் கட்சி, அமைப்பு, மதம், சாதிக்கு எதிராக என்றால் அதன் நியாயத்தை பேசாமல், முழுக்க புறம் கூறும். அவர்களை கேவலப்படுத்தும். அதே, தமக்கு ஆதரவாக என்றால், அவர்களை தலைக்கு மேல் தூக்கி வைக்கும்!

ஆனால், எல்லா இடங்களிலும் மாணவர்கள், அதே பக்குவமற்ற, முறையான திட்டமிடல் இல்லாத, முழுச் சித்தாந்த புரிதலற்ற போராட்ட முறையையே மேற்கொண்டிருப்பார்கள்!

ஆளானப்பட்ட, போர்களிலும் சரி, நிர்வாகப் பாடங்களிலும் சரி, வெற்றியடையும் வரை, தோல்விகள் கூட படிப்பினைகளாக ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. அவை வெறும் தோல்விகள் மட்டுமே!

ஆம், வன்முறையை கையில் எடுத்திருக்கிறார்கள்.

ஏனெனில் இவர்கள் மாணவர்கள். எளிதில் உணர்ச்சி வயப்படுபவர்கள். முழு முதிர்ச்சி இல்லாதவர்கள் (?), விழுந்தாலும், திமிறி எழுவதே வெற்றி என்று எண்ணிக் கொண்டிருப்பவர்கள். தூண்டிவிடத் தோதானவர்கள்.

ஏனெனில், சாதீய பாகுபாடு, மதத் தீவிரவாதம், மோசடி, மூடநம்பிக்கைகள் என்று சமூகத்தின் புரையோடிப் போன பிரச்சினைகளினூடே வளர்ந்தாலும், மாணவக் காலத்தில் மட்டுமே இதைத் தாண்டிய ஒற்றுமை சாத்தியம் என்பதை உணர்ந்து, அதனை நோக்கி நகரத்துவங்கியிருப்பவர்கள்.

ஏனெனில், இதைத் தேர்தல் உத்தியாகவோ, வாக்குவங்கி அரசியலாகவோ பார்க்கத் தெரியாதவர்கள். வெறும் பிரச்சினையாக மட்டும் பார்ப்பவர்கள். இதற்கான, முழுமையான தீர்வு கூட இவர்களிடம் இருக்காது. பூரண மதுவிலக்கு சாத்தியமற்ற ஒன்று என்ற நிதர்சனம் இவகளுக்கு புரிந்திருக்காது.

ஏனெனில், ஒரு அரசியல் கட்சியினைப் போல, ஒவ்வொரு கட்டமாக போராட்டத்தைக் கொண்டு செல்லும், பிரச்சினையினை உயிர்ப்புடனே வைத்திருக்கும், அதன் மூலம் எந்தளவு அரசியல் ஆதாயம் அடையமுடியும் என்ற திட்டமிடல் இல்லாதவர்கள்!

ஏனெனில், அறப்போராட்டத்தை வன்முறையாகவோ, வன்முறையே நடந்திருந்தாலும் அதை அறப்போராட்டம் என்று மாற்றக் கூடிய கலையையோ, செல்வாக்கையோ, அதிகாரத்தையோ முழுமையாகக் கொண்டிராதவர்கள்!

ஏனெனில், இவர்களின் யாருடைய உறவினர்களும், சொந்தங்களும் மதுபான ஆலையையோ, ஏன் கடையயோ வைத்திருக்காதவர்கள். மாறாக பெரும்பாலும், மதுவால் பாதிக்கப்பட்டவர்கள். ஏன், நேற்று வரை அது சம்பந்தமான பிரக்ஞையற்றவர்களாய் கூட இருந்திருப்பர். முந்தைய வார இறுதியில் கூட தண்ணியடித்திருப்பார்கள்! அடுத்த வார இறுதியில் தண்ணியடிக்க, எப்படி காசு தேற்றுவது என்ற யோசனையில் இருப்பவர்கள்.

ஏனெனில், கேவலம் ஊழலுக்காக கைதானாலும், நீதிமன்றமே தீர்ப்பு அளித்தாலும், அதை ஏற்க்காமல், வன்முறையை தொடர்ந்து வன்முறைகளை கட்டவிழ்த்த கட்சிகளையும், தொண்டர்களையும், அதனை அனுமதிக்கும் அரசு எந்திரத்தையும் பார்த்தே வளர்ந்தவர்கள். அவர்கள்தான் சொல்லித் தந்தார்கள், வன்முறையை கையில் எடுப்பதே கவனத்தை ஈர்க்கும் என்று! அது ஒன்றும் பெரிய தவறு இல்லை என்று!

ஏனெனில், இவர்கள் வெறும் மாணவர்கள்!

பிரிவுகள்:அரசியல் குறிச்சொற்கள்:,

தமக்குத் தாமே வலையா???

படத்தைப் பார்க்காமலே தடை விதித்தார்கள் என்பது குற்றச்சாட்டாக இருந்தாலும், எனக்கென்னமோ மிகவும் முக்கியமான ஒரு விஷயத்தை யாரும் பேசவில்லை அல்லது தேவையனவர்கள் மட்டுமே கவனித்துக் கொள்கிறார்களோ என்பதே! மிக முக்கியமாக இஸ்லாம் அமைப்புகளே இந்த விஷயத்தைக் கவனிக்கவில்லை!

Image

  • ஊடகங்களில் எல்லாம் இஸ்லாமியர்களின் மனதைப் புண்படுத்தியிருக்கிறது என்றுதான் விவாதம் போகிறது அல்லது கருத்துச் சுதந்திரம் பற்றி பேசுகிறது! ஆனால் ஆரம்பத்திலிருந்தே அரசு இதனை சட்டம் ஒழுங்கோடு முடிச்சு போட்டு வருகிறது!
  • சொல்லி வைத்தாற் போன்று சில தியேட்டர்களில் வெடிகுண்டு மிரட்டல், பேனர் கிழிப்பு, சின்ன வன்முறை!
  • எல்லா இடங்களிலும் அமைதியாக ஓடும் படத்திற்கு இங்கு மட்டும் கலவரம் வருமென்று சொல்வதன் மூலம் யாரைக் கை காட்டுகிறது இந்த அரசு??? – இயல்பாய் அலுவலக நண்பர் ஒருவர் சொன்னது, பண்ணாலும் பண்ணுவாங்க, அமெரிக்க எம்பசியையே அடிச்சாங்கள்ல கொஞ்ச நாள் முன்னாடி. என்பதே…
  • ஆக பொது புத்தி மனப்பான்மையை சினிமாதான் விதைக்க வேண்டியதில்லை. அதைவிட எளிதாகவும், அழுத்தமாகவும் அரசு விதைக்க முடியும். அதற்கு எதிராக எப்படி போராடப் போகிறது, இந்த அமைப்புகள்?
  • கமலின் முந்தைய படங்களில் வரும் பல விஷயங்கள் விவாதத்திற்குரியது என்றாலும், இந்தப் பிரச்சினையில், வேறு மாநிலத்திற்குச் செல்கிறேன் என்ற வலி கலந்த வார்த்தைகளின் மூலமும், சொத்தை விற்றுதான் படம் எடுத்தேன் என்கிற உண்மையின் மூலமும், அனைவரது அனுதாபத்தையும் சம்பாதித்தது கமல் என்றால், ஏறக்குறைய பலரது கடுப்பை சம்பாதித்துக் கொண்டது இந்த இஸ்லாம் அமைப்புகள் மட்டுமே. ஆனால் அரசு எங்குமே சிக்கவில்லை! அல்லது செயல்கள் எங்குமே கேள்விக்குள்ளாகவில்லை! அரசியல் கட்சிகள் உட்பட அனைவருமே பேசி தீருங்கள் என்று நழுவலாகவே பேசுகிறார்கள்!
  • ஏனெனில், அரசின் பிரதிநிதிகளாக மக்கள் முன் தோன்றுவதும், இதே இஸ்லாம் அமைப்புகள்தான்! மிகப்பெரிய நகைமுரண், எந்த இஸ்லாமிய அடையாளங்கள் மக்கள் மனதில் ஒரு கருத்தை விதைக்கிறது என்று எதிர்ப்பு வருகிறதோதோ, அதே அடையாளங்களுடன் ஊடகங்களில் தோன்றி அரசின் சார்பில் பேசும் போது, கடுப்பு, அரசின் மேல் ஏற்படவில்லை. மாறாக, அமைப்புகளின் மேலேதான்…
  • இன்னொரு ஆச்சரியம், படம் சிலரைக் காயப்படுத்துகிறது என்றால், படத்தைப் பார்க்க வேண்டும், பின் கருத்து சொல்லலாம் என்று பேசலாம்! ஆனால் சட்டம் ஒழுங்கு என்று வாதத்தை அரசு வைக்குமானால், அதுவும் நடு ராத்திரியில் போய் தடை வாங்கக்கூடிய அளவுக்கு சமூக அக்கறை அரசிற்கு இருக்குமானால், படம் பார்க்கும் தேவையை விட, வெளிச்சூழலையும், அதற்கு காரணமாக யார் அல்லது எது இருக்க முடியும் என்ற திசையில்தானே வாதம் போக வேண்டும்? மாறாக அப்படிப் போகவில்லை என்பதன் காரணம் என்ன? கொலைக்கான குற்றத்தை, கொலையை நேரில் பார்த்தால்தான் தண்டனை வழங்க முடியுமா என்ன???
  • என் எண்ணமெல்லாம், யாருக்கோ விரித்த வலையில் மாட்டுவதென்பது வேறு! ஆனால் தனக்குத்தானே வலை விரித்துக் கொள்வதென்பது வேறு! அப்படித்தான் அமைப்புகள் மாட்டிக் கொண்டனவா???
பிரிவுகள்:அரசியல், சினிமா

காட்சிகள் மாறுதடா!

சரியோ தவறோ, அம்மையார் எதையும் தைரியாமாகச் செய்வார், பூசி மெழுக மாட்டார், என்பதெல்லாம் அவருடைய நிர்வாகத் திறமைக்கு உதாரணமாகச் சொல்லப்படும் வார்த்தைகள்!

சட்டமன்றம் சரியில்லை, நூலகம் இடமாற்றம் போன்ற செயல்களின் போதே இந்த வார்த்தைகளைச் சொன்னவர்கள் சப்பைக் கட்டு கட்ட வேண்டியதன் அவசியம் வந்தது! இருப்பினும் இதுவே தைரியத்தின் வெளிப்பாடுதான் என்றெல்லாம் சமளிக்க முடிந்தது…

Image

ஆனால், எல்லா இடங்களிலும் அமைதியாக ஒடும் ஒரு படத்திற்கு, தமிழ்நாட்டில் மட்டும் சட்டம் ஒழுங்கு பாதிக்கபடும் என்று தொடர்ந்து ஒரு அரசே சொல்லி வருவது, அதுவும் படத்தைப் பார்க்காமலேயே சொல்லி வருவது, அதன் இயலாமையா, அரசியல் பிண்ணனியா, அல்லது யார்ருக்காக போராடுவதாகச் சொல்கிறார்களோ அவர்களைப் பற்றியே ஒரு தவறான பிம்பத்தை ஏற்படுத்தும் முயற்சியா??? நரேந்திர மோடியை வரவழைத்த அரசுதான், சிறும்பான்மை மக்களின் உணர்வுகளைப் புரிந்து நடந்துகொள்வதாக அமைப்புகளின் தலைவர்களே சிலாகிப்பது….

டாவின்சி கோட் படத்தை தடை செய்தபோது கூட, சிறும்பான்மை மக்களின் உணர்வு பாதிக்கப்படும் என்று சொல்லிய திமுக அரசை விமர்சனம் செய்தவர்கள் யாரும் இதற்கு அதிமுகவை விமர்சனம் செய்யவில்லை??? ஜிகே வாசன், சீமான் உட்பட பலரும், கமலை அமைப்புகளுடனும், அரசுடனும் பேச்சுவார்த்தை நடத்தச் சொல்கிறார்கள்!
போலி பகுத்தறிவுவாதிகள் இந்துக்களை மட்டும் விமர்சிக்கிறார்கள் என்ற கருத்துக்களைப் போலே, போலி புரட்சியாளர்களும் திமுகவை மட்டுமே விமர்சிக்கிறார்கள் என்பதும் வலுப்பெறும்!
யாருக்காக டிடிஎச் ஒளிபரப்பில் மாற்றம் செய்தாரோ, அந்த தியேட்டம் உரிமையாளர்கள் கடைசி தீர்ப்பு வரை காத்திருக்கித் தயார் என்று சொல்வதும், 50 வருடம் தமிழ் சினிமாவில் இருந்தவர் என்று ஒட்டு மொத்த திரையுலகமும் பாரட்டு விழா நடத்திய தங்கள் சக கலைஞனுக்கு பிரச்சினை எனும்போது வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்காத திரையுலகத்தின் நிலையும், போயும் போயும் இவர்களையெல்லாம் நம்பி, அதே விழாவில் கமல் சமத்துவம் நிகழும் உலகம் என்று புகழ்ந்தது பரிதாபத்தையே வரவழைக்கிறது!!!
எல்லாவற்றுக்கும் மேலாக இது வெறுமனே கருத்து சுதந்திரத்திற்கும், குறிப்பிட்ட மதத்தினரின் உணர்வுக்கும் மட்டுமேயான போராட்டம் என்று கட்டும் சப்பைக்கட்டுகள் பதிவின் முதல் வரியைப் பார்த்து கெக்கலிக்கிறது!!!
பிரிவுகள்:அரசியல், சினிமா

தும்பை விட்டு வாலைப்பிடிக்கும்……

சாட்டர்ஜியும், நீல்சிங்கும் அந்நிறுவனத்தின் நிதித்துறையில் மிக முக்கிய பதவி வகிக்கின்றனர்…

அந்நிறுவனம் ஒரு பழம்பெரும் நிறுவனம். அது கால்பதிக்காத துறையோ, அளிக்காத சேவைகளோ கிடையாது. மிக அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்களை மட்டுமல்ல, மிகப் பெரிய வாடிக்கையாளர் தளத்தையும் கொண்டிருக்கிறது. மிகச்சிறந்த வல்லுநர்களைக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படும் அந்நிறுவனம் சமீப காலங்களில் மிகப் பெரிய பொருளாதாரச் சவால்களைச் சந்தித்து வந்தது. சற்றே சோம்பேறியான புத்திசாலிகளைக்(?) கொண்டிருந்ததனாலோ என்னமோ, மிகத் தாமதமாகத்தான் அந்நிறுவனத்தின் செலவீனங்களைக் குறைக்க வேண்டியிருப்பதை அவர்கள் கண்டறிந்தனர்…

உடனே அது தனது முதல்நிலை நிர்வாகக் குழுவிற்கு செலவினைக் குறைக்க ஆலோசனை கேட்டு அறிக்கை விடுகிறது. ஆலோசனைக் குழுவோ, இந்த இரு நிர்வாகிகளின் பொறுப்பில் அச்செயலை விட்டு இன்னும் ஒரு மாதத்தில் அதற்கான திட்டத்தைக் கொடுக்கச் சொல்லி கட்டளையிடுகிறது….இனி அவர்கள் இருவரும் பேசிக் கொள்கிறார்கள்….

இடம்: ஒரு ஐந்து நட்சத்திர விடுதி!!!

நீல்சிங்ஜி, நாளைக்கு வெள்ளிக்கிழமை

ஆமா சாட்டர்ஜி சார், இன்னிக்கு வியாழக்கிழமை!!!

கடுப்பேத்தாதீங்க நீல்சிங்ஜி, நாளைக்கு நாம திட்டத்தைக் கொடுக்க வேண்டிய கடைசி நாள், இன்னும் உருப்படியா நாம ஒண்ணும் செய்யலை….

என்ன பண்றது சாட்டர்ஜி சார், இவ்ளோ கஷ்டமான விஷயத்தை நம்மளை மட்டும் தீர்த்து வைங்கன்னா நாம என்ன பண்றது? எல்லாரும் சேந்து செலவு பண்ணுவாங்களாம், ஆனா செலவு குறைக்கறது எப்படிங்கறதை மட்டும் நாம ரெண்டு பேருந்தான் சொல்லனும்னா நாம என்ன செய்ய முடியும்? இடியட்ஸ்….

சரி, சரி விடுங்க, சரக்கு வாங்கிட்டு வரச் சொல்லி ஆளை அனுப்பிட்டீங்களா???

ஓ, அப்பவே ஆர்டர் பண்ணிட்டேன், சரக்கு எல்லாம் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடும், ஆனா இந்தப் பாழாப் போன திட்டந்தான் வரமாட்டேங்குது…..அய்ய்ய்யோ, சட்டர்ஜி சார், சரக்கு, சைட் டிஸ் எல்லாம் ஆர்டர் பண்ணேன், ஆனா இந்த ஊறுகாயை மறந்துட்டேனே!!!

எதையோ யோசித்துக் கொண்டிருந்த சட்டர்ஜியின் முகத்தில் திடீரென்று பல்பு எரிந்தது……நீல்சிங்ஜி ஒரு ஐடியா!!! உடனே நம்ம ஆட்கள் எல்லாருடைய பயணத் திட்டத்துலியும் ஒரு மாற்றம் பண்ணிடலாம்…முதல் கட்டமா, நம்ம ஆட்கள் யாரும், ரஷ்யா, நார்வே, கனடா, ஸ்வீடன், ஆப்பிரிக்கா இங்கல்லாம் போகக் கூடாதுன்னு அறிவிச்சிரலாம்!!!

நீல்சிங் புரியாமல் முழிக்க, சாட்டர்ஜியோ மொபைல் போனில் கால்குலேட்டரை எடுத்து கணக்கு போடுகிறார். நீல்சிங்ஜி, இப்பிடி பண்ணா மாசம் ஒரு கோடி செலவு கம்மியாவும்பா!!!

ஒரு கோடிங்கிறது ரொம்ப சின்ன அமவுண்ட்டு சாட்டர்ஜி சார்!!! சரி, வழக்கமா நம்மாளுங்க பிஸினஸ் க்ளாஸ்லதான் போவாங்க, அதுனால அமவுண்ட்டுல இன்னும் ஒரு 30% சேத்துக்கோங்க….

கரெக்ட், அது மட்டுமில்ல, வழக்கமா நம்மாளுங்க வெளிநாடு போனா, ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்லதான் தங்குவாங்க…அதுனால அதையும் கொறைச்சா மாசம் ரெண்டு கோடி வருது…அப்ப வருசத்துக்கு அப்ராக்ஸிமேட்டா 25 கோடி செலவு கம்மியாகும்!!!

ம்ம்ம், ஆனா 25 கோடி ரொம்ப கம்மியாச்சே?

ஆமால்ல,…………. ஒண்ணு பண்ணுங்க, நீங்க வோர்ல்டு மேப்பை எடுத்துட்டு வாங்க, நான் லேப்டாப்பை எடுக்கறேன், இன்னும் சில நாட்டைச் சேத்தலாம்…

ம்ம்ம், ஆங், ஜப்பானை சேத்துங்க, அப்புறம் சீனா, கொரியா, இத்தாலி….சுவிட்சர்லாந்து

யோவ் அறிவிருக்கா? சுவிட்சர்லாந்தை சேத்தச் சொல்றீங்க, அப்புறம் வெயில் காலத்துல நாம எங்க போறதாம்? இந்த சுவிட்சர்லாந்து, தாய்லாந்துலாம் சேத்த வேணாம்…வேணும்னா சிங்கப்பூர், மலேசியா, துபாய்லாம் சேத்துக்கலாம்….

ஆனா சட்டர்ஜி சார், இங்கல்லாம் நம்மளோட டெவலப்மெண்ட்சுக்கு ஏத்த மாதிரி கத்துக்க வேண்டிய விஷயம் நிறைய இருக்கே?

நீல்சிங்ஜி, அதெல்லாம் கம்பெனியோட தலையெழுத்து!!! நமக்கென்ன வந்துது? நாம இந்த திட்டத்தை சொல்ற மாதிரி சொன்னா, நாம நல்லவங்களா போயிடலாம், இப்போதைக்கு அடுத்தா வாரம் நாம ஆப்பிரிக்கா போக வேண்டிய திட்டத்தை கேன்சல் பண்ணிடலாம், அந்த ஊருக்கெல்லாம் போறதுல எனக்கு முன்னமே புடிக்கலை, இதை சாக்கா வெச்சு கட் பண்ணிட்டம்னா நமக்கு நல்ல புகழ் கிடைக்கும், …இப்ப எக்சல்ல கணக்கு போடுங்க…கூட வேணும்னா இன்னும் நிறைய நாடு சேத்திக்கலாம், ஆனா நம்ம டார்கெட் 200 கோடி வருசத்துக்கு சேமிக்கிற மாதிரி கணக்கு காமிக்கனும் நாளைக்கு, என்ன சொல்றீங்க?

சூப்பர் ஐடியா சட்டர்ஜி சார்!!!

ஓகே, நான் சொல்ற நாட்டையெல்லாம் சேத்துங்க…

டொக் டொக்

என்ன அது?

நாம ஆர்டர் பண்ண சரக்குதான் வந்திருக்கு, ஆனா ஊறுகாய்தான் மறந்துட்டேன்…

பராவாயில்லை, பராவாயில்லை விடுங்க, அதான் திட்டமே ரெடியாயிருச்சே, இனிமே எதுக்கு ஊறுகாய்?

———————————————————————————————————————————————————————————————

அது சுமார் 15 வருடங்களேனும் முந்தைய காலகட்டம். பொருளாதரச் சீர்திருத்தக் கொள்கையால் பல இந்திய நிறுவனங்கள் புதுப்புது போட்டிகளையும் சவால்களையும் சந்தித்துக்கொண்டிருந்தன. இதனை எதிர்கொள்ள அவர்கள் பல்வேறு உத்திகளைக் கையாள வேண்டியிருந்தது. வாகனதயாரிப்புத் துறையில் இருந்த மாருதிசுசூகி நிறுவனமும் அப்போது இதே வகையானச் சவாலைத்தான் சந்தித்தது.

பொதுவாக எந்த ஒரு நிறுவனமும் தனது நிறுவனத்தின் விற்பனையை / சேவையை அதிகரிக்க இரு வகையானச் தத்துவங்களைக் கையாள்வார்கள். ஒன்று காம்பிடிட்டிவ் அட்வாண்டேஜ் (Competitive advantage – தனது பொருளை / சேவையை மற்றவையுடன் இருந்து வித்தியாசப்படுத்திக் காட்டுபவை), மற்றொன்று ப்ரடக்டிவ் அட்வாண்டேஜ் (Productive advantage – மற்ற பொருட்களை விட தனது பொருட்களை குறைந்த விலையில் விற்றல்). விலையைக் குறப்பது என்றால் சும்மாவாக குறைத்து விடவிடியாது.

தனது வாகனங்களை குறைந்த விலைக்கு விற்க மாருதி நிறுவனம் அமல்படுத்திய முதல் விஷயம் லீன் மேனேஜ்மெண்ட் (Lean management). இந்த முறையில், அவர்கள் தங்கள் நிறுவனத்தின் அனைத்து பொருட்கள், செயல்கள் எல்லாவற்றையும் கேள்விக்குட்படுத்தினர் – அதன் தேவை என்ன, செலவு என்ன, எவ்வாறு குறைக்க முடியும் என்று. இந்த முறையில் அவர்கள் மாற்றம் ஏற்படுத்திய முதல் விஷயம் – ஒரு தொழிலாளி அசம்ப்ளிங் யூனிட்டில் வேண்டிய டூல்சை எடுக்க நடக்க வேண்டிய தூரத்தை 15 அடிகளிலிருந்து 6 அடியாகக் குறைத்தனர் (இதற்காகச் செலவு செய்து, ராக் சிஸ்டத்தை இடம் மாற்றி, அதனுடன் ஒரு கண்வேயர் சிஸ்டத்தை இணைத்தார்கள்). மிகச் சாதாரணமாகக் காணப்படும் இந்தச் செயலின் மூலம் அவர்கள் அடைந்த பயன், ஒரு நாளில் 20 நிமிடங்களை அவர்களால் சேமிக்க முடிந்தது. இந்த 20 நிமிடங்களில் அவர்கள் கூடுதலாக இரண்டு கார்களை தயாரித்தனர் (மாசம் சுமாராக 60 கார்கள் – ஒரு காருக்கு அடிப்படை லாபம் ரூபாய் 20,000 எனில், அதே நிலையானச் செயல்களுக்கு அவர்கள் அடைந்த கூடுதல் லாபம் (60*20000*12) வருடத்திற்கு ரூ 14,400,000 (ஒரு கோடியே நாற்பத்து நான்கு லட்சம்). அப்படி ஆரம்பித்த அவர்களது சீர்திருத்தம், வெண்டார் மேனேஜ்மெண்ட், டிஸ்ட்ரிப்யூஷன் சிஸ்டம் என்று பல தளங்களுக்கும் கொண்டு சென்றதன் விளைவுதான், குறைந்த விலையில் அவர்களால் காரினை விற்க முடிந்தது.

———————————————————————————————————————————————————————————————

ஆக ’காஸ்ட் கட்டிங்’ என்ற இந்த தாரக மந்திரம் இந்திய துணைக் கண்டத்தின் நிறுவனங்களில் ஒன்றும் புதிய விஷயம் இல்லை. சில நாட்களாக காணமல் போயிருந்த இந்த தாரக மந்திரம் மீண்டும் பழைய உத்வேகத்துடன் பலருடைய வாயிலிருந்தும் உதிரத்துவங்கியிருக்கிறது. ரிசஷன், பொருளாதார மந்தம் என்று பல சவால்களைச் சந்தித்துக் கொண்டிருக்கும் இந்தியச் சந்தையில் இது ஒன்றும் ஆச்சரியப்படத்தக்க விஷயம் இல்லை என்றாலும், நிறுவனங்களில் மட்டுமே உதிர்க்கப்பட்ட இந்த மந்திரத்தை இந்த முறை பல அரசியல்வாதிகளும் உதிர்த்ததுதான் மிகப் பெரிய ஆச்சரியம்…

காஸ்ட் கட்டிங் என்ற தாரக மந்திரத்தை அரசியல்வாதிகள் உதிர்த்தாலும், அதனைத் தொடர்ந்து செய்த காமெடிதான், இதுவரை எந்த திரைப்படத்திலும் வந்த்தை விட மிகப் பெரிய காமெடியாக இருக்கிறது… செலவுகளைக் குறைக்க மத்திய அரசு எடுத்த முதல் நடவடிக்கை தனது அமைச்சர்களை, பாராளுமன்ற உறுப்பினர்களை வெளிநாட்டுப் பயணங்களைக் குறைத்துக் கொள்ளும்படியும், விமானத்தில் சாதாரண வகுப்பில் பயணம் செய்யும் படியும் அறிவுறுத்தியுள்ளது இது தவிர பிரணாப் கேட்டுக்கொண்ட இன்னொரு விஷயம், அமைச்சர்கள் தங்குவதும், செய்தியாளர்களுடனான சந்திப்பை நடத்துவதையும் ஐந்து நட்சத்திர விடுதிகளில் நடத்தக் கூடாது என்பதுதான், ஏனெனில் அது தேவையற்ற செலவு என்பதுதான் காரணமாம்!!! அப்படி என்றால் இத்தனை நாள் அத்தகைய தேவையற்ற செயல்கள்தான் செய்யப்பட்டனவா என்ற கேள்வி யாரும் கேட்கவுமில்லை, அதற்கு பதிலுமில்லை.

அறிவிப்பு வந்தவுடன் சொல்லி வைத்தாற் போன்று சசி தாரூரும், எஸ்.எம். கிருஷ்ணாவும் தங்களது விடுதி அறையை காலி செய்து விட்டு அரசு விருந்தினர் மாளிகைக்கு ஜாகையை மாற்றினார்கள்… அவர்களுக்கென்று அரசு மாளிகை இருக்கும் போது இத்தனை நாள் ஏன் நட்சத்திர விடுதியில் அவர்கள் தங்கினார்கள் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்!!! சரி போனாவர்கள் சும்மா சென்றார்களா? அவர்கள் விடுதியில் தங்கியிருந்த பொழுது சொந்த செலவிலதான் தங்கினோம் என்றும், இருந்தும் பிரணாப்ஜியின் வேண்டுகோளுக்காக காலி செய்கிறோம் என்று அறிக்கை வேறு!!! எனக்கு புரியாத விஷயம் என்னவென்றால், அவர்களுடைய சொந்த காசுன்னா யாரு சொன்னா என்னான்னு அங்கேயே தங்கலாமே!!! எதற்காக இதை செலவைக் கம்மி பண்ணும் விஷயத்தில் செய்தியாகக் கொண்டு வரவேண்டும்? இதுதான் போகட்டும் என்றால், இந்த வேண்டுகோளை ஏற்று பஞ்சாயத்து ராஜ் அமைச்சர், நார்வேக்கு போறதா இருந்த பயணத்தை ரத்து செய்கிறேன்னு பெருமையா அறிக்கை விடுகிறார்!!! எனக்கு தலையே சுத்துது, இந்தியாவோட பஞ்சாயத்து முறைக்கும், நார்வேக்கும் என்ன சம்பந்தம்? ஏற்கனவே கூவத்தை சுத்தம் பண்ண ஐடியா கற்றுக் கொள்கிறோம் என்று அமெரிக்காவிற்கு சுற்று பயணம் சென்று வந்த நம்மாட்கள் காதில் இது போன்ற ஐடியாக்கள் விழுந்தால் என்னாவது?

என்னதான் நகைச்சுவைக்கென்று தனித்தனி சானல்கள் வந்தாலும் அரசாங்கத்தின் செய்திகளில் அல்லது அறிவுப்புகளில் தருகின்ற காமெடிக்கு இணையே இல்லைதான். கூட்டணி அரசு என்பதால் ஒன்றாகவே இருந்தாலும் இந்த விஷயத்தில் போட்டி போட்டுக் கொண்டு காமெடி செய்வதில் மாநில திமுக அரசோ அல்லது மத்திய காங்கிரசு அரசோ சளைப்பதில்லை… மத்திய அரசுக்கு செலவுகள் அதிகமாகிறது என்று அமைச்சர்களை விமானத்தில் சாதாரண வகுப்பில் பயணம் செய்யுங்கள் என்று பிரணாப் சொன்னதன் மூலம் தமிழ் செய்தி ஊடகங்கள் உட்பட அனைத்தும் அவரை மொய்த்ததை காணப் பிடிக்கமாலோ என்னமோ, மாநில அரசின் அத்தனை அமைச்சர்களும், அதிகாரிகளும் வேலை வெட்டியை விட்டு விட்டு கருத்தரங்கு நடத்துகிறார்கள், நமக்கு நாமே திட்டத்தின் மூலமாக விருதினை வழங்குகிறார்கள், உலகத் தமிழ் மாநாடு நடத்துப் போகிறோம் என்று அறிக்கை விடுகிறார்கள்…

தாமதமாக செயல்படுத்திவருவதால் பொதுத்துறையின் 54 திட்டங்களில் (தெர்மல் மற்றும் ஹைட்ரோ) ஏற்பட்டுள்ள நட்டம் மட்டுமே சுமார் ரூ 29,000 கோடிகள். இந்த லட்சணத்தில்தான், இன்னும் வாழ்க்கைத்தரத்தில் மற்ற முன்னேறிய மாநிலங்கள் அளவுக்கு முன்னேறாத உத்திரபிரதேசத்தில் ரூ 2,500 கோடிக்கு சிலைகளை அமைக்கும் திட்டம் கனஜோராக நீதிமன்ற உத்தரவையும் மீறி நடக்கிறது. இதேநிலை தொடர்ந்தால் செலவை ஈடுகட்ட, அமைச்சர்களிடமிருந்து மட்டுமல்ல எல்லாரிடமிருந்தும் சம்பளத்தில் 20% வாங்கினாலும் வாங்குவார்கள் (ஆனால் அமைச்சர்களிடம் சொன்னது போல் கண் துடைப்பாக இல்லாமல், நம்மிடம் உண்மையாக வாங்கி விடுவார்கள்)

என்னதான் ஜனநாயகம், மக்கள் அரசு என்று பெயருக்குச் சொன்னாலும், அரசின் பல நடவடிக்கைகளை விருப்பமிருந்தாலும், இல்லாவிட்டாலும், கேள்விக்குட்படுத்தும் உரிமையோ அல்லது தெளிவோ மக்களுக்கு இருப்பதில்லை. தப்பித்தவறி தெளிவடைந்து விடக் கூடாது என்றுதானோ என்னமோ பல விஷயங்களில், அரசுக்கும், பயனாளர்களுக்கும் இடையே பெருத்த இடைவெளியே இருக்கிறது……காஸ்ட் கட்டிங் என்ற விஷயத்தில் மாருதி முதல் இன்றைய நேனோ வரை பல நிறுவனங்கள் முன்னுதாரணமாக இருந்தது மட்டுமல்ல, உலகையே திரும்பிப் பார்க்கவும் செய்துள்ளனர். ஒரு காலத்தில் இந்தியாவில் பொருளாதார்ச் சீர்திருத்தத்தை அறிமுகப்படுத்திய ஒருவருடைய தலைமையில் அமைந்த ஒரு அரசில்தான் இது போன்ற பொறுப்பற்ற, விளம்பரத்தை மட்டுமே தேடுகின்ற, ஆதாயமளிக்காத வெட்டி விஷயங்கள் நடந்தேறுகின்றன என்பது வேதனையை மட்டுமல்ல, நம் நாட்டின் எதிர்காலம் பற்றிய பயத்தையும் ஏற்படுத்துகிறது….

தொடர்புடைய பதிவு:

http://www.nesamudan.com/blog/2009/09/16/austerity/ 

பிரிவுகள்:அரசியல் குறிச்சொற்கள்:

எல்லோரும் சுயநலப் பேய்கள்தான்…

ஆரம்பித்து விட்டது தேர்தல் கூத்துகள். யார் கேவலமாக நடந்து கொள்வது என்று கட்சிகளுக்குள் கடும் போராட்டம் நடைபெறுகிறது. எததனை காலமானாலும் நாங்கள் மாறப் போவதில்லை என்று ஆரம்பத்திலேயே தங்களது முகத்தை பாஜக ‘வருண் காந்தி மூலம் வெளிப்படுத்தியது. அதை விடக் கொடுமை, ஜெயிலுக்குள் சென்று பார்த்து விட்டு வந்த மேனகா காந்தி ‘தன் மகன் மிகுந்த தைரியசாலி, அவனை நினைத்து பெருமைப் படுகிறேன் என்று கூறியது!

 

ஒரு காலத்தில் மிருகங்களின் முறையான வாழ்விற்கு கடுமையாகப் போராடியதற்காக நன்மதிப்பைப் பெற்ற இவர், மிருகங்களுக்கான அன்பைக் கூட மனிதர்களிடத்தில் செலுத்த மறுப்பதேனோ? மக்கள் வருண்காந்தியின் பேச்சை ஒத்துக் கொண்டார்களோ இல்லையோ, தாங்கள் நினைத்த புகழ் கிடைத்த திருப்தி பாஜகவிற்கு.

 

இந்தியாவின் மிகப் பெரிய முதியோர் இல்லமாக பாராளுமன்றம் காட்சி அளிக்கின்றது. என் நாட்டின் பிரதமர், முன்னாள் பிரதமர், என் மாநிலத்தின் முதல்வர் என அனைவருமே மருத்துவமனையில் இருந்து வந்த காட்சிகளையெல்லாம் மக்கள் காண வேண்டி வந்தது

 

மத்தியில் நடப்பதை விட, தமிழ் நாட்டில் நடக்கும் கூத்துகள்தான் மிகக் கொடுமை. தமிழகத்தில் வரலாற்றில் எங்கும் கண்டிராத படி, அத்தனை கட்சிகளும் ஈழ மக்களுக்காக அனுதாபம் காட்டினாலும், அங்கு போர், ஏன் முற்றுப் பெற வில்லை என்ற மர்மம் மக்கள் மனதை விட்டு நீங்கவே இல்லை.

 

நேற்றுவரை காங்கிரசுடன் கூட்டணி அமைத்த பாமக இன்று அதிமுகவுடன், ஒருவருடன் ஒருவர் கை கலப்பு வரை சென்ற விடுதலை சிறுத்தைகளும் காங்கிரசும் ஒரே கூட்டணி!. அணிதாவல், கொள்கை மாற்றம் என்று நம் அரசியல்வியாதிகளின் திறமையை கண்டு பச்சோந்திகள் கூட பொந்தை விட்டு வெளி வர மறுக்கின்றன. ஈழப் பிரச்சனையில் கலைஞர் ஏன், தன் எம்பிக்களையும், அமைச்சர்களையும் பதவி விலகச் சொல்ல வில்லை என்று கேள்வி எழுப்பிய அதே பாமக, தனது மகனையும், அமைச்சர்களையும் பதவி விலகச் சொல்லாத அதே பாமக, இப்போது அதிமுகவுடன் கூட்டணி வைத்தவுடன் அவர்களை பதவி விலக வைத்திருக்கிறது. கேட்டால் கூட்டணி தர்மம் என்று வியாக்கியாணம் பேசுகிறது.

 

இவர்கள் எல்லாரையும் தூக்கிச் சாப்பிடும் காமெடியை திமுகவும், காங்கிரசும் அரங்கேற்றி வருகிறது. என்னதான் முதுகெலும்பு ஆபரேசன் வெற்றி என்று மருத்துவர்கள் சொன்னாலும், செய்திகள் வந்தாலும், அப்படி ஒன்றும் வெற்றி இல்லை என்பதை ஈழத் தமிழர்களுக்காக திமுக என்றும் பாடுபடும், ஈழத்தில் அமைதி ஏற்பட பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வார்த்தைகளின் மூலம் நிரூபித்துக் கொண்டே இருக்கிறார் தமிழினத் தலைவர். இதன் அடுத்த கட்ட காமெடிதான், வியாழக்கிழமை (09.04.09) அன்று கட்சி பேதமின்றி பேரணி நடத்துகிறாராம். தவிர பிரதமர் மன்மோகன்சிங்குக்கும், உண்மைப் பிரதமர் சோனியாவுக்கும், ஈழப் பிரச்சனை சார்பாக தந்தி கொடுத்திருக்காராம்.

 

இந்த விஷயத்தில் மட்டும் மிகச் சரியாகவே நடந்து கொண்டிருக்கிறார் தலைவர். இன்னமும் கிராமங்களில், எழவு செய்தியைச் சொல்ல தந்தி முறையைத்தான் பயன்படுத்துகிறார்கள். அப்படி இருக்கையில், இப்போது தந்தி அடித்து, நடவடிக்கை எடுக்கச் சொல்லியிருக்கிறார். என்ன ஒரே குழப்பம் என்றால், பிரதமர்களை நடவடிக்கை எடுக்கச் சொல்லுகிறாரா, அல்லது எல்லாவற்றையும் முடித்து விட்டு எழவுக்கு வந்து சேருங்கள் என்று அழைக்கிறாரா என்றுதான் புரியவில்லை. அதற்கு சப்பைகட்டு கட்டிக்கொண்டு, தலைவர்தான் மிகப் பெரிய தியாகி, அவரளவு இந்த விஷயத்தில் ஒழுக்கம் வேறு யாரும் கிடையாது என்று புள்ளி விவரம் பேசும் அறிவுஜீவிகளைப் பார்க்கும் போது, படிப்பறிவுக்கும் பகுத்தறிவுக்கும் சம்பந்தம் கிடையாது என்ற உண்மையே மனதில் நிற்கிறது

 

தனது கட்சிக்கு, இந்திய நாட்டிலிருந்து ஒரு தலைவரை தேர்ந்தெடுக்க திராணியில்லாத காங்கிரசின் கையில் அடுத்த 5 வருடங்கள் இருந்தால் என்ன ஆகும் என்று நினைத்தாலே பயமாய் இருக்கிறது. இலங்கையில் எம்மக்களை அழிப்பதோடில்லாமல், இந்திய நாட்டையும் தூக்கி தீவிரவாதிகளிடமும், அமெரிக்காவிடமும் அடகு வைத்து விடுவார்களோ என்ற அளவிலேயே ஆட்சி இருக்கிறது. தேசிய பாதுகாப்பு சட்டத்திற்கும், பொடாவிற்கும் உள்ள வித்தியாசம்தான் காங்கிரசுக்கும், பாஜகவுக்கும் இருக்கிற வித்தியாசம்

 

இவர்கள் எல்லாரையும் தூக்கிச் சாப்பிட்டுவிடுவார்கள் என் நாட்டு மக்கள். சுரணை என்றால் விலை எவ்வளவு என்று கேட்பார்கள். சீக்கியர்கள் தனது தலைப்பாகைக்கு கொடுக்கும் மரியாதையை, எம்மக்கள் தனது சகோதரர்களின் தலைகளுக்கு கொடுப்பதில்லை. இவர்களுக்கு தன்மானத்தை போதிக்க கூட, அதே சீக்கியர்கள் மத்தியில் இருந்து ஒருவர் ஷூவை வீச வேண்டி இருக்கிறது.

 

யாருக்காவது அடிமையாய் இருப்பது என்றால் அவர்களுக்கு கொள்ளை விருப்பம். குவார்ட்டரும், கொஞ்சம் காசும் போதும், ஒரு சிலருக்கு, யாருக்கு ஓட்டு போடுவது என்று தீர்மானிக்க. அரசு அலுவலர்களுக்கோ, ஒழுங்காய் வேலை செய்யச் சொல்லி வற்புறுத்தாமல், கேட்கும் போனசை கொடுக்கும் கலைஞருக்குத்தான் அவர்களது நிரந்த ஓட்டு. சில கிருத்துவ அமைப்புகளுக்கோ, மதமாரற்ற தடைச் சட்டத்தை கொண்டு வராமல் இருப்பவர்களுக்கே ஓட்டு. நடுத்தர மக்களோ, டிவிக்கு அடுத்து டிவிடி பிளேயர் கொடுத்தால் ஓட்டுப் போட ரெடியாகி விடுகிறார்கள். ஆக மொத்தத்தில் எல்லாரும் சுயநலப் பிசாசுகளாய் இருப்பதில் கூச்சமே அடைவதில்லை.

 

பிச்சைக்காரனிடம், பத்து ரூபாய் கொடுத்தாலே நடு ரோட்டில் பல்டி அடிப்பான். அதற்கு அடுத்தக் கட்டதிலிருப்பவனுக்கு, நூறு ரூபாய் கொடுத்தால் போதும். நடுத்தரவாசிக்கு, ஆயிரம் கொடுத்தால் போதும், அரசியல்வாதிக்கு, அவரது தலைவர் விருப்பம் என்றால் போது. ஆக மொத்தத்தில் ஈனத்தனத்தை செய்ய எல்லாருமே தயாராக இருக்கிறோம், என்ன, அதற்கான விலைதான் ஆளைப் பொறுத்து மாறுகிறது.

பிரிவுகள்:அரசியல் குறிச்சொற்கள்:,