இல்லம்
> கிரிக்கெட் > அடிச்சாச்சு ஹாட்ரிக்!
அடிச்சாச்சு ஹாட்ரிக்!
இந்தத் தொடர், விஜய்க்கோ, அஸ்வினுக்கோ, தவானுக்கோ மட்டுமல்ல தோனிக்கும், ஒட்டு மொத்த இந்திய அணிக்குமே மிகப் பெரிய திருப்பு முனையாக அமையுமென்று சொல்லியிருக்கிறது! தொடர் ஆரம்பிக்கும் முன்போ, தோனி டெஸ்ட் அணியில் இருக்க வேண்டுமா என்ற அளவிற்கு விவாதங்கள் எழுந்தன! இப்பொழுதோ 2019 வரை தோனிதான் கேப்டன் என்று முழக்கங்கள் கேட்கின்றன! உலகக் கோப்பைக்குப் பின்பு, ஆர்பரித்துக் கொண்டாட வேண்டிய இன்னொரு வெற்றியை இந்திய அணி பெற்றிருக்கிறது!
வெற்றியைத் தந்த அணியில், சச்சின் மட்டுமே மூத்த வீரர்! பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி கோலோச்சியவர்கள் எல்லாரும் அணிக்குப் புதியவர்களே! இன்னும் சொல்லப்போனால், சச்சினுடைய பங்களிப்பு இந்தத் தொடரில் பெரியளவு இல்லை!
இந்திய அணி தேடிக்கொண்டிருந்த பல கேள்விகளுக்கான பதில் இந்தத் தொடர் தந்திருக்கிறது! ஓபனிங் தொடர்ந்து சொதப்புகிறது! விஜயும், தவானும் நம்பிக்கையூட்டுகின்றனர். காம்பிர் பேக் அப்பில் இருக்கிறார். டிராவிட் ரிடயர்டு. புஜாரா இருக்கிறார். ஆரம்ப கட்டத்தில், டிராவிட் அளவிற்கு வருமா என்ற சந்தேகத்திற்கு, ஏறக்குறைய அவருடைய பாணியிலேயே ஆட்டத்தை வெளிப்படுத்தி சந்தேகத்தை நிவர்த்தி செய்திருக்கிறார்! லக்ஸ்மண் ரிடயர்டு. கோலி இருக்கிறார். இந்தியாவின் பலமான ஸ்பின் எடுபடவில்லை! அஸ்வின், ஓஜா மட்டுமல்ல, ஜடேஜா கூட ஸ்பெஷலிஸ்ட் ஸ்பின்னர் அளவிலேயே பந்து வீசினார்! புவனேஷ்குமார், இஷாந்தும் பங்களிப்பை நன்றாகவேச் செய்தனர்! இது தென் ஆப்பிரிக்காவில் பந்துவீச்சிற்கு 3 மித வேகப் பந்துவீச்சு, அஸ்வின், ஜடேஜா என்ற கூட்டணிக்கு அடிப்படையாக அமையலாம்!
தற்போதைய ஒரே யோசனை, இந்த பதில்கள் தற்காலிகமா அல்லது நிரந்தரமா என்பது மட்டுமே! ரகானே பெரிய அளவு சோபிக்காவிட்டாலும், ஒரு போட்டியை வைத்து முடிவு செய்துவிடமுடியாது! அணியின் செயல்களை வைத்துப் பார்க்கும் பொழுது, ஏறக்குறைய சச்சினின் இடத்திற்கு அவரைத் தயார் செய்வதாகவே தோன்றுகிறது! தென் ஆப்பிரிக்காவிலும் நல்லதொரு ஆட்டத்தை இந்திய அணி வெளிப்படுத்துமாயின், ஆஸி, இங்கிலாந்திற்கெதிரான தோல்விகள் அணியின் ட்ராசிஷன் பீரியட் என எடுத்துக் கொள்ளலாம்!
புதுமுகங்களான தவானும், புவனேஷ்குமாரும் மட்டுமல்ல, திறமையிருந்தும் பல முறை சோபிக்காத முரளி விஜய் கூட ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றனர்! தமிழ்நாட்டின் அஸ்வின், தொடரில் அதிக விக்கட்டுகளை எடுத்தாரென்றால், விஜய் அதிக ரன்களை எடுத்திருக்கிறார்! தவான், விஜய், ஜடேஜாவின் ஆட்டம் டெஸ்ட்டிற்கு மட்டுமல்ல, ஒரு நாள் போட்டிகளிலும் அவர்களுக்கான வாய்ப்பினை ஏற்படுத்தக் கூடும்! இது புஜாராவிற்கும் பொருந்தும்!
4 போட்டிகளில், அனைத்திலும் டாசில் தோற்றாலும், ஒரே ஒரு முறைதான் முதலில் இந்தியா பேட்டிங் செய்திருக்கிறது! அதிலும் இன்னிங்ஸ் வெற்றி! மற்ற போட்டிகளிலும் பெரிய வெற்றிகள்! ஏறக்குறைய எல்லா இன்னிங்சிலுமே இந்தியாவின் கையே ஓங்கி இருந்தது!
ஆஸி அணிக்கோ இது போதாத கால கட்டம்! திடிரென்று பார்க்கும் பொழுது ஸ்டார், சிடில் எல்லாம் ஆல்ரவுண்டர்கள் போல் தோன்றூகிறது! ஹஸ்ஸியே திரும்ப வந்தால் வரவேற்போம் என கோச் பேட்டி கொடுக்கும் அளவிற்கு நிலைமை மோசமாக இருப்பது கண்கூடு! கோவன், ஹியூக்ஸ் என நல்ல ஆட்டக்காரர்கள் இருந்தும் அனுபவமின்மை அணியை ரொம்பவே ஆட்டிவிட்டது! மிக மோசமான தோல்வி என்பதைத் தாண்டி, இதை மாற்ற அடுத்து செய்யவேண்டியது என்ன என்பதே அணியினருக்கு புரியவில்லை! உலகையே திரும்பிப் பார்க்க வைத்த வார்னேயைக் கொடுத்த ஒரு அணியால், நல்ல ஸ்பின்னரைக் கொடுக்க முடியவில்லை! மெக்ராத், ப்ரெட்லீ போன்ற கன்சிஸ்டண்ட் வேகப்பந்து வீச்சாளர்களை அவர்களால் உருவாக்க முடியவில்லை! ஜாம்பவான்கள் செல்லல்ச் செல்ல சிறுது சிறிதாக ஏற்பட்ட வெற்றிடம் , தற்பொழுது அணிக்கு ப்ரு பெரும் வெற்று வெளியையே ஏற்படுத்தியிருக்கிறது!
ஒரு கட்டத்தில் இளம் வீரர்கள் வேண்டும் என்பதற்காக கேடிச், கில்கிறீஸ்ட் முதற்கொண்டு பலரையும் ஃபார்மில் இருக்கும் போதே தூக்கிய அணி இப்பொழுது தத்தளித்துக் கொண்டிருக்கிறது! ஹாஸ்ஸியோ இதைத் தெரிந்துகொண்டு, அவர்கள் தூக்கும் முன்பே தான் ரிடயர் ஆகி விட்டதாக்ச் சொல்கிறார்! மார்ஸ், கவாஜா, ஹென்ரிக்ஸ், வோக்ஸ், பெய்லி, என ஒரு நாள் போட்டிகளில் சிலர் நம்பிக்கை ஏற்படுத்தினாலும், அணி புரிந்து கொள்ள வேண்டியது ஒன்றுதான்! பழைய, எல்லாப் போட்டிகளிலும், எப்பொழுதும் கோலோச்சுகின்ற ஆஸி அணியை உருவாக்க அவர்கள் போக வேண்டிய தூரம் மிக அதிகம் அல்லது இனி அவர்களால் உருவாக்க முடியாது என்பதே!
அதே மென்புன்னகையுடன், பழிவாங்குதல் என்பதெல்லாம் தேவையற்ற வார்த்தைகள் எனப் புறந்தள்ளுகிறார் தோனி, தோனியின் பல முடிவுகளில் விமர்சனங்கள் உண்டு என்றாலும், வெற்றியையும், தோல்வியையும் ஏறக்குறைய சமமாக உள்வாங்கிக் கொள்ளக்கூடிய பாணியை பாராட்டுவதா அல்லது கேள்வியெழுப்புவதா என்று நம்மை சற்று திகைக்கவே வைக்கிறார்! எப்படியிருந்தாலும் அணியின் கேப்டனாக அவர் சாதித்துக் கொடுத்திருக்கும் பல வெற்றிகளுக்கு வாழ்த்துக்கள்!
பி.கு.
2011 ஐபிஎல்லுக்கு முன்பு இந்திய அணி உலகக் கோப்பையை வென்றது! இப்பொழுது ஆஸிக்கெதிரான தொடரில் அவர்களை வொயிட்வாஸ் செய்துள்ளது! இந்த இரு பெரும் வெற்றிகளை விடவே மகிழவான செய்தியாக இருக்ககூடிய ஒன்றும் இருக்கத்தான் செய்கிறது! அது, இந்த ஐபிஎல் லில் சென்னை போட்டிகளில் மட்டும் இலங்கை வீரர்கள் விளையாடப் போவதில்லை என்ற செய்தியே! சென்னைப் போட்டிகளில் மட்டும்தானா என்ற ஏக்கம் இருந்தாலும், இந்த முடிவும் மகிழ்ச்சியூட்டுவதாகத்தான் இருக்கிறது! விளையாட்டினில், அரசியல் வேண்டாம் என்பவர்களுக்கு ஒன்றே ஒன்று மட்டும்! முதலில் அரசியலையே விளையாட்டாக எடுத்துக் கொள்பவர்களை தட்டிக் கேட்டுவிட்டு வாருங்கள்!
பிரிவுகள்:கிரிக்கெட்
கிரிக்கெட்
பின்னூட்டங்கள் (0)
Trackbacks (0)
பின்னூட்டமொன்றை இடுக
Trackback